வணக்கம் பூஞ்சிட்டுகளே,

ஆன்லைன் வகுப்புகள் கவனித்து கண்கள் எல்லாம் களைப்பா இருக்கா?

எழுதி எழுதிக் கைகள் வலிக்கிறதா ?

சிலர் யோசிக்கிற மாதிரியும், சிலர் ஆமா என்று சொல்ற மாதிரியும் எனக்கு தெரிகிறது.

சரி குழந்தைகளே, கேட்டு கேட்டுக் காதுகள் வலித்திருக்கிறதா ?

கண்கள் அளவுக்கு இல்லை. அப்படித்தானே? அதிகம் களைப்பை தராத உறுப்பு காது என்று எனக்குத் தோன்றுகிறது.

உங்களுக்கும் காதுகள் களைப்பைத் தருவதில்லை என்றால் நிறைய கதைகள் கேட்கலாமா? நல்ல கருத்துக்கள் கேட்கலாமா? நல்ல பாடல்கள் கேட்கலாமா?

இதை எல்லாம் அலை பேசி அல்லது தொலைக் காட்சியில் தானே கேட்க வேண்டும்? அப்போ கண்களுக்கும் தானே வேலை என்கிறீர்களா ?

அதுவும் சரிதான். காதுகள் மட்டும் கேட்கும் படி என்னவெல்லாம் இருக்கின்றன ?

வானொலி கேட்கலாம், அப்புறம் நம்ம வீட்டில் உள்ளவர்களைப் பேசச் சொல்லிக் கேட்கலாம். வாட்ஸப் போன்ற செயலியில் காணொளி இல்லாமல் கேட்பொலியாக வரும் கதைகளை பெற்றோரின் அனுமதியோடு கேட்கலாம். பாட்காஸ்ட்  போன்ற கேட்பொலி செயலிகளையும் பெற்றோரின் அனுமதியோடு கேட்கலாம்.

இன்னும் முக்கியமாக நம்மை  சுற்றி உள்ள நிறைய ஒலிகளை  நாம் கவனிக்கலாம்.

ஜல் ஜல் கொலுசொலி, சர் சர் காற்று ஒலி, கீச் கீச் பறவை ஒலி, சிலு சிலு தண்ணீர் சிந்தும் சத்தம், ஞம் ஞம் சாப்பிடும் சந்தம், சமையலறைக் கரண்டி ஒலி, பாத்திரங்களின் சத்தம், கடுகு பொறியும் சத்தம், குடுவைகளை திறக்கும் மூடும் சத்தம், இந்த மாதிரி நீங்க கவனிக்கும் வேறு ஒலிகளையும் சொல்லுங்க சிட்டுஸ்.

நமது ஐம்புலன்களையும் நம்மைச் சுற்றி உள்ளவற்றைக் கவனிக்க பயன்படுத்தும்போது நம்முடைய கற்றல் திறன் அதிகமாகும் குழந்தைகளே!

ஐம்புலன்கள் என்னவெல்லாம் தெரியுமா?

five senses

கண்(பார்த்து அறியும் திறன் )

காது (கேட்டறியும் திறன்)

மூக்கு (நுகர்ந்தறியும் திறன்)

நாக்கு (சுவைத்தறியும் திறன்)

தோல் (தொட்டறியும் திறன்)

சமையலறையில் உள்ள பொருட்களைக் கண்களை மூடி, நுகர்ந்தே கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.

கண்களை மூடி, கைகளால் தொட்டு  சில பொருட்களைக் கண்டுபிடித்து விளையாடுங்கள்.

அனைத்துத் திறன்களையும் பயன்படுத்தி அனைவரும் சாதிக்க வாழ்த்துக்கள் பூஞ்சிட்டுகளே!

What’s your Reaction?
+1
12
+1
8
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
9 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments