ஒரு கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் ஒரு தேவாலயம் இருந்தது. அதிகமாக மனிதர்கள் உலவாத அந்தப் பகுதியில் ஒரு பூனையும், எலியும் வசித்துவந்தன. பூனையின் குணம் சரியில்லை. மனதிற்குள் கெட்ட எண்ணங்களை வைத்துக் கொண்டு வெளியே நல்லவனாகக் காட்டிக் கொள்ளும் சாமர்த்தியசாலி அந்தப் பூனை. எலியோ அதற்கு எதிர்மறையான குணமுடையதாக இருந்தது. அப்பாவி எலியோ, வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பிவிடும் இளகிய மனதுடன் இருந்தது. அந்தக் கெட்டிக்காரப் பூனையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் எலியை முட்டாள் என்று கூடச் சொல்லலாம்.
அதிக மனித நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் எலியும், பூனையும் ஓரளவு மகிழ்ச்சியுடன் அங்கு வாழ்ந்து வந்தன. ஒருநாள் பூனை, எலியைக் கூப்பிட்டுப் பேசியது.
“நாம ரெண்டு பேரும் ஒரே வீட்டில ஒண்ணா வாழலாமா? எனக்கும் தனியா இருந்து ரொம்ப சலிப்பா இருக்கு. ரெண்டு பேரும் சேந்து உழைக்கலாம். இரை தேடலாம். குளிர்காலத்துல பாதுகாப்பா ஒரே இடத்தில ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருக்கலாம். குளிர்காலத்துக்காக உணவைத் தனியாச் சேத்து வைக்கலாம். ரெண்டு பேரா இருந்தா வீடும் கதகதப்பா இருக்கும.” என்று ஆசை காட்டியது.
எலிக்கோ பூனையிடம் ஒரு பயம் இருந்தது. அதனுடைய பாட்டி எலி, ஒரு கொழுத்த பூனையின் உணவாக மாறிய கதையை எலியின் அம்மா சொல்லிக் கொண்டே இருந்தது ஞாபகத்திற்கு வந்தது. பூனையைக் கண்டால் தூர விலகிவிடு என்று சொல்லியே வளர்த்திருந்தார்கள் அப்பாவும், அம்மாவும்.
எலி, குழப்பத்தில் ஆழ்ந்ததைப் பார்த்த பூனை, மேலும் மேலும் பிரியத்துடன் பேசுவதைப் போல நடித்தது.
“நீ என் கூட இருக்க பயப்படாதே. நான் உன்னை ஒண்ணும் செய்யமாட்டேன். என் கூட இருந்தேன்னா, மத்த பூனைகளும் உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டாங்க. நீ தைரியமா என்னோட தங்கலாம்.” என்று பூனை சொன்னதும் எலி அதனுடைய வார்த்தைகளை நம்ப ஆரம்பித்தது. பூனையின் பசப்பு வார்த்தைகளை ஏற்றுக் கொண்டது. அதனுடன் சேர்ந்து தங்கிப் பார்க்கலாம் என்று முடிவு செய்தது.
தேவாலயத்தில் ஓரிடத்தில் மரத்தால் ஆன மேடை ஒன்று இருந்தது. அதற்குக் கீழே பூனையும் எலியும் தங்குவதற்காக ஒரு பொந்தை இரண்டுமாகச் சேர்ந்து வீடு போலத் தயார் செய்தன. ஒரு மண் சட்டியில் குளிர் காலத்திற்குத் தேவையான உணவைச் சேமித்து வைக்க ஆரம்பித்தன. பாலாடைக் கட்டிகளைக் கொண்டு வந்து பானையை நிரப்பி வைத்தன. அந்தப் பாலாடைக் கட்டிகளைக் கொண்டு வந்ததில் எலியின் உழைப்பு அதிகம். பூனை வீட்டிலேயே அதிக நேரம் செலவழித்து எலி கொண்டு வந்த பொருட்களை உண்டு கொழுத்துவந்தது. இந்த நிலைமை அப்படியே சில நாட்கள் தொடர்ந்து வந்தது. எலிக்கும் பூனை மேல் முழு நம்பிக்கை வந்துவிட்டது.
ஒருநாள் பகல் வேளையில் எலியும், பூனையும் உணவுப் பொருட்களைச் சேகரிக்க வெளியே கிளம்பின.
“நான் இன்னைக்கு என்னோட சித்தப்பா வீட்டுக்குப் போறேன். புதுசாக் குழந்தை பொறந்திருக்கு சித்தப்பா வீட்டில. பேர் வைக்கப் போறாங்க. நல்ல விருந்து கிடைக்கும். நீயும் வரலாம். உன்னையும் என்னோட நண்பனாக நான் கூட்டிட்டுப் போறேன். வரயா?” என்று பூனை, எலிக்கு அழைப்பு விடுத்தது.
பூனையோடு ஒரே வீட்டில் வசிக்கவே பயப்பட்ட எலிக்கு, நிறையப் பூனைகள் வசிக்கும் இடத்திற்குப் போக விருப்பமில்லை.

“இல்லை இல்லை. நான் வரலை. நான் வழக்கம் போல வெளியே போகப் போறேன்.” என்று சொல்லிவிட்டு வெளியே கிளம்பிவிட்டது.
எலி கிளம்பிப் போகும்வரை பொறுமையாகக் காத்திருந்த பூனை, அதற்குப் பிறகு தரையில் புதைத்து வந்திருந்த மண் சட்டியை வெளியே எடுத்தது. மேற்பகுதியில் இருந்த பாலாடைக் கட்டிகளை நன்றாக ரசித்து ருசித்து விட்டு, சட்டியை மீண்டும் அதனுடைய இடத்திலேயே ஒளித்து வைத்துவிட்டது. இந்த உணவைக் குறிவைத்து அது போட்ட திட்டம் வெற்றிகரமாக நிறைவேறியது.
அன்று மாலை எலி திரும்பி வந்தபோது பூனையை விசாரித்தது.
“நண்பா, விருந்துச் சாப்பாடு நல்லா இருந்துச்சா?”
“ஹும், நல்லா இருந்துச்சு. நீயும் என்கூட வந்திருக்கலாம்.” என்றது பூனை.
“உங்க குடும்ப விருந்துல நான் எப்படி கலந்துக்கமுடியும்? எனக்கு உன்னைத் தவிர வேறு யாரையும் தெரியாதே! ஆமாம், குழந்தைக்கு என்ன பேரு வச்சீங்க?”
“ஓ அதுவா, மேல் பகுதின்னு வச்சாங்க!”
“புதுமையான பேரா இருக்கே!” என்று ஆச்சர்யப்பட்டது எலி.
சில நாட்கள் கழித்து மீண்டும் ஒரு நாள் இதே நாடகத்தை நடத்தியது பூனை. தனது உறவினர் வீட்டில் குழந்தை பிறத்திருப்பதாகவும், குழந்தைக்குப் பெயர் வைக்கப் போவதாகவும் சொன்னது. எலியை அழைத்தபோது எலி போக மறுத்தது. அன்றும் எலி கிளம்பிப் போன பிறகு பாலாடைக்கட்டிகள் இருந்த பானையை எடுத்துக் கிட்டத்தட்ட பாதி பாகம் காலி செய்தது. நன்றாகப் படுத்துத் தூங்கிய பூனை, மாலையில் எலி களைத்துப் போய் வந்தபோது எழுந்து வந்தது.
“நல்லா நடந்துச்சா கொண்டாட்டம்? குழந்தைக்கு என்ன பேர் வச்சாங்க இந்த முறை?” என்று எலி கேட்க,
“ஓ, ரொம்ப நல்லா நடந்தது. நல்லா வயறு நெறைய விருந்துச் சாப்பாடு சாப்பிட்டேன். குழந்தைக்குப் பேர் வந்து, ‘பாதி அளவு’ ன்னு வச்சாங்க.” என்று பதில் சொன்னது பூனை.
“உங்க குடும்பத்துல வைக்கற பேரு எல்லாம் விசித்திரமா இருக்கு.” என்று வியந்த எலிக்கு அப்போது கூடப் புரியவில்லை.
இதே போன்று அடுத்த முறையும் பூனை நாடகம் நடத்திய பூனை, மண்பானையில் குளிர்காலத்திற்காக ஒளித்து வைத்திருந்த பாலாடைக் கட்டிகளை முழுவதுமாகக் கபளீகரம் செய்தது. வழக்கம் போல எலி திரும்பிவந்து பூனையிடம் விழாவைப் பற்றி விசாரித்துக் குழந்தையின் பெயரைக் கேட்க,
“எல்லாம் போச்சு!” என்று பூனை சொன்னது.
“இப்படிக் கூடப் பேர் வைப்பாங்களா என்ன? ஆச்சரியமா இருக்கு!” என்றது எலி.
சில நாட்கள் கழித்துக் குளிர்காலம் தொடங்கியது. இரை தேட வெளியே போக முடியாத அளவுக்குப் பனிப் பொழிவு வெளியே.
“ரொம்பப் பசிக்குது. இன்னைக்கு நாம சேத்து வச்ச பாலாடைக் கட்டிகளை எடுத்துச் சாப்பிடலாம்!” என்று சொல்லி மண்பானையை வெளியே எடுத்தது எலி. காலியான பானையைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தது எலி.
“எனக்குத் தெரியாமல் இதை எடுத்து நீ காலி பண்ணிருக்கயா? நீ சொன்ன பேருக்கு இப்பத்தான் அர்த்தம் புரியுது எனக்கு. கொஞ்சம் கொஞ்சமாகக் காலி பண்ணிட்டு, மேல் பாகம், பாதி அளவு, எல்லாம் போச்சு இப்படியெல்லாம் இந்தப் பானையைப் பத்தி இல்லை சொல்லி இருக்கே நீ? இப்போ பசிக்குதே? என்ன செய்யறது?” என்று கோபம் கொண்டது எலி.
“கவலையே இல்லை. என் பசிக்கு உன்னைச் சாப்பிடப் போறேன். என் வயத்துக்குள்ள போனதுக்கப்புறம் உனக்கும் பசிக்காது. பிரச்சனை தீர்ந்தது.” என்று எலியை நோக்கித் தாவியது பூனை. உடனே சுதாரித்துக் கொண்ட எலி, துள்ளிக் குதித்துப் பூனையிடம் இருந்து தப்பித்து வெளியே ஓடிவிட்டது.
‘இனிமேல் எந்தப் பூனையையும் நம்பக்கூடாது. எனக்கு இது சரியான பாடம்.’ என்று முடிவெடுத்த எலி, அந்த இடத்தை விட்டு ஓடியே போனது.
– புவனா சந்திரசேகரன்.