நோபல் பரிசு பெற்ற உலகின் முதல் பெண் மேரி கியூரி. இயற்பியலுக்கு ஒன்று, வேதியியலுக்கு இன்னொன்று என இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்றவர் இன்றுவரை இவர் மட்டுமே.

மேரி கியூரியின் இயற்பெயர் மரியா ஸ்கொடோஸ்கா. இவர் போலந்து நாட்டில்வார்ஸா நகரில் 1867, நவம்பர் 7 அன்றுபிறந்தார். பெற்றோர் இருவருமே ஆசிரியர்கள். மரியா பிறந்து வளர்ந்த காலத்தில் ரஷ்யாவிடம் அடிமை நாடாக போலந்து இருந்தது. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாடங்கள் ரஷ்ய மொழியிலேயே சொல்லித்தரப்பட்டன. போலந்து மக்களின் தாய்மொழியான போலிய மொழி புறக்கணிக்கப்பட்டது. மரியாவின் தந்தை தம் குழந்தைகளுக்கு அறிவியலிலும் இசையிலும்ஆர்வத்தை ஊட்டியதோடு தாய்நாட்டுப்பற்றையும் தாய்மொழிப்பற்றையும் ஊட்டி வளர்த்தார்.

Mary Curie

கனவைப் பின்தொடர்தல்:

பள்ளிப் படிப்பில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்ற மரியா கல்லூரி படிப்பில் சேர்வதில் சிக்கல் ஏற்பட்டது. பிற்போக்கான ரஷ்ய ஏகாதிபத்தியத்தின் கீழிருந்த போலந்தில் பெண்கள், கல்லூரிக் கல்வி பெறுவது சிரமம் என்பதை உணர்ந்த மரியா, பிரான்சு சென்று பாரிசில் உள்ள சார்போன் பல்கலைக்கழகத்தில் படிக்க நினைத்தார். ஆனால், பொருளாதார நெருக்கடி அதற்கும் தடையாக அமைந்தது.

தடைகளைக் கடந்து 1891-ல் மரியா என்பதன் பிரஞ்சு சொல்லான மேரி என்ற பெயரில் சார்போன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பட்ட வகுப்பில் சேர்ந்தார். 1893-ல் இயற்பியலிலும் 1894-ல் கணிதத்திலும் பட்டம் பெற்றார். உடன் ஆய்வுப் பணிகளில் இறங்கினார். முதலில் இரும்பின் காந்தப் பண்புகளைப் பற்றிய ஆய்வை மேற்கொண்டார். இந்தக் காலகட்டத்தில் பியரி கியூரி என்ற இளம் விஞ்ஞானியைச் சந்தித்தார். இருவரும் வாழ்க்கை இணையர் ஆகினர்.

கதிரியக்கக் காரிகை:

1895-ல் ராண்ட்ஜன், எக்ஸ் கதிர்களையும், 1896-ல் ஹென்றி பெக்குரல், பெக்குரல் கதிர்களையும் கண்டுபிடித்தனர். இதை அடுத்து, மேரியும் கதிர்களை வெளியிடும் புதிய வேதித்தனிமங்களைக் கண்டுபிடிப்பதில் இறங்கினார். இந்த முயற்சியில் பியரி கியூரியும் மேரியுடன் இணைந்தார். ஆய்வுக்கூட வசதி ஏதும் கிடைக்காத நிலையில் சார்போன் பல்கலைக்கழக பழைய சரக்கு அறை ஒன்றை ஆய்வுக்கூடமாக்கிக் கொண்டனர்.

பிட்ச் பிளண்ட் என்பது யுரேனியத்தின் ஒரு தாதுப்பொருள். இதில்தான் இவர்களது ஆராய்ச்சி. பெரிய பெரிய பிட்ச்பிளண்ட் பாறைகளை சிறிய கட்டிகளாக உடைத்து கரைத்து கொதிக்க வைக்க வேண்டும். கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும். பிறகு மின் பகுப்பு செய்ய வேண்டும். இரவுபகல் பாராது இந்த ஆராய்ச்சி தொடர்ந்தது.

முதலில் கதிர்வீசும் தனிமம் ஒன்றைக் கண்டுபிடித்தனர். அது யுரேனியத்தை விட அதிகமாகக் கதிர் வீசியது. தாய்நாடு நினைவாக அந்தத் தனிமத்துக்கு ’பொலோனியம்’ எனப் பெயர் சூட்டினார் மேரி கியூரி. இது குறித்த ஆய்வுக்கட்டுரையில்தான் முதன்முதலாகக் ‘கதிரியக்கம்’ (Radioactive) என்ற சொல்லை அறிமுகப்படுத்தினார்.

இரண்டாவது புதிய தனிமம்:

இப்போது மேரியும் பியரியும் தனித்தனியே ஆராய்ச்சி செய்யத் தொடங்கினர். கதிரியக்கத் தனிமத் தேடலைத் தொடர்ந்த மேரி, அடுத்து யுரேனியம், பொலோனியம் ஆகியவற்றைவிட அதிகக் கதிர்வீசும் இன்னொரு தனிமத்தைக் கண்டுபிடித்தார். அதற்கு ’ரேடியம்’ எனப் பெயரிட்டார்.

மேரி கியூரியின் கதிரியக்க ஆராய்ச்சிக்காக 1903-ல் பியரி கியூரி, ஹென்றி பெக்குரல் ஆகியோருடன் கூட்டாக இயற்பியலுக்கான நோபல் பரிசு தரப்பட்டது. நோபல் பரிசு பெற்ற முதல் பெண் ஆனார் மேரி கியூரி.

இரண்டாவது நோபல் பரிசு:

மேரியின் ஆய்வு வெற்றியின் மகிழ்ச்சி நீண்டநாள் நீடிக்கவில்லை. 1905-ம் ஆண்டு, சாலை விபத்து ஒன்றில் பியரிஇறந்துபோக, மேரி மனம் உடைந்துபோனார். 1911-ம்ஆண்டு மீண்டும் மேரி கியூரிக்கு வேதியியலுக்கான நோபல்பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த முறை பொலோனியம், ரேடியம் என்ற இரு புதிய கதிரியக்கத் தனிமங்களைக் கண்டுபிடித்ததற்காக வழங்கப்பட்டது. மேரி கியூரிக்கு இது ஊக்கமளிப்பதாக இருந்தது.

இறுதி நாட்கள்:

மேரி கியூரியின் முயற்சியால் கதிரியக்க ஆராய்ச்சிக்காக பாரிஸ் ரேடியம் கழகமும், வார்ஸா ரேடியம் கழகமும் உருவாயின. முதல் உலகப்போரில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மேரி கியூரியை மிகவும் பாதித்தன. அவர், எக்ஸ்-ரே கருவிகளை உருவாக்கி அவற்றை ஊர்திகளில் நிறுவி போர்க்களத்திற்கே அனுப்பினார். தானே நேரில் சென்று பாதிக்கப்பட்ட வீரர்களுக்குச் சிகிச்சையும் அளித்தார். இந்த ஊர்திகள் ’லிட்டில் கியூரி’கள் என அழைக்கப்பட்டன.

மேரி- பியரி இணையருக்கு ஐரின், ஈவ் என இரண்டு மகள்கள். இதில் ஐரினும் பிற்காலத்தில் அறிவியலுக்கான நோபல் பரிசு வென்றார்.

மேரி கியூரி, தொடர்ந்து கதிரியக்க ஆராய்ச்சியில் ஈடுபட்டதால் கதிரியக்க வீச்சால் கடுமையாக பாதிக்கப்பட்டார். ரத்தப் புற்றுநோய்க்கு ஆளானார். கற்பூரப் பெட்டகமாய் வாழ்ந்த அவர், 1934, ஜூலை 14 அன்று மறைந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments