மகானா லட்டு

  “பாட்டி, எனக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்களேன்” என்று கேட்ட பேரன் ஸ்கந்தாவிடம்,
   “உனக்கு என்ன வேணும் சொல்லு, செஞ்சு தர்றேன்.” என்றாள் துளசிப் பாட்டி.
      “எனக்கு ஏதாவது இனிப்பாச் சாப்பிடணும் போல இருக்கு பாட்டி; அன்னிக்கு ஒரு லட்டு செஞ்சு கொடுத்தீங்களே, அதைச் செஞ்சு தர்றீங்களா பாட்டி?”
       “சரிடா தங்கம், இதோ அஞ்சு நிமிஷத்துல செஞ்சு தர்றேன்.” என்று சொன்ன துளசி, உடனே மடமடவென்று செய்ய ஆரம்பித்தாள்.
இதோ உங்களுக்கும் அந்த ரெசிபியை சொல்றேன்; கேட்டுக்கோங்க.”

அவல், பொரிகடலை, மகானா லட்டு:

தேவையானவை:
அவல் – 1 கப்
மகானா – 1 கப்
பொரிகடலை -1கப்
நாட்டுச் சர்க்கரை – 1 கப்
நெய் – 5 மேசைக் கரண்டி
ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி

செய்முறை:
      முதலில் வாணலியில் ஒரு மேசைக் கரண்டி நெய்யை விட்டு அடுப்பில் வைக்கவும். சூடானதும் முந்திரிப் பருப்பைப் போட்டு வறுத்து, தனியே எடுத்து வைக்கவும். அதிலேயே  மகானா, அவலைப் போட்டுத் தனித்தனியே பொரிந்து வரும் வரை வறுத்து, அடுப்பை அணைத்து விடவும். அதிலேயே பொரிகடலையைப் போட்டுக் கிளறி விடவும்.  ஆறியதும் மிக்ஸியில் போட்டுப் பவுடராகத் திரிக்கவும்.
      இதனுடன் நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய் தூள் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்தால் எல்லாம் ஒன்று போலக் கலந்து விடும். இப்போது மீதி இருக்கும் நெய்யை நன்கு சூடாக்கி, இந்தக் கலவையில் விட்டுக் கலந்து உருண்டைகள் பிடித்தால் சுவையான அவல், பொரிகடலை, மகானா லட்டு தயார்.

பின்குறிப்பு:

  • விரும்பினால் இதனுடன் பால் பவுடர் இரண்டு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம். நல்ல மணம் தரும்.
  • குளுக்கோஸ் பவுடர் 2 ஸ்பூன் சேர்த்துக் கொண்டால், வாயில் போட்டவுடன் கரையும்.
  • முந்திரிப் பருப்புடன் டூட்டி புரூட்டி, பாதாம் பருப்பு….இப்படி நம் விருப்பம் போல எதையும் சேர்த்துக் கொள்ளலாம்.

செய்தவுடன் துளசி இரண்டு லட்டை எடுத்து, ஸ்கந்தாவிடம் கொடுத்துச் சாப்பிடச் சொன்னாள்.
இரண்டையும் கொடுத்த வேகத்தில் சாப்பிட்டு முடித்தவன், “பாட்டி, இன்னும் இரண்டு லட்டு கொடுங்க பாட்டி” என்று கேட்டு வாங்கிச் சாப்பிட்டான்.
என்ன? நீங்களும் செய்து உங்கள் வீட்டு வாண்டுகளுக்குக் கொடுத்து அவர்கள் இந்தக் கோடை விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.

– ஆர். பிருந்தா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *