சொக்கு தாத்தா ஒரு பெண்ணை அழைத்து வந்திருந்தார்.
அந்தப் பெண்ணைப் பார்த்ததும் குழந்தைகள் நால்வரும்,
“நிலாப்பாட்டி! நிலாப்பாட்டி!” என்று குதித்தனர்.
நிலாப்பாட்டியும் குழந்தைகளின் கையில் ஆளுக்கொரு மயிலிறகை அன்புடன் கொடுத்தார்.
ஆனால் மீனுப்பாட்டிக்கோ நிலாப்பாட்டைியைப் பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது.
குழந்தைகளிடம் அன்புடன் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு வந்த நிலாப்பாட்டி, மீனுப் பாட்டியைப் பார்த்து,
“என்ன மீனு? என்னப் பாத்ததும் அப்டியே ஷாக்காயிட்ட?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.
இதைக் கேட்ட அர்ஜுன்,
“ஹா! ஹா! ஹா!” என்று வாய்விட்டு சிரித்தான்.
“ஹே! நிலாப்பாட்டி வடிவேல் மாதிரி பேசறாங்கடா!” என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தான்.
இதைக் கேட்ட மற்ற மூவரும் அவனைப் போலவே வாய்விட்டுச் சிரித்தனர்.
குழந்தைகளின் சிரிப்பில் அந்த வீடே ஔிர்வது போல இருந்தது.
“வா வெண்ணிலா! நா ஏன் உன்னப் பாத்து ஷாக்காக போறேன்?” என்று கேட்டுக் கொண்டே நிலாப்பாட்டியின் கையைப் பிடித்துக் கொண்டார்.
“நீ எப்டி இருக்க? எப்ப இந்த ஊருக்கு வந்த?” என்று தன் அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு இயல்பாகப் பேசவும் ஆரம்பித்தார் மீனுப்பாட்டி.
“அப்ப உங்க ரெண்டு பேருக்கும் நிலாப்பாட்டிய தெரியுமா?” என்று பிள்ளைகள் சொக்கு தாத்தாவையும் மீனுப் பாட்டியையும் மாறி மறி கேட்டனர்.
“நல்லா கேட்டீங்க போங்க..” என்று சிரித்த சொக்கு தாத்தா,
“உங்க மீனுப் பாட்டியும் இந்த நிலாப் பாட்டியும் சின்ன வயசில இருந்தே கிளோஸ் ஃப்ரண்ட்ஸ்!” என்றார்.
“ம்! அப்டியா பாட்டி?” என்று கண்ணை அகல விரித்து வியந்து போய் கேட்டாள் வர்ஷா.
“ஆமாடா கண்ணு!” என்றார் மீனுப்பாட்டி.
“உங்க பாட்டியும் நானும் ஸ்கூல் படிக்கற காலத்தில இருந்தே ஃப்ரண்ட்ஸ்.. காலேஜ் போற வரைக்கும் எங்க நட்பு இருந்துச்சு.. ஆனா உங்க பாட்டி கல்யாணம் ஆகி உங்க தாத்தா கூட இந்த ஊருக்கு வந்துட்டாங்க.. நானும் கல்யாணம் ஆகி வடநாட்டுக்கு போயிட்டேன். அப்றம் பல வருடங்களுக்கு எங்களுக்குள்ள எந்த கான்டேக்டும் இல்ல.. இப்ப நாலு வருஷத்துக்கு முன்னால ஏதேச்சையா திருப்பதி கோவில்ல உங்க பாட்டிய பாத்தேன்.. எங்க நட்பு புதுசா ரின்யூ ஆயிடுச்சு..” என்று சொல்லி சிரித்தார் நிலாப்பாட்டியாகிய வெண்ணிலா.
“உங்க கதைய கேட்டா பழைய பிளாக் அன் வொயிட் சினிமா பாக்கற மாதிரி இருக்கு பாட்டி..” என்று சொல்லிச் சிரித்தாள் வர்ஷா. அவள் கூறியதைக் கேட்டு மற்ற அனைவரும் சிரித்தார்கள்.
மீனுப்பாட்டியின் மனம் மட்டும் உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டிருந்தது.
‘ஐயோ! இந்தக் குழந்தைங்க கள்ளம் கபடம் இல்லாம சிரிச்சிட்டு இருக்காங்க.. இவளோட கெட்ட எண்ணம் என் பேரன்களையும் பேத்தியையும் பாதிக்காம இருக்கணுமே.. கடவுளே!’ என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டிருந்தார் மீனுப் பாட்டி.
“சரி! சரி! மணியாகுது பாரு மீனு.. சாப்பாடு எடுத்து வெய்..” என்று மனைவியிடம் கூறிய சொக்கு தாத்தா, குழந்தைகளிடம் திரும்பி,
“என்ன பசங்களா? எல்லாரும் சாப்பிடலாமா?” என்று கேட்டார்.
“ம்! சாப்பிடலாம் தாத்தா!” என்று பிள்ளைகள் நால்வரும் குதித்து கும்மாளமிட்டு ஆமோதித்தார்கள்.

மீனுப்பாட்டி சமையல் செய்தவற்றை எடுத்து வந்து கூடத்தில் வைத்தார்.
நிலாப்பாட்டியும் வர்ஷாவும் மீனுப்பாட்டிக்கு உதவி செய்தார்கள்.
தாத்தா தன் பேரன்களுடன் கொல்லைப்புறம் சென்று வாழையிலை வெட்டிக் கொண்டு வந்தார்.
நிலாப்பாட்டி கதை சொல்லிக் கொண்டே சாதம் பிசைந்து குழந்தைகளுக்கு கையில் போட, மீனுப்பாட்டி ஒரு வித பயத்துடனேயே தன் தோழியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
குழந்தைகள் நால்வரும் சாப்பிட்ட பின் பெரியவர்கள் மூவரும் சாப்பிட்டனர்.
அதன் பின் நிலாப்பாட்டி தன் வீட்டுக்குக் கிளம்பினார்.
குழந்தைகள் நால்வரும் நிலாபாட்டிக்கு டாட்டா காண்பித்து அவருக்கு விடை கொடுத்தனர்.
அன்றிரவு மொட்டை மாடியில் கதை சொல்லியபடி குழந்தைகளைத் தூங்க வைத்தார் சொக்கு தாத்தா.
குழந்தைகள் நால்வரும் சமத்தாகத் தூங்கினார்கள். அவர்கள் நால்வரையும் தூங்க வைத்துவிட்டு அவரும் அருகில் படுத்து உறங்கிப் போனார்.
காலையில் சொக்கு தாத்தா கண் விழித்தபோது அவரருகே படுத்திருந்த குழந்தைகளைக் காணவில்லை.
‘அதுக்குள்ள எந்திரிச்சிட்டீங்களா?” என்று கேட்டுக் கொண்டே மாடியிலிருந்து கிழே வந்த தாத்தா குழந்தைகளை வீடு முழுதும் தேடினார்.
ஆனால் பிள்ளைகளை வீட்டில் காணவில்லை.
வீட்டின் எந்த மூலையிலும் அவர்கள் இல்லை.
மீனுப் பாட்டிக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.
“ஐயியோ! மோசம் போயிட்டேனே! அந்தக் கிராதகி வீட்டுக்கு வந்தப்பவே நா கவனமா இருந்திருக்கணும்.. படுபாவி! ஏமாந்துட்டேனே..” என்று அழுது புலம்பினார்.
என்ன விவரம் என்று கேட்ட தாத்தாவிடம்,
“அந்த வெண்ணிலாதான் நம்ம குழந்தைங்கள தூக்கிட்டு போயிருக்கணும்..” என்று கூறினார்.
அதற்குள் குழந்தைகளைக் காணவில்லை என்ற செய்தி அந்த ஊர் முழுக்கப் பரவி விட்டது.
சொக்கு தாத்தா மீனுப்பாட்டியை அழைத்துக் கொண்டு குழந்தைகளைத் தேடி நிலாப்பாட்டியின் வீட்டுக்குச் செல்ல, அவருடன் ஊரே திரண்டு சென்றது. ஆனால் நிலாப்பாட்டியின் வீடு பூட்டியிருந்தது.
பூட்டிய வீட்டின் வாசலில் குழந்தைகளின் காலணிகள் கிடந்தன.
– தொடரும்….
– அன்னபூரணி தண்டபாணி