நூல்: நானும் கதாசிரியரே
ஆசிரியர் : விஷ்ணுபுரம் சரவணன்
பக்கம்: 118
வெளியீடு: இந்து தமிழ் திசை
விலை: ₹124

எல்லோருக்குள்ளும் ஒரு கதைசொல்லி இருக்கத்தான் செய்கிறார். அதை மேலும் மெருகேற்றி தொடர்ந்து பழகுதல் மூலம் எப்படி நல்ல கதாசிரியராக உருவாக முடியும் என்று ஆசிரியர் விளக்குகிறார். கதை உருவாகும் விதம், கதையை சுவாரசியமாக உருவாக்க, கதையின் வகைகள் என்று நிச்சயம் புதிதாகக் கதை எழுதுபவர்கள் வாசிக்க வேண்டிய புத்தகம். ஆசிரியர்கள் இந்நூலை வாசித்து மாணவர்களிடம் இதில் உள்ள கருத்துக்களைச் சொல்லி, கதை எழுதத் தூண்ட வேண்டும். சிறார் கதை எழுதுவது சுலபம் இல்லை. குழந்தைகளின் மனநிலை,மொழி எல்லாம் புரிந்து அவர்களுக்கு ஏற்ற நடையில் கதை சொல்வது பெரிய வேலைதான். அப்படி ஒரு கதை நாம் சொல்லி விட்டால் குழந்தைகளின் உலகில் நாம் ஹீரோவாக இருப்போம். நிறைய முறை படித்து நினைவில் வைக்க வேண்டிய புத்தகம். நானும் சில சிறார் கதை எழுதியிருக்கிறேன். ஆனால் நுட்பம் அறிந்து இனிதான் எழுத வேண்டும். அதற்கு ஆசிரியருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். கட்டுரையாக மட்டுமில்லாமல் வீட்டுப்பாடமும் கொடுக்கிறார். கதை எழுதும் பயிற்சியாக அருமையான புத்தகம் இது. கதைகளின் வழியே கற்பிக்கும் எதுவும் நீண்டகாலம் மனத்தில் தங்கும். இந்தக் கட்டுரைகள் யாவும் இந்து தமிழ் திசையில் வாரா வாரம் வந்து அனைவரின் ஆதரவும் பெற்றது. ஆசிரியரின் வாத்து ராஜா, ஒற்றைச் சிறகு ஓவியா, கயிறு, வானத்துடன் டூ போன்ற கதைகளை வாசித்திருக்கிறேன். விஷ்ணுபுரம் சரவணன் சிறார் எழுத்தாளர் ஆவார்.
– ஜெயா சிங்காரவேலு.