வங்கி – Bank

வணக்கம் குழந்தைகளே,

இன்னைக்கு நாம வங்கி அலுவலர்களைப் பற்றி பேசுவோமா ?

நீங்க எப்போதாவது வங்கிக்கு பெரியவர்களுடன் போயிருக்கீங்களா ? வங்கி என்பது உங்கள் பார்வையில் என்ன ? வங்கியில் வேலை பார்ப்பவர்கள் நமக்கு எவ்வாறெல்லாம் உதவி புரிகிறார்கள்?
யோசிச்சி கமெண்ட்ல சொல்லுங்க.

நான் சந்தித்த வங்கி அலுவலர்களைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நான் பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் படிக்க கல்விக் கடன் வாங்குவதற்காக வங்கிக்குச் சென்றிருந்தேன். அங்கிருந்த வங்கி மேலாளர் என்னுடைய மதிப்பெண்களையெல்லாம் பார்த்து அரசு கல்லூரி கிடைக்கும் அளவுக்கு படித்ததற்காக பாராட்டினார். பின்பு கடன் விண்ணப்பம் எழுதுவதிலிருந்து ஒவ்வொரு வருடமும் மதிப்பெண்களை காட்டிக் காட்டி அந்தந்த வருட கட்டணத்தை கடனாக பெறும்போதும் தொடர்ந்து ஊக்கம் தந்து வேலைக்கு சென்று கடனை திருப்பி அடைக்கும் வரை மேலாளர்கள் மாறினாலும் எல்லோரும் நல்ல வழிகாட்டுதலுடன் நடந்து கொண்டனர். கல்விக் கடன் கொடுக்கும் பொழுது வங்கி வழிமுறைகளோடு சேர்த்து நல்ல அறிவுரைகளையும் வழங்கிய அலுவலர்கள் அப்படியே மனதில் இன்றும் இருக்கிறார்கள்.

Courtesy – Internet

வேலைக்குச் சென்ற பின்பு வங்கிக்கு செல்லும்போது நல்ல சேமிப்பு திட்டங்களை எடுத்துச் சொல்லி எதிர்காலத்திற்கும் வழிகாட்டினார்கள். பின்பு இணைய வழி வங்கி பயன்பாட்டிற்கு விண்ணப்பிக்கச் சொல்லி எனக்கான வங்கி செல்லும் அலைச்சல்கள் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது.

வங்கிகளில் மாற்றுத் திறனாளிக்கு தனி வரிசை கொடுத்து அவர்களை நீண்ட நேரம் காக்க விடாமல் அவர்களைப் பற்றியும் நினைத்து செயலாற்றுவது எனக்கு மிகவும் பிடித்த விஷயம்.

படிப்பு கடனுக்குப் பின்பு வீட்டுக் கடன் கொடுத்து சொந்த வீடு கட்டும் வாய்ப்பையும் நான் வங்கி சேவை மூலம் பெற்று என் வாழ்க்கை தரத்தை உயர்த்த முடிந்தது. பல முறை நகைக் கடன் வாங்கியிருக்கிறேன். முதல் தலைமுறை பட்டதாரிகளின் முன்னேற்றத்தில் வங்கிகளின் பங்கு அளப்பரியது. இவ்வளவு கடன்களையும் வெளியில் நம்மை நம்பி கொடுப்பது கடினம், அப்படி கிடைத்தாலும் வட்டி அதிகமாக இருக்கும். கடன் பெறுவதிலும் வட்டி கட்டுவதிலும் திருப்பி கொடுப்பதிலும் பல மன உளைச்சல்களை சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் வங்கியின் மூலம் பெறும்போது நிறைய நம்பிக்கை மற்றும் சுலபமாகி விட்டது.

வங்கி அலுவலர்கள் வரிசையில் நின்று அல்லது டோக்கன் கொடுத்து சேவையை பெற சொல்லும்போது அதை பின்பற்றுவது நம் கடமை. எல்லோருக்கும் ஏதேனும் அவசரம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. வங்கிகளுக்கு செல்லும்போது நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தால் எல்லோரையும் சற்று கவனியுங்கள். நிறைய வாழ்க்கைப் பாடங்கள் கிடைக்கும். வயதான பாட்டி பென்ஷன் பணம் வாங்க மாதம்தோறும் வந்தாலும் ஒவ்வொரு முறையும் வங்கி அலுவலர் புதிதாக சொல்லி கொடுக்க வேண்டியிருக்கும். புத்தகத்தில் வரவு வைத்து பணம் வந்து விட்டது பாட்டி என்று உறவு முறை சொல்லி பாட்டிக்கு நம்பிக்கை கொடுத்து கொண்டிருப்பார் அலுவலர். கண்களில் பதட்டத்தோடும் ஆர்வத்தோடும் சிறு தொழில் தொடங்க கடன் கேட்டு விண்ணப்பிக்க வந்தவர்களுக்கு என்ன சான்றிதழ்கள் எல்லாம் வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கும் அலுவலர்கள் இருப்பார்கள். நகை அடகு வைக்க வந்திருப்பவர்களுக்கு 6 மாதம் வைத்தால் எள்ளளவு கிடைக்கும், ஒரு வருடம் வைத்தால் எவ்வளவு கிடைக்கும், எவ்வளவு வட்டி என்று விளக்கி கொண்டிருப்பார் ஒரு அலுவலர். ஒரு முறை நான் பதட்டத்தோடு ஒரு அவசர தேவைக்காக அடகு வைத்து பணம் பெற சென்றிருந்த பொழுது நகை பரிசோதிக்கும் அலுவலர் விடுமுறை. எனது தேவை புரிந்த அந்த வங்கி கிளை மேலாளர் பக்கத்து கிளை நகை பரிசோதிக்கும் அலுவலரை போன் செய்து வரவழைத்து அன்றே எனக்கு பணம் கிடைக்குமாறு செய்தது எனக்கு மாபெரும் உதவியாக இருந்தது. அந்த வங்கி மேலாளரின் மனிதாபிமானம் எனக்கு மிகவும் பிடித்தது. அன்று மிகுந்த நன்றியை உணர்ந்தேன்.

அரசின் திட்டங்கள் பல மக்களை சென்றடைவதில் வங்கி, பெரும் பங்கு வகிக்கிறது. சில சமயங்களில் அந்த திட்டங்களைப் பற்றி செல் போன் அழைப்பு மூலமாகவோ அல்லது ஒலி பெருக்கி மூலமாகவோ மக்களுக்கு சொல்லும் கடமையும் வங்கி அலுவலர்களுடையது.
கடனை திருப்பி செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் அதை தொடர்ந்து சம்மந்தப்பட்டவர்களிடம் பேசி திருப்பி வாங்கும் பொறுப்பும் வங்கி அலுவலர்களுடையது.
புதிய திட்டங்கள், முயற்சிகள் வரும் பொழுது அவர்களுக்கு பயிற்சி வகுப்புகளும் இருக்கும்.

நம் எல்லோருடைய வாழ்வும் எல்லோருடனும் பின்னி பிணைந்திருக்கிறது குழைந்தைகளே. எங்கு சென்றாலும் கவனியுங்கள். நீங்கள் அந்த மாதிரி பொறுப்புகளுக்கு வரும் உத்வேகம் கிடைக்கலாம். அது நல்லதொரு அனுபவமாக இருக்கலாம்.

– இசை சுரேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *