“குப்பைத்தொட்டிக்குள்ள இவ்வளவு பிளாஸ்டிக்கா டா?” என்றார் மதன்.
“நேத்தே பாத்தேன் டா.. எல்லா ஊரையும் போல இங்கேயும் குப்பைத்தொட்டிக்கு வெளியிலேயும் குப்பை இறைஞ்சுக்கெடக்குதுன்னு பாத்தேன்..”என்றார் நவீன்.
“பிளாஸ்டிக் கொண்டு போக தடைன்னு சொன்னாங்களேடா..” என்றார் மதன்.
“நாம வெளிநாடு மாதிரி அவ்வளவு ஸ்டிரிக்ட் இல்லடா..” என்றார் நவீன்.
“ம்ஹ்ம்…”- மதன்.
“யானை ஏதாவது சாப்பிட கிடைக்குமான்னு பார்த்திருக்கும் போல..” என்றார் நவீன்.
“இந்த மலைல இல்லாததாடா, இந்த குப்பைத்தொட்டிக்குள்ளே இருக்கப் போகுது?” என்று சிரித்தார் மதன்.
“வெயில் கொளுத்துதேடா.. செடி, கொடிகள் காஞ்சு இருக்குமேடா..” – நவீன்.
நடந்துக் கொண்டே பூங்காவிற்குள் சென்றவர்களின், பின்னாலிருந்து ஒரு சிறுவனின் குரல் கேட்டது.
“டேய்! யானை அதோ நிக்குதுடா..” என்று தன்னுடைய நண்பர்களிடம் கூவிய சிறுவனின் குரலில், நவீனும், மதனும் அவன் கை காட்டிய திசையில் திரும்பி பார்த்தார்கள்.

இருநூறு மீட்டர் தொலைவில் ஒற்றை யானை மரத்திற்கு அடியில் நின்று கொண்டிருந்தது.
“டேய்! வருண்! அது நிக்குற இடத்துக்கு மேல பாருடா! இன்னொரு யானை நிக்குது..” என்றான் இன்னொரு சிறுவன்.
“ஆமாடா! அது பெருசா இருக்குது. இதோடா அம்மா போல..” என்று குதூகலித்தான் வருண்.
மதன் அவர் பார்த்த அனைத்து காட்சிகளையும் கேமராவினால் படம்பிடித்துக் கொண்டிருந்தார். குழந்தைகளின் ஆரவாரம், இளைஞர்களின் குதூகலம், பெரியவர்களின் சிரிப்பு என எல்லாவற்றையும் கேமராவினுள் பதிவு செய்தார்.
“யானை ஓடி வந்துடக்கூடாது. இந்த பக்கம் வாங்க. பத்திரமா நில்லுங்க..” என்கின்ற ஒன்றிரண்டு குரல்களை கேட்க முடிந்தது. சிலர் குழந்தைகளை கைப்பிடித்து விடுதியறைக்கு அழைத்து சென்றிருந்தனர்.
மதன் கேமராவை எடுத்துக் கொண்டு, முன்னே நடந்தார். கீழே பள்ளத்தில் நீர் தேங்கியிருந்தது.
செயற்கையான நீர்த்தேக்கம் போலில்லாமல், அது இயற்கையாக அமைந்த நீர்த்தேக்கம் போலிருந்தது.
கலங்கிய நீரை கொண்டிருந்த குளம் போலவே அது காட்சியளித்தது.
இரண்டு பக்கங்கள் தேயிலைத்தோட்டங்களும், இன்னொரு பக்கம் பூங்காவும், இன்னொரு பக்கம் ஓடையுமாக இருந்தது.
கோடைக்காலமாதலால் குறைவான அளவு நீரே இருந்தது.
மதனும், நவீனும் கீழே இறங்கத் தொடங்கிய பொழுது, “ சார்! சார்!” என்றொரு குரல் பரபரப்பாகக் கேட்டது.
– தொடரும்..
– தேவி பிரபா