மல்லிகைத் தோட்டத்தின் மர்மம் – 4

நிலாப்பாட்டியின் வீடு பூட்டியிருக்க, பூட்டியிருந்த வீட்டின் வாசலில் தன் பேரப் பிள்ளைகளின் செருப்புகள் கிடந்ததைக் கண்ட சொக்கு தாத்தாவும் மீனுப் பாட்டியும் குழந்தைகளைத் தேடி வந்த ஊர் மக்களும் அதிர்ந்தனர்.

“ஐயோ! என் பேத்திக்கும் பேரன்களுக்கும் என்னாச்சுன்னு தெரீலயே? இப்ப அவங்க அப்பா அம்மா வந்து கேட்டா நா என்ன பதில் சொல்வேன். கடவுளே!” என்று கதறினார் மீனுப் பாட்டி.

ஊர்க்காரப் பெண்கள் சிலரும் மீனுப் பாட்டியுடன் சேர்ந்து ஒப்பாரி வைத்தனர்.

சொக்கு தாத்தாவுக்கு பதற்றமாக இருந்தாலும் பாட்டியை அதட்டினார்.

“ஏ! மீனு! ஒப்பாரி வெக்காத! இப்ப என்ன ஆயிடுச்சுன்னு இப்டி அழுவற? குழந்தைங்க செருப்பு இங்க கெடக்கறதால அவங்க இங்கதான் வந்திருக்காங்கன்னு தெரிஞ்சி போச்சில்ல.. அப்றம் என்ன? இங்கதான் குளத்தில இறங்கி வெளாண்டுட்டு இருப்பாங்க..” என்று மனைவிக்கு சமாதானம் கூறுவது போல தனக்கும் கூறிக் கொண்டு அருகிலுள்ள குளத்தை நோக்கி விரைந்தார்.

அவருடன் ஊர்க்காரர்களும் சென்றனர். மீனுப் பாட்டியும் அவர் பின்னாலேயே ஓடினார்.

அங்கே குளத்தில் குழந்தைகள் நால்வரும் குதூகலமாக நீந்தி விளையாடிக் கொண்டிருந்தனர்.

குளக்கரையில் நிலாப்பாட்டி அமர்ந்து கொண்டு அவர்களைக் கண்காணித்தபடி வேர்க்கடலை உறித்துக் கொண்டிருந்தார்.

“வர்ஷா குட்டி, அர்ஜுனு, கிரீஷு! கிஷோரு! என்னப்பா நீங்க? சொல்லாம கொள்ளாம நீங்க ஏன் குளத்துக்கு வந்தீங்க?” என்று கெஞ்சும் குரலில் சற்று கண்டிப்புடனே கேட்டார் சொக்கு தாத்தா.

படம் – அப்பு சிவா

‘ஹை! தாத்தா! வந்துட்டீங்களா? வாங்க! குளத்தில நீச்சலடிக்கலாம் வாங்க!” என்று சிரித்துக் கொண்டே அழைத்தார்கள் குழந்தைகள்.

அதற்குள் நிலாப் பாட்டியின் அருகில் வந்த மீனுப் பாட்டி,

“ஏய் வெண்ணிலா! என் பேரப் புள்ளைங்கள எதுக்குடி இங்க கூட்டிட்டு வந்த?” என்று கோபமாகக் கேட்டு அவரை அடிக்கப் போனார்.

சொக்கு தாத்தாவும் மற்றவர்களும் மீனுப் பாட்டியை தடுத்துவிட்டு நிலாப்பாட்டியை விசாரித்தனர்.

“என்ன வெண்ணிலா இதெல்லாம்? எங்களுக்கு தெரியாம பிள்ளைங்கள எதுக்கு நீ கூட்டிட்டு வந்த? எவ்ளோ பதற்றமா இருந்துச்சு தெரியுமா?” என்று கோபமாகக் கேட்டார் சொக்கு தாத்தா.

“என்ன அண்ணா சொல்றீங்க? நீங்கதானே பிள்ளைங்கள கூட்டிட்டு வந்து எங்க வீட்ல விட்டீங்க?” என்று நிலாப்பாட்டி பதிலளித்தார்.

குளத்திலிருந்து வெளியே வந்த குழந்தைகளும் அதையே சொன்னார்கள்.

“தாத்தா! நீங்கதானே எங்கள கூட்டிட்டு வந்து நிலாப்பாட்டி வீட்டுல விட்டீங்க!” என்று வர்ஷாவும்,

“இன்னிக்கு முழுக்க நிலாப்பாட்டி வீட்டுலயே நாமல்லாம் இருக்க போறோம்ன்னு சொன்னீங்களே!” என்று அர்ஜுனும்,

“நீங்க நிலாப்பாட்டி கூட வௌாண்டுட்டு இருங்க.. நா போயி மீனுப் பாட்டிய எழுப்பி கூட்டிட்டு வரேன்னு சொல்லி எங்கள இங்க விட்டுட்டு போனீங்களே தாத்தா!” என்று கிஷோரும் கூறினார்கள்.

“மீனுப்பாட்டி தூங்கினா லேசில எழுப்ப முடியாதுன்னு வேற சொன்னீங்களே தாத்தா!” என்றான் கிரீஷ் நமுட்டு சிரிப்புடன்.

சொக்குத் தாத்தாவுக்கு ஒன்றும் புரியவில்லை.

“நா எப்ப அப்டில்லாம் சொன்னேன்? நா இப்பதானே தூங்கி எழுந்தேன். எழுந்ததும் உங்கள தேடினா நீங்க என் பக்கத்தில இல்ல.. வீடு முழுக்க தேடினோம். அப்புறம்தான்..” என்று நிறுத்திய சொக்கு தாத்தா,

“இல்ல.. இல்ல.. வெண்ணிலா! நீ எதோ சித்து வேல பண்ணியிருக்க! என்ன பண்ணின? சொல்லு!” என்று வெண்ணிலாவை நோக்கிக் கோபமாகக் கேட்டார்.

இப்போது மீனுப் பாட்டியின் கோபமும் எல்லை கடந்தது.

வெண்ணிலாவை அடிக்கப் போனார்.

“ஏய்! குழந்தைகளுக்கு எதோ மாய மந்திரம் போட்டு உங்க வீட்டுக்கு தூக்கிட்டு வந்துட்டு இப்ப மாட்டிகிட்டதும் என் வீட்டுக்காரர் மேல பழி போடறியா?” என்று கோபமாகக் கேட்டார் மீனுப் பாட்டி.

“ஐயோ! ஏன் இப்டில்லாம் பேசறீங்க? மீனு நீ கூட என்ன நம்ப மாட்டியா?” என்று கண்ணீர் விட்டார் வெண்ணிலா.

அப்போது குளிர்ந்த காற்று வீசத் தொடங்க, குளத்தின் மேற் பரப்பில் பல வகையான வண்ணத்துப் பூச்சிகள் பறந்தன.

குழந்தைகள் எல்லாம் அவற்றை ஆவலாகப் பார்க்க, மற்றவர்கள் அதை ஒரு வித பயத்துடன் பார்த்தனர்.

அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது.

அங்கே ஒரு பெரிய அழகான மயில் பறந்து வந்து குளத்தின் மேற்பரப்பின் அப்படியே அந்தரத்தில் நின்றது.

அந்த மயிலைப் பார்த்ததும் குழந்தைகள் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

அந்த மயில் குழந்தைகளைப் பார்த்து,

“உங்களுக்கு அதிசயம் காட்டறேன்.. என் மேல ஏறிக்கோங்க!” என்று மனிதர்கள் போலப் பேசியது.

அதைக் கேட்ட குழந்தைகள் நால்வரும் அந்த மயில் மீது ஏறப் போக, சொக்கு தாத்தாவும் மீனுப்பாட்டியும் வேண்டாம் எனத் தடுத்தார்கள்.

அதனால் குழந்தைகள் தயங்கினார்கள்.

ஆனால் அந்த மயில் தன் தோகையை விரித்து நான்கு குழந்தைகளையும் அப்படியே தூக்கித் தன் முதுகில் அமர வைத்துக் கொண்டது.

எல்லாரும் பயத்துடன் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த மயில் மெதுவாக எழுந்து பறக்கத் தொடங்கியது.

“ஐயோ! என் பேரப் பிள்ளைங்க!” என்று சொக்கு தாத்தாவும் மீனுப்பாட்டியும் கதற, நிலாப் பாட்டி சட்டென்று முடிவெடுத்து அப்படியே எம்பிக் குதித்து பறக்கத் தொடங்கிய மயிலின் தோகையைப் பற்றிக் கொண்டார்.

மயில் அவரைக் கீழே தள்ளி விட முயன்றது.

ஆனால் நிலாப்பாட்டி தன் பிடியை விடவேயில்லை.

குழந்தைகள் நால்வருடன் நிலாப்பாட்டியையும் சேர்த்துத் தூக்கிக் கொண்டு அந்த மயில் வானில் பறந்து சென்று மறைந்தது.

எல்லாரும் அதை பயத்துடன் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

சொக்குத் தாத்தாவும் மீனுப்பாட்டியும் என்ன செய்வது என்று புரியாமல் அழத் தொடங்கினார்கள்.

– தொடரும்….

– அன்னபூரணி தண்டபாணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *