இராயவரத்தில், 1922-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி அழகப்ப செட்டியார் – உமையாள் ஆச்சிக்கு மூன்றாவது குழந்தையாக வள்ளியப்பா பிறந்தார். இவருக்கு பெற்றோர் சூட்டிய பெயர் வள்ளியப்பன். பிற்காலத்தில் வள்ளியப்பா ஆனார். செட்டிநாட்டில் நகரத்தார்கள் தங்கள் தந்தையின் பெயரின் முதல் இரண்டு எழுத்துகளை முதல் எழுத்துகளாகக் கொள்வர். அந்த வகையில், “அழ வள்ளியப்பா’ ஆனார்.

வள்ளியப்பா, இராயவரம் காந்தி ஆரம்பப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். பிறகு இராமச்சந்திரபுரத்தில் உள்ள பூமீஸ்வர ஸ்வாமி இலவச உயர்நிலைப் பள்ளியில் படித்தார். அதே பள்ளியில்தான் தவத்திரு குன்றக்குடி அடிகளார், கல்கி சதாசிவம், பழனியப்பா பிரதர்ஸ் பழனியப்ப செட்டியார் ஆகியோர் படித்தனர். இந்தப் பள்ளிக்கு 1927-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி வருகை தந்திருக்கிறார்.
“மலரும் உள்ளம்’
வள்ளியப்பாவின் முதல் கவிதைத் தொகுதி, 1944-ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்த முதல் தொகுதியில் 23 பாடல்களே இருக்கும். 1954-இல் 135 பாடல்கள் கொண்ட தொகுதியும், 1961-இல் ஒரு தொகுதியும் வெளியிட்டார். “சிரிக்கும் பூக்கள்’ என்ற தொகுதியை வெளியிட்ட பிறகுதான், “குழந்தைக் கவிஞர்’ என்ற பெயரிட்டு அனைவரும் பாராட்டத் தொடங்கினர்.
குழந்தைக் கவிஞர் என்று பாராட்டப்பட்ட அழ வள்ளியப்பா, நகைச்சுவையுடன் நற்பண்புகளை வளர்க்கும் கதைகளையும் எழுதியுள்ளார். பத்திரிகை நடத்துவதிலும் அதிக விருப்பம் உடையவர். சென்னையில் இருந்து ஒரே நேரத்தில் மூன்று பத்திரிகைகளைத் தயாரிக்க, படத்துடன் தகவல்களையும் அனுப்பிய சாதனையாளர். அவர் மிகவும் ஈடுபாடு கொண்டு நடத்திய மாத இதழ் “பூஞ்சோலை’.
அவரின் மிகப் பிரபலமான பாடல் கை வீசம்மா கைவீசு’, “மாம்பழமாம் மாம்பழம்’ என்ற அழ வள்ளியப்பாவின் பாடலாகும்.
– ஜெயா சிங்காரவேலு