வணக்கம் குழந்தைகளே!

ஒரு மாதம் கழித்து உங்க எல்லாரையும் கதை கதையாம் காரணமாம் பகுதியில் சந்திப்பதில் ரொம்ப சந்தோஷம் .

எல்லாரும் நல்ல ஆரோக்கியத்தோடும்  உற்சாகமா இருக்கீங்கன்னு நம்புறோம்.

இப்போ இந்த வார கதை கதையாம் காரணமாம் பகுதிக்கு போகலாமா?

இந்த மாதம் கொஞ்சம் வித்தியாசமா ஒரு விஷயத்தை பார்க்க போறோம்!

ஒவ்வொரு மாசமும் நம்ம ஊர் பெயர்களை பற்றியும் அதுக்கு பின்னாடி இருக்கிற கதைகளை பத்தியும் பாத்துட்டு வந்தோம். இப்ப அதுல இருந்து கொஞ்சம் விலகி நம்ம   ஊர்ல இருக்கிற நீர் நிலைகள் பற்றியும் அதோட பேர்கள் பற்றியும்  தெரிஞ்சுக்க போறோம்.

முதல்ல நீர்நிலைகள் அப்படின்னா என்னன்னு தானே கேக்குறீங்க?!

நீர்நிலைகள் அப்படின்னா தண்ணீரை நாம சேமிச்சு  வைக்கிற  இடம்ன்னு  பொருள். பொதுவாகவே நமது தமிழ் மொழியில நீர்நிலைகளை, குளம் குட்டை ஆறு ஓடம்நதி ஏரி இப்படி பல பெயர்களால் வழங்கப்படுது. இதுல ஒவ்வொரு  பெயருக்கும் ஊர் பெயரை போலவே ஒவ்வொரு அர்த்தங்கள் இருக்கு. அதெல்லாம்  என்னென்ன அர்த்தம் .. ஒவ்வொரு நீர்நிலைகளுக்கும்  என்னென்ன வித்தியாசம் என்பதை இந்த பகுதியில் பார்க்கலாம்

பொதுவா நம்ம ஊர்ல  அதிகமா வழக்கத்தில் இருக்கிற நீர்நிலைகளை பற்றி வரிசையா தெரிஞ்சுக்கலாம்

முதல்ல நாம பார்க்க போறது ஆறுகள்

ஆறுகள் அப்படின்னா இயற்கையான நீரோட்டத்தை கொண்ட ஒரு நீர்நிலைன்னு அர்த்தம்.  பொதுவா ஒரு ஆறு எந்த இடத்திலிருந்து வேணாலும் தொடங்கலாம் தொடங்கிய இடத்தில் இருந்து பல பல பிரிவுகளாகப் பிரியலாம். இப்படி ஏதோ ஒரு இடத்தில் தொடங்கி ஏதோ ஒரு இடத்தில் முடிகிற  ஆறுகள் பல்லாயிரக்கணக்கான மக்களும் விலங்கினங்களும் பயிர்களும் செழிச்சு வளர முதல் முக்கிய காரணமா இருக்கு. தமிழ்நாட்டுல மிகவும் புகழ்பெற்ற ஆறுகள் நிறைய உண்டு.

ஸ்ரீரங்கம் காவேரி ஆறு..

திருநெல்வேலில தாமிரபரணி ஆறு

மதுரைல வைகை ஆறு..

காஞ்சீபுரத்துல பாலாறு..

கொள்ளிட ஆறு…

இப்படி பல ஆறுகள் நமக்கு ரொம்ப பிடிச்ச ஊர்கள் செழித்து வளர பெரிய காரணிகளாக இருக்கு!

அடுத்து நாம பார்க்க போறது ஏரி.

ஏரிகள் பொதுவா இரண்டு வகைப்படும் ஆறுகளைப் போல இயற்கையான நீரோட்டமாக அமைந்தது ஒன்னு. இன்னொன்னு  மனிதர்களுடைய தேவைக்காக உருவாக்கப்பட்ட செயற்கையான நீர்த்தேக்கம் கொண்ட ஏரிகள். ஏரிகளை உருவாக்க முதல் காரணமா வேளாண்மை இருக்கு. அதாவது ஏர் போட்டியா வயல் வேலைகளுக்கு நீர் பாய்ச்ச வேண்டி செயற்கையாக தேவைப்படும் இடத்தில தேக்கி வைப்பதால இதற்கு ஏரிகள் அப்படின்னு பெயர் வந்திருக்கலாம் அப்படின்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்லுறாங்க. இன்னும் சில எரிகள்ல மின்சார ஆற்றல் உருவாக்கவும் பயன்படுத்துறாங்க. நம்ம தமிழகத்துல இருக்கிற பிரபலமான ஏரிகள்ன்னா வீராணம் ஏரி, செங்கல்பட்டுல கொளவா ஏரி, சென்னைல செம்பரப்பாக்கம் ஏரி இப்படி சொல்லிட்டே போகலாம்.

அடுத்து நாம பார்க்க போறது ஊருணி.

ஊருணி என்கிற தமிழ் வார்த்தையை பிரிச்சு சொன்னா ஊர் + உண்ணுதல் அப்படின்னு வரும். அதாவது ஊர் மக்கள் தங்களுடைய அன்றாட தேவைகளுக்காக குடிதண்ணீருக்காக புழங்கும் இடம் என்று அர்த்தப்படும். ஊருணி அப்படிங்கற இந்த பெயரை வைத்து நிறைய ஊர்களும் தமிழகத்தில் இருக்கு. குறிப்பா பேராவூரணி அப்படிங்கற ஒரு ஊர சொல்லலாம்.

அடுத்து நாம பார்க்க போறது குளம்! குளம் அப்படிங்கறது  ஊரார் குளிக்க பழங்க பயன்படுத்திய ஒரு தேக்கி வைக்கப்பட்ட நீர்நிலை. குளம் அப்படின்னு நம்ம பயன்படுத்தும் போது கூடவே நாம பயன்படுத்துற இன்னொரு ஒரு வார்த்தை குட்டை. குட்டை இயற்கையாக தேங்கிய குளத்து நீர் நிலை தான் குட்டை.  இதுல பெரும்பாலும் விலங்கினங்களை குளிப்பாட்ட பயன்படுத்துவாங்க. நம்ம முன்னோர்கள் எவ்வளவு சுகாதாரமா அந்த காலத்துலயே குடிக்க ஒரு நீர்நிலை, புழங்க ஒரு நீர்நிலை, விலங்கினங்களுக்கு ஓர் நீர்நிலைன்னு வகுத்து வெச்சுருக்காங்கன்னு யோசிச்சா பிரமிப்பா இருக்குல்ல குட்டீஸ்.

அடுத்து நாம பார்க்க போறது கிணறு .

இந்த கிணறு அப்படிங்கறது மிகமிக அதிகமாக வழக்கத்தில் இருக்கிற ஒரு நீர்நிலை வட்டமான வடிவத்துல ஆழமா பூமிக்கு அடியில் இருந்து தேக்கி வைக்கப்படும் நீர் நிலை தான் கிணறு . இந்தக் கிணறுலேயே பல வகைகள் இருக்கு. உறைகிணறுல  சுடுமணலால் கட்டப்பட்ட கிணறு உறைகிணறு.  இதுவே மக்கள் ஏறி இறங்க வசதியா படிகள் வெச்ச கிணறு நடைகிணறு. கிணறோட நெருங்கின தொடர்புடைய மற்றோரு நீர்நிலை  கேணி . கேணிக்கும் கிணற்றுக்கும்  ஒரு சின்ன வித்தியாசம் தான் . கேணி சதுர வடிவத்தில் இருக்கும். பொதுவா ஆலயங்கள் பக்கத்துல அமைந்த கேணிகள் கிணறை விட அகலத்திலும் ஆழத்திலும் ரொம்பவே பெரிதாக அமைந்திருக்கும். பெரும் கிணறு அப்படின்னும் கேணிய சொல்லுவாங்க.

அடுத்து நாம பார்க்க போறது தடாகம் தடாகம் அப்படிங்கிறது மலர்களால் நிரம்பி வழிந்த ஒரு அழகான இயற்கையான நீர் தேக்க நிலை . ஆங்கிலத்துல ‘Pond’ ன்னு சொல்வாங்க. நம்ம சங்கத்தமிழ்ல இதை மலர் தடாகம் அப்படின்னு சொல்வாங்க சங்கத்தமிழ்.. மலர் அப்படின்னு சொல்லும் போதே இன்னொரு ஒரு நீர்நிலையை ஞாபகம் வருது. அதற்கு பேர் பொய்கை. பொய்கை அப்படினா இயற்கையாகவே உருவான ஊற்று தண்ணீர் உடைய நீரோட்டம் அப்படின்னு பொருள்.

ஊற்று தண்ணீர் அப்படின்னா, நிலத்தடியில் இருந்து ஊரும் நீர். நம்ம ஊர்ல மட்டும் பல வகையான ஊற்று நீர்நிலைகள் இருக்கு. அதுல முக்கியமானது சுனைநீர்.  மலைப்பகுதிக்கு பக்கத்திலிருந்து ஊற்றெடுக்கிறது சுனைநீர். ஆறுக்கு பக்கத்திலிருந்து ஊற்றெடுக்கிறது ஓடை. ஆற்றுக்கு ஆழமான இடம் மடு. மலைப்பாதை வழியா கொட்டுகிற நீர், அருவி.

அப்பப்பா இவ்வளவு இருக்கான்னு தானே யோசிக்கறீங்க. எனக்கும் அதே யோசனை தான். இது எல்லாத்துக்கும் மேல, எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு நீர்நிலை இருக்கு. அது தான் அகழி . அந்த காலத்துல மன்னர்கள் தங்களோட கோட்டையை பாதுகாக்கறதுக்காக அரண்மனையை சுத்தி ஒரு நீரை தேக்கி அதுக்குள்ள முதலைகளை வளர்த்து வெச்சிருப்பாங்க. யாரவது எதிரி தெரியாம வந்தாங்க, அன்னைக்கு முதலைக்கு செம வேட்டை தான். பூமியை அகழ்ந்து அதாவது குடைந்து நீரை தேக்கி வெச்சதால அகழின்னு பேர் வந்துச்சாம். இணைக்கும் இந்த அகழிகளை தஞ்சாவூர் பெரிய கோயில், தாராபுரத்து கோயில்ல பாக்கலாம்.

நம்ம முன்னோர்கள் எவ்வளவு பெரிய ஜீனியஸா இருந்திருக்காங்க இல்ல குட்டிஸ்?! சரி அடுத்த மாதம் இதே மாதிரி ஓவர் புது கதையோடு உங்கள சந்திக்கறேன். அது வரைக்கும் சமத்தா உற்சாகமா ஆரோக்கியமா இருங்களே பூஞ்சிட்டுகளே!   

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments