ஆசிரியர்

வணக்கம் குழந்தைகளே,

நாம இன்னைக்கு ஆசிரியர்கள் பற்றி பேசுவோமா?

எல்லோருக்கும் பிடித்த ஆசிரியர்னு ஒருத்தர் கண்டிப்பா இருப்பாங்க. எல்லோர் வாழ்க்கையிலயும் ஒரு ஆசிரியர் அல்லது அவரது ஏதாவது ஒரு செயல் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

என்னோட வாழ்க்கையிலயும் ஆசிரியர்களால் நிறைய நல்லது நடந்துருக்கு. இப்போ பள்ளிக்கூடம் ஆரம்பித்து புத்தகங்களுக்கு அட்டை போட்டிருப்பீர்களே குழந்தைகளே. நான் பள்ளி படிக்கும்போது அட்டை வாங்க காசு இல்லாத குழந்தைகளுக்கு எங்கள் ஆசிரியர் காசு கொடுத்து அட்டை வாங்க உதவுவார். பெரிய வகுப்பு வந்த பிறகு காப்பி கலர் அட்டை வாங்க முடியாத குழந்தைகள் செய்தித்தாளில் அட்டை போட்டு வர வேண்டும் என்று செய்தித்தாளை கொடுத்து அனுப்புவார். பாடத்துடன் சேர்த்து சின்ன சின்ன வாழ்க்கை பாடங்களையும் அன்போடு கற்றுத் தருவார். 5ஆம் வகுப்பு வந்த பிறகு உள்ளாடைகளை நீங்களே துவைத்து நல்ல வெயிலில் காய போட்டு சுத்தமாக உடுத்த வேண்டும் என்று கற்று கொடுத்தார். இன்று வாஷிங் மெஷின் வாங்கிய பிறகும், உள்ளாடைகளை நானே கையில் துவைத்து சுத்தமாக பராமரிப்பதை, எங்கள் குடும்பத்தில் உள்ள இளையவர்களுக்கு எங்கள் விளையாட்டு ஆசிரியரை நினைவு கூர்ந்து மகிழ்ச்சியோடு இன்றும் நான் சொல்லிக் கொடுக்கிறேன்.

Courtesy – Internet

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்று கற்று கொடுத்த ஆசிரியரை இன்றும் நான் மகிழ்வாக நினைவு கூர்ந்து குடும்பத்தில் எல்லோருக்கும் பழங்கள் வாங்கி வருவதுண்டு. பழங்கங்களை வெட்டி எல்லோருக்கும் கொடுக்கும்போது என் ஆசிரியர் சொல்லிக் கொடுத்ததை சொல்வதுண்டு. விட்டமின் சத்து , நார் சத்து கிடைக்கும். கேரட் சாப்பிடுவோம் கண்ணுக்கு நல்லது. தேவையான அளவு தண்ணீர் குடிப்போம், சிறுநீர் வந்தால் அடக்க கூடாது, என்று உடல் ஆரோக்கியத்தை கற்று கொடுத்ததிலும் ஆசிரியரிகளின் பங்கு அளப்பரியது.

நேரம் தவறாமல் பள்ளிக்கு வர வேண்டும் என்று கற்றுக்கொடுத்தது இன்றும் வாழ்க்கை பாடமாகி விட்டது. நமது கால தாமதம் மற்றவர்களை பாதிக்கக் கூடாது என்று அன்றே மனதில் பதித்து விட்டனர் ஆசிரியர்கள். என் தமிழ் ஆசிரியர் ஒரு முறை என்னை அழைத்து உன் அம்மா பீடி சுற்றுகிறார், கட்டிட வேலை பார்க்கிறார், வயல் வேலை பார்க்கிறார், மிகவும் பாடுபட்டு உன்னை பள்ளிக்கு அனுப்புகிறார். நீயும் நல்லா படித்து அவர்களுக்கு பெருமை சேர்க்கிறாய். இருந்தாலும் நீ வேலைக்கு போன பின்பு உன் அம்மாவை நல்லா பார்த்துக்கணும் என்று சொன்னது இன்று வரை மறக்க முடியவில்லை. என் அம்மா இன்றும் தன்னிறைவோடு வாழ்ந்தாலும் என்னால் முடிந்ததை செய்து நல்லா பார்த்துக்கொள்ளும் போதெல்லம் தமிழ் ஆசிரியர் கண் முன்னே வந்து போகிறார்.

பொறியியல் என்றொரு படிப்பு இருப்பதை என் ஆசிரியர்கள் மூலம்தான் நான் தெரிந்து கொண்டேன், எப்படியாவது நல்லா படித்து அரசு பொறியியல் கல்லூரியில் சேர்ந்து விடு. நீ என்னை விட அதிகமா சம்பாதிச்சா அதான் எனக்கு பெருமை என்று சொன்ன ஆசிரியரை நினைக்கும்பொழுதெல்லாம் உடல் சிலிர்க்கும். ஆசிரியர்களாலும் பெற்றோர்களாலும் மட்டுமே இப்படி நம்மை ஆசிர்வதிக்கவும் பெருமை கொள்ளவும் முடியும்.

கல்லூரி தேர்ந்தெடுக்க சென்னை வரை கூடவே வந்த எனது typewriting சென்டர் ஆசிரியரை நான் வாழ்நாள் முழுதும் நினைத்து நினைத்து மகிழும்படி எனக்கு நல் வழி காட்டினார். அரசுக் கல்லூரியில் சேர்ந்தாலும் வெளியில் கடன் வாங்குவதை விட வங்கியில் கடன் வாங்குவது நல்லது என்று வழிநடத்தியதிலும் ஆசிரியர்களின் பங்கு மிக பெரியது. நாங்கள் பள்ளியை விட்டு செ ன்ற பின்பும் எங்களை எடுத்துகாட்டாக பேசி பேசி மகிழ்ந்த ஆசிரியர்களை நாங்கள் ஊருக்கு போகும்போதெல்லாம் எங்கள் பள்ளி மாணவர்கள் சொல்வதுண்டு.

பள்ளி இடைநிற்றலை தவிர்க்க எங்கள் ஆசிரியர்கள் பட்ட பாடு, வீடு வீடாக சென்று பேசியது எல்லாம் என்னைப் போன்ற எத்தனையோ 90’ஸ் கிட்ஸ் வாழ்வில் இன்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று கடல் கடந்து இருந்து வரும் வேலைகளை நம் நாட்டிலே சம்பாதித்து நம் நாட்டு வரி பணத்தில் சேர்த்து எங்கள் வீட்டையும் நாட்டையும் முன்னேற்ற உதவி கொண்டிருக்கிறது. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

என்று திரும்ப பிறந்த ஊருக்கும் படித்த பள்ளிக்கும் சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் எதோ ஒரு வகையில் உதவி கொண்டே வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றுவதையும் ஆசிரியர்களிடம் இருந்தே கற்றுக்கொண்டோம்.

உங்கள் வாழ்க்கையிலும் ஆசிரியர்களின் நல் வழி காட்டுதல் கிடைத்து பல மடங்கு மகிழ்வுடன் வாழ வாழ்த்துக்கள் குழந்தைகளே.

– இசை சுரேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *