கிறுக்கர் – 15

ஓவியத்தொடர்-15 – குழந்தை ஓவியம்

ஹாய் குட்டீஸ்…

யார் யாரெல்லாம் சின்னப் பிள்ளையில் வீட்டு சுவரெல்லாம் கிறுக்கி திட்டு வாங்கியிருக்கீங்க? எல்லோருமேவா? ஆமாம் குழந்தைகள் கிறுக்காத வீடு அழகாவே இருக்காதுதான்.

குழந்தைகள் முதலில் கற்றுக்கொள்வது வரையதான் என்பது ஆச்சரியமா இருக்கா? கவனிச்சுப் பாருங்களேன். சாப்பிடுவது, நடப்பது, சின்னச் சின்ன வார்த்தைகள் பேசுவது மாதிரியான அடிப்படை விஷயங்கள் தவிர குழந்தையின் முதல் படிப்பு ஓவியம்தான். கையில் கிடைக்கும் கரிக்கட்டை, பென்சில், ஸ்கெட்ச் எதுவானாலும், சாதாரணமா கீழே சிந்திக் கிடக்கும் தண்ணீர் கூட விடாமல் ஏதாவது வரைஞ்சுட்டே இருப்பாங்க. நாமதான் அதை கிறுக்கல் அப்படின்னு சொல்றோம்.

உண்மையில் தான் சொல்ல நினைப்பதை, பார்த்ததை பிறருக்கு சொல்லும் ஊடகமாகத்தான் ஓவியத்தை குழந்தைகள் தேர்ந்தெடுக்கிறாங்க. அதனால் அவர்கள் வரைந்த படங்களை அப்படியே ஃபோட்டோ எடுத்து வையுங்க.

அதில் எதுவுமே புரியாத மாதிரிதான் இருக்கும். ஆனால் அவர்களின் கற்பனை எந்த அளவுக்கு இருக்கு, கவனிக்கும் திறன் என்ன என்பதெல்லாம் அந்த ஓவியங்களில் இருந்து தெரிஞ்சுக்கலாம்.

ஒவ்வொரு குழந்தையும் தனிப்பட்ட உலகை அவர்கள் மனதில் வச்சிருப்பாங்க. ஒருவர் வரையும் யானையும் இன்னொருவர் வரையும் யானையும் ஒரே மாதிரி இருக்காது. மனிதர்களை அவர்கள் வரைவது இன்னும் அழகா இருக்கும்.

ஒரு சமயம் ஒரு பாப்பா ஒரு படத்தை வரைஞ்சு கொண்டு வந்தாங்க. “என்ன பாப்பா, நீ வரைஞ்ச குழந்தைக்கு தலை சீவி சடை போடலையா? இப்படி முடியை பறக்க விட்டுட்டயே!” னு சிரிச்சுகிட்டே சொன்னேன். அந்த பாப்பா முகம் உம்முனு ஆகிடுச்சு. அந்த படத்தை வாங்கிகிட்டு போயிடுச்சு. எனக்கு கஷ்டமா போச்சு. அதை திருத்துதோன்னு நினைச்சேன். ஆனா நடந்ததே வேற!

இந்த மாதிரி மாத்தி கொண்டு வந்தாங்க. என்னன்னு கேட்டேன்.

“மேலே ஃபேன் வரைஞ்சுட்டேன் பாருங்க. அந்த காத்துக்கு முடி பறக்குது” னு சொன்னாங்க. என்ன ஒரு கிரியேட்டிவ் இல்ல?

இப்படித்தான் குழந்தைகள் புதுசு புதுசா யோசிப்பாங்க. வரைய ஆரம்பிக்கும் குழந்தைகள் பொருட்களை கவனிக்க ஆரம்பிப்பார்கள். அவர்களின் மூளை சிந்திக்கும் திறன் அதிகரிக்கும். அதேபோல வரையும்போது கவனத்தை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் உருவாகும்.

குழந்தைகள் வரைவதில் அழகு அழகில்லை என்று எதுவுமே இல்லை. எல்லாமே அழகுதான்.

இன்னும் சொல்லப்போனால் குழந்தைகள் வரைவதில் நமது குடும்ப உறுப்பினர்கள் அதிகம் இருப்பாங்க. அவ்வளவு பாசம். மகிழ்ச்சியான பளிச் வண்ணங்களை பயன்படுத்துவாங்க. சின்னச் சின்ன விஷயங்களை உன்னிப்பாக கவனிப்பாங்க. தங்களை பலசாலியாக வரைவாங்க. அவ்வளவு தன்னம்பிக்கை இருக்கும். வண்ணங்களை தேர்ந்தெடுக்கும் திறன், இயற்கையை கவனிக்கும் ஆற்றல் எல்லாம் வளரும்.

(ஓவியங்கள் உதவி : தேஜஸ்வினி, தனிஷ்கா)

அதனால், சுவரையெல்லாம் கிறுக்க விடலாமா? அது உங்க இஷ்டம். குழந்தைக்கு நல்ல ஓவிய நோட்டு புத்தகம் வாங்கிக் கொடுங்க. பாதுகாப்பான கலர் பென்சில், க்ரேயான்ஸ் வாங்கிக் கொடுங்க. அப்புறம் அவங்க உங்களை தொந்தரவு செய்ய மாட்டாங்க. ஆனா அப்பப்ப பார்த்து பாராட்டுங்க.

சரி நண்பர்களே, பின்னூட்டத்தில் உங்க வீட்டு குட்டீஸ் வரைந்த கிறுக்கல்களை போடுங்க. எல்லோரும் ரசிப்போம்.

– தொடரும்…

– அப்பு சிவா

3 Comments

  1. Avatar

    அருமை அருமை உண்மையே குழந்தைகளின் ஓவியமும் அதற்கு அவர்கள் கொடுக்கும் விளக்கமும் வியப்பாக இருக்கும். அவர்களின் கற்பனைத் திறனை நம்மால் யோசித்து கூட பார்க்க முடியாது. இதைப் படிக்கும் போது நான் பார்த்த ஒரு காணொளி நினைவுக்கு வருகிறது. மதிப்பிற்குரிய பர்வீன் சுல்தானா அவர்கள் ஒரு பள்ளியில் ஓவிய போட்டிக்கு நடுவராக சென்று இருக்கிறார். அப்போது அங்கு வந்த நடந்த சம்பவத்தை பதிவு செய்திருந்தார். ஒரு குழந்தை நிலாவிற்கு சிகப்பு வண்ணம் தீட்டி வைத்திருக்க அந்தக் குழந்தை போட்டியில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட வருத்தத்தில் அமர்ந்திருந்த குழந்தையிடம் சென்று நீ வரைந்த ஓவியம் அழகாக இருக்கிறது ஆனால் பொருத்தமான வண்ணம் தீட்ட வில்லையே நிலா சிகப்பு நிறத்தில் இருக்குமா?” என்று கேட்டிருக்கிறார் அதற்கு அந்த குழந்தை, கோபத்தின் வெளிப்பாடாக நிலா சிவந்து இருப்பதாக விளக்கம் கொடுக்க, அந்தக் குழந்தை அவளுடைய கற்பனையில் சரியாக தான் வண்ணம் தீட்டி வைத்திருக்கிறாள். என்னால் தான் புரிந்து கொள்ள முடியவில்லை போல என்று கூறி இருந்தார்.

  2. Avatar

    ஒருமித்த மனதுடன் எழுதிய ஓவியக்கலை போல உயிர்ப்புள்ள கதை சொல்லியாக மிக நேர்த்தி. மின்விசிறி கற்பனை உத்தி பலே. ஓவியம் வரைய வரைய குழந்தைகளுக்கு கையெழுத்தும் அழகாகும். மனநிறைவு.

  3. Avatar

    என் மகனுக்கு ஓவியங்கள் வரைவதில் அலாதி இன்பம். ஆனால், நரூட்டோ பென் சின் சாங் இவர்களை மட்டுமே வரைவான் அவன் படங்களை வெகுவாக ரசித்தாலும் இயற்கை ஓவியம் வரைவதில்லையே என்ற கவலை உண்டு இதில் அவன் படங்களை இட தெரியவில்லை. ஆனால், உங்கள் எழுத்துருக்களை கண்ட பிறகு அவனுக்கு ஒரு சபாஷ் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. நன்றி சார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *