ஹாய் சுட்டீஸ்! எல்லாரும் லீவில ஜாலியா எஞ்சாய் பண்ணினீங்களா? இப்ப ஜூன் மாதம் ஆரம்பிச்சிடுச்சு! ஸ்கூல் திறந்துடும். எல்லாரும் புது கிளாஸுக்கு போக தயாராகிட்டீங்களா? சமத்து பிள்ளைங்க! எப்பவும் போல எல்லாரும் படிப்பில கவனம் செலுத்தணும். படிப்பு மட்டும்தான் நம்ம சேர்த்து வைக்கக் கூடிய அழியாத சொத்து.

சரி! இந்த மாத சுத்தி சுத்தி வந்தீக பகுதியில என்ன தாவரம் பற்றி பார்க்கப் போறோம் தெரியுமா?

மாங்காய்!

யாருக்கெல்லாம் மாங்காய் மற்றும் மாம்பழம் சாப்பிடப் பிடிக்கும்! எனக்கு மாங்காயை விட மாம்பழம் சாப்பிட ரொம்ப பிடிக்கும். மாம்பழ ஜூஸ் மற்றும் மாம்பழ மில்க்ஷேக் குடிக்க ரொம்ப ரொம்பப் பிடிக்கும். உங்களுக்கு மாம்பழத்தை எப்படி சாப்பிடப் பிடிக்கும்னு கமென்ட்ல சொல்லுங்க சுட்டீஸ்!

மாங்காயின் தாவரவியல் பெயர், மாஞ்சிஃபரா இண்டிகா (Mangifera indica). இது அனகார்டியேசீ (Anacardiaceae) குடும்பத்தைச் சேர்ந்தது.

Courtesy – Internet

இந்த அனகார்டியேசீ குடும்பத்தில் நமக்குத் தெரிஞ்ச முக்கியமான இரண்டு தாவரங்களும் இருக்கு சுட்டீஸ்! அது என்னன்னு தெரிஞ்சா உங்களுக்கு மலைப்பா இருக்கும். என்னடா இது? மாங்காய்க்கும் அந்த தாவரங்களுக்கும் எந்த ஒற்றுமையும் இல்லையே; அப்புறம் எப்டி இது எல்லாம் மாங்காய் குடும்ப உறுப்பினர்களா இருக்குன்னு உங்களுக்கு தோணலாம். அது என்னன்னு சொல்லவா?

நம்ம வீட்ல செய்யற பாயசம் சர்க்கரைப் பொங்கல் போன்ற இனிப்பு வகைகளில் தாளிக்கப்படும் முந்திரி, இந்த குடும்பத்தைச் சேர்ந்ததுதான் குழந்தைகளே! முந்திரியின் தாவரவியில் பெயரே, அனகார்டியம் (Anacardium) தான்.

ரெண்டாவது, மிகவும் பிரபலமான பருப்பு வகைகளில் ஒன்றான பிஸ்தா (Pistachio) இந்தக் குடும்பத்தைச் சேர்ந்ததுதான்.

இந்த அனகார்டியேசீ குடும்பத்தில் இன்னும் நிறைய தாவரங்கள் இருக்கு. ஒவ்வொண்ணும் ஒவ்வொரு டைப்புடா ன்னு சொல்ற மாதிரி வேற வேற குணாதிசயங்கள் கொண்ட ஒன்றுக்கொன்று எந்த சம்மந்தமும் இல்லாத தாவரங்கள். சோலைகள், பூங்காக்கள், தோட்டங்களில் அலங்காரமாக வைக்கக் கூடியவை, விஷத்தன்மை கொண்டவை, ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடியவை என பல வகையான குணாதிசயங்கள் கொண்ட தாவரங்கள் இந்தக் குடும்ப உறுப்பினர்களா இருக்கு. ஆச்சர்யமா இருக்குல்ல!

பொங்கினால் புளி, மங்கினால் மாங்காய் என்பது தமிழர் வழக்கம். அதாவது மழை மிக அதிகமாகப் பெய்தால் புளி அதிகமாகக் காய்க்கும். வெயில் அதிகமாக இருந்தால் மாங்காய் மற்றும் மாம்பழ விளைச்சல் அதிகமாக இருக்கும்.

சரி! நம்ம மாங்காய் பற்றி மேலும் பார்க்கலாம்.

மாம்பழங்கள் வடகிழக்கு இந்தியப் பகுதியிலிருந்து தோன்றியதாக அறியப்படுகின்றது. உலகம் முழுவதும் பல மாம்பழ வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. வகையை பொறுத்து மாம்பழத்தின் அளவு, வடிவம், இனிப்புத்தன்மை, தோல் நிறம் மற்றும் சதை நிறம் ஆகியவை மாறுபடும். மாம்பழங்கள் பொதுவாக வெளிர் மஞ்சள், தங்க நிறம் அல்லது பச்சை மற்றும் இளஞ்சிவப்பு கலந்த நிறத்தில் இருக்கலாம்.

மா, பலா, வாழை ஆகியவை தமிழ் இலக்கியத்தில் முக்கனிகள் என போற்றப்படுகின்றன. மாம்பழம் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவற்றின் தேசியப் பழமாக உள்ளது. மாமரம் வங்காளதேசத்தின் தேசிய மரமாகும்.

மாமரங்கள் 40 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. இவற்றின் விட்டம் 15 மீட்டர் வரை இருக்கும். இந்த மரங்கள் நீண்ட காலம் காய்க்கக்கூடியவை. சில மாமரங்கள் 300 ஆண்டுகளுக்குப் பிறகும் காய்க்கின்றன.

மண்ணில் ஏறத்தாழ 20 அடி (6 மீட்டர்) ஆழத்திற்கு இதன் வேர்கள் வளர்கின்றன. வேர்கள் மண்ணுக்குள் ஆழமாக ஊடுருவுகின்றன.

இதன் இலைகள், எப்போதும் பசுமையாகவும் மாற்றடுக்காகவும் அமைந்துள்ளன. இவை 15 – 35 செ.மீ நீளமும், 6 – 16 செ.மீ அகலமும் கொண்டிருக்கும். கொழுந்து இலைகள் கருஞ்சிவப்பாகவும், வளர வளர பச்சையாகவும் மாறுகின்றன.

பூக்கள் கிளை நுனியில் கொத்தாகத் தோன்றுகின்றன. இவை மிகச்சிறியதாக, 5 – 10 மி.மீ. நீளமுடைய இதழ்களையும், மிதமான நறுமணத்தையும் கொண்டுள்ளன.

500க்கும் மேற்பட்ட மாமர வகைகள் உள்ளன, இவற்றில் பெரும்பாலானவை கோடை காலத்தில் பழங்களை ஈனுகின்றன. பூத்து, மூன்று முதல் ஆறு மாதங்களில் பழங்கள் முற்றுகின்றன.

மாம்பழம் நீண்ட காம்புகளுடன் மரக்கிளைகளில் கொத்தாய் தொங்கும். அதன் வகையை பொருத்து மாம்பழத்தின் அளவு, வடிவம், இனிப்புத்தன்மை, தோல் நிறம் மற்றும் சதை நிறம் ஆகியவை மாறுபடும்.

பழத்தின் நடுவில் கடின ஓடுடைய ஒற்றை விதை / கொட்டை காணப்படும். ரகத்தைப் பொருத்து கொட்டையின் ஓடு நார்களுடனோ வழுவழுப்பாகவோ இருக்கும். விதை 4 – 7 செ.மீ நீளமும், 3 – 4 செ.மீ அகலமும், 1 செ.மீ தடிமனும் கொண்டு, ஒரு மெல்லிய விதை உறையுடன் இருக்கும். இந்த விதையை சுற்றி சாற்றுள்ள பழப்பகுதி இருக்கும். அதை சுற்றியுள்ள தோல் மெழுகு போன்று வழுவழுப்பாக இருக்கும். மாம்பழத்தோல் பொதுவாக வெளிர் மஞ்சள், தங்க நிறம் அல்லது பச்சை மற்றும் இளஞ்சிவப்பு கலந்த நிறத்தில் இருக்கலாம். பழுத்த பழம் இனிய மணம் கொண்டிருக்கும்.

மாமரங்கள் விதைகளிலிருந்து நேரடியாக வளரும்.

பழுக்காத பச்சை மாங்காய் மற்றும் பழுத்த மாம்பழம் இரண்டையும் அப்படியே உண்ணலாம்.

மாதா ஊட்டாத அன்னம் மாங்காய் ஊட்டும் என்று சொன்னார்கள் நம் முன்னோர்கள்!

அதாவது நம் குழந்தைகள் சரியாகச் சாப்பிடாமல் அடம் பிடித்தால் மாங்காயுடன் சேர்த்து அந்த உணவினை ஊட்டினால் அவர்கள் நன்றாகச் சாப்பிடுவார்கள்.

பெரியவர்களும் மாங்காய் சேர்த்து உணவு உண்ணும்போது இரண்டு பிடி அதிகமாகவே உண்ணுவார்கள். இதைத்தான், மாதா ஊட்டாத அன்னம் மாங்காய் ஊட்டும் என்று கூறிகிறார்கள்.

பிஞ்சு மாங்காயை மாவடுவாகவும், விளைந்த மாங்காயை கீற்று மாங்காய் ஊறுகாய், ஆவக்காய் ஊறுகாய், மாங்காய் தொக்கு, மாங்காய் பச்சடி என்று பல விதமாக உண்ணலாம்!

மாங்கொட்டைக்குள் இருக்கும் விதையைக் கூட காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு நமது உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது “ஆம்ச்சூர்” பொடி என்று கூறப்படுகிறது.

மாங்காயின் நன்மைகள்: மாங்காயில் பல மருத்துவப் பயன்கள் உள்ளன.

இரத்த சோகையைத் தடுக்கும்:
மாங்காயில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்த சோகையைத் தடுக்க உதவுகிறது.

செரிமானத்தை மேம்படுத்தும்:
மாங்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது, மலச்சிக்கலைத் தடுக்கிறது. சீரண சக்தியை அதிகரிக்கிறது.

தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்:
மாங்காயில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ உள்ளது. இது சருமத்தை ஆரோக்கியமாக்குகிறது. பருக்கள் வராமல் தடுக்கிறது.

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்:
மாங்காயில் உள்ள சில கூறுகள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகின்றன.

உடல் எடையைக் கட்டுப்படுத்தும்:
மாங்காயில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்:
மாங்காயில் இருக்கும் பொட்டாசியம் சத்து இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

கண்களுக்கு நல்லது:
மாங்காயில் வைட்டமின் ஏ உள்ளதால் பார்வைக் குறைபாடுகளை தடுக்கிறது.

புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும்:
மாங்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இது புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:
மாங்காயில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ இரண்டும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

குரல் கம்மல், தொண்டைக்கட்டு நீக்கும்:
மாவிலையைத் தேன் விட்டு வதக்கி குடிநீரில் போட்டு ஊற வைத்து அந்த நீரை அருந்தினால், குரல் கம்மல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும்.

நீரிழிவைக் கட்டுப்படுத்தும்:
மாவின் கொழுந்து இலையை உலர்த்தி, பொடி செய்து தினமும் காலை மாலை 2 ஸ்பூன் அளவு வெதுவெதுப்பான நீரில் கலந்து அருந்தினால் நீரிழிவு கட்டுப்படும்.

கால் பித்த வெடிப்பை குணப்படுத்தும்:
மாம்பிசினைத் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

மாவிலைகளுக்கு ஒரு சிறப்புத் தன்மை உண்டு. அவை மரத்தில் இருந்து பறித்த பிறகும் கரியமில வாயுவை (Carbondioxide) எடுத்துக்கொண்டு பிராணவாயுவை (Oxygen) வெளிவிடும் தன்மை கொண்டவை. நம் வீட்டிலும் பலர் கூடும் இடங்களிலும் நமக்கு ஏற்படும் சுவாசக் கோளாறுகளை தடை செய்ய மாவிலைத் தோரணங்கள் பெரிதும் உதவுகின்றன. அதனாலேயே நம் வீட்டு வாசல்களிலும், திருமணம், மற்றும் கோவில் திருவிழாக்களிலும் மாவிலைகளை, தோரணமாகக் கட்டும் வழக்கம் தொன்று தொட்டு உள்ளது. பூஜைகளில் கலசத்தில் மாவிலைகளை வைக்கும் பழக்கம் ஏற்பட்டதும் இந்த காரணத்தால்தான்.

மாங்காயில் பல நன்மைகள் உள்ளதைப் போலவே நச்சுத்தன்மைகள் சிலவும் உள்ளன.

மாங்காயின் பால் சிலருக்கு தோலில் எரிச்சலையும், கொப்புளங்களையும் உண்டாக்கலாம். வசந்த காலத்தில் மாமரங்கள் பூக்கும் போது, ​​பூவின் மகரந்தம் காற்றில் பரவுவததால் சுவாசிப்பதில் சிரமம், கண்களில் அரிப்பு அல்லது முக வீக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தலாம்.🫨

மாம்பழங்களில் அல்போன்சா, கிளி மூக்கு, பங்கனப்பள்ளி, ருமானி, நீலம், போன்ற பல வகைகள் உள்ளன.

உலகின் விலை உயர்ந்த மாம்பழம் மியாசாகி மாம்பழம் ஆகும். ஜப்பானில் இருந்து இது ஒரு கிலோவுக்கு ரூ. 2.7 லட்சம் வரை விற்கப்படுகிறது. இந்தியாவில், ஒரு கிலோ ரூ. 1.5 லட்சம் வரை விற்கப்படுகிறது. ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா! 😇

மாம்பழம் குறித்து ஒரு தமிழ்ப்பாட்டு உண்டு. நான் குழந்தையாக இருக்கும் போது என் அம்மா எனக்குக் கற்றுக் கொடுத்தது. உங்களுக்கும் சொல்லவா! 🤩

மாம்பழமாம் மாம்பழம்.
மல்கோவா மாம்பழம்.
சேலத்து மாம்பழம்.
தித்திக்கும் மாம்பழம்.
அழகான மாம்பழம்.
அல்வா போல மாம்பழம்.
தங்க நிற மாம்பழம்.
உங்களுக்கும் வேண்டுமா?
இங்கே ஒடி வாருங்கள்.
பங்கு போட்டுத் தின்னலாம்.

எப்படி? பாட்டு நல்லா இருக்குல்ல! பாட்டுல சொல்லியிருக்கறது போல நிறைய மாம்பழம் வாங்கி எல்லாரும் பங்கு போட்டு சாப்பிடுங்க சுட்டீஸ். 😀

நான் அடுத்த பதிவுல இதே மாதிரி மற்றொரு தாவரத்தின் சுவாரசியமான தகவல்களுடன் வருகிறேன். 😘😍

அதுவரைக்கும் சமத்தா இருக்கணும். சரியா!
டாட்டா! பை! பை!
👋👋👋👋👋👋👋

– அன்னபூரணி தண்டபாணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *