வானத்தில் மேகங்கள் ஒன்று கூடின. அவை எல்லாம் தெற்கு பக்கம் போக வேண்டும்.
புயல் உருவாகி விட்டது. மேகங்கள் அணிவகுத்து சென்றன. புயலோடு இணைந்து பயணித்தன. புயல் போகும் இடத்தில் மழை பெய்ய வேண்டும்.
மேகக் கூட்டத்தில் காரியும் இருந்தது. அது ஒரு வெண்மையான பெரிய மேகம். அதற்கு மழையாக பெய்ய விருப்பம் இல்லை.
அது வானத்தில் சுதந்திரமாக வெண்மையாக பறக்கவே விரும்பியது.
அதனால் அது மேகக் கூட்டத்தில் இருந்து பிரிந்தது. அதனுடைய கூட்டாளி மேகங்கள் அழைத்தன.
“காரி வா நாம மழையா பெய்யனும்.”
“காரி வா புயலோடு பயணிப்போம்.”
“காரி வா கடலை அடைவோம்.”
இப்படி எல்லா மேகங்களும் அழைத்தன.
ஆனால் காரி போகவே இல்லை.
“நான் சுதந்திரமா பறப்பேன். மண்ணில் விழ மாட்டேன்.” என சொல்லியது. எதிர் திசையில் நகர ஆரம்பித்தது.
மேகங்கள் எல்லாம் புயலோடு வேகமாக பயணித்தன.
தன் நண்பர்கள் போனதும் காரிக்கு வருத்தமாக இருந்தது. அது தனிமையை விரும்பவில்லை.
அதனால் காரி வானவில்லை உருவாக்கி அதனோடு விளையாடியது.
விதவிதமான உருவங்களை எடுத்தது. வானவில்லின் நிறத்தை பூசிக் கொண்டது.
இப்படியே நகர்ந்து அது வடக்கு பக்கத்திற்கு வந்து விட்டது.
தெற்குப் பக்கம் புயலோடு பயணித்த மேகங்கள் மழையாக கொட்டியது. மண் நீரை உறிஞ்சிய பின்னும் மழை நிற்கவில்லை.
பெரிய்ய மழையா பெய்தது. அதனால் ஊரே நீரில் மூழ்கியது. வீடுகள் நீரில் மூழ்கின. மக்கள் வீட்டின் மேல் நின்றார்கள். மேகங்கள் மழையாக பெய்து, வெள்ளமாக பாய்ந்தன.
கால்நடைகளை இழுத்துச் சென்றன.
காரி தனியான வானத்தில் மிதந்து கொண்டிருந்தது.
வடக்குப் பக்கத்தில் மழையே இல்லை. காற்றில் ஈரம் இல்லை. மண்ணில் ஈரம் இல்லை. அதனால் பூமி வெடித்து பாளம் பாளமாக இருந்தது.
தண்ணீர் பஞ்சம் நிலவியது. மக்கள் தண்ணீருக்காக நீண்ட தூரம் நடந்தனர்.
வறா கிராமத்திலும் பஞ்சம். அங்கிருந்து கிர் கிராமத்திற்கு செல்ல வேண்டும். அங்கு தான் ஒரு கிணற்றில் கொஞ்சமாய் நீர் சுரந்தது.
வறா கிராமத்தில் இருந்து கிர் கிராமம் நோக்கி நடந்து கொண்டிருந்தாள் ராமி. ராமிக்கு பத்து வயது. அவளது பெற்றோர் வேலைக்கு போய் விடுவார்கள்.
ராமி சிறிய குடத்தில் நீர் பிடித்துக் கொண்டு போக வேண்டும். அப்போதுதான் அம்மா திரும்ப வந்து சமைக்க முடியும்.
ராமி குடத்தோடு நடந்து கொண்டிருந்தாள். திடீரென வெயில் குறைந்தது போல இருந்தது. நிமிர்ந்து பார்த்தாள். வானத்தில் காரி இருந்தது.
மேகத்தைப் பார்த்ததும் ராமிக்கு கோபம் வந்து விட்டது.
“ஏய் மேகமே! நாங்கல்லாம் தண்ணி இல்லாம கஷ்டப்படுறோம். நீ தெற்கு பக்கம் போய் வெள்ளமா ஓடுறயா? இங்க மழை பெய்ய மாட்டியா?” எனக் கேட்டாள்.
காரிக்கு அவள் திட்டியதும் என்ன செய்வதென தெரியவில்லை. ஆனால் அதற்கு பூமிக்கு வரவும் விருப்பமில்லை.
ஆனால் அவளுக்கு உதவ நினைத்தது. அவள் மேல் வெயில் படாமல் அவள் மேல் பறந்தது.
ராமி கிணற்றில் இருந்து நீர் இரைத்தாள். அதை தனது குடத்தில் நிரப்பினாள். குடத்தை தலையில் வைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

காரி அவளுக்கு நேர் மேலே பறந்து கொண்டிருந்தது.
மேகம் தன்னுடனே வருவதை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டே நடந்தாள்.
அவள் ஊருக்குள் வீட்டருகே வந்து விட்டாள். ஆனால் கீழே கிடந்த கல்லை கவனிக்கவில்லை.
அவள் தான் காரியை பார்த்துக் கொண்டு இருந்தாளே!
கீழே தடுக்கி விழுந்தாள். குடத்தில் இருந்த நீரெல்லாம் கொட்டி விட்டது. ராமிக்கு அழுகையாக வந்தது.
எவ்வளவு தூரம் நடந்து போனாள். எப்படி கடினப்பட்டு நீர் இரைத்தாள், அதை எப்படி சுமந்து வந்தாள்!
அதையெல்லாம் மீண்டும் செய்ய வேண்டுமே! நினைத்து நினைத்து மிகவும் வருத்தமாக இருந்தது.
கண்ணீர் விட்டு அழ அரம்பித்தாள்.
காரிக்கு அவளைக் காண பாவமாக இருந்தது. அவள் எவ்வளவு உழைத்தாள் என காரியும் பார்த்ததே!
அதனால் அவளுக்கு உதவ நினைத்தது.
இவள் குடம் நிறையும் அளவுக்கு மழையாக பெய்யலாம் என கொஞ்சமாக மழை பெய்ய ஆரம்பித்தது.
ராமி போலவே நீர் பிடிக்கச் சென்ற குழந்தைகள் நின்றார்கள்.
மழை! மழை! மழை பெய்யுது என ஆனந்தமாக கூச்சலிட்டார்கள்.
ராமியோடு சேர்ந்து தங்களது குடங்களிலும் நீர் பிடித்தார்கள்.
காரி இந்தக் குழந்தைக்கு மட்டும்..
இல்லை அவன் ஒருவனுக்கு மட்டும்.. என நினைத்துக் கொண்டு எல்லா குழந்தைகளின் குடங்களையும் நிரப்பியது.
தங்கள் குடங்கள் நிரம்பியதும் குழந்தைகள் மழையில் விளையாட ஆரம்பித்தார்கள்.
அவர்களது ஆனந்தத்தில் தானும் மகிழ்ந்தது காரி. உற்சாகமாக கொட்ட ஆரம்பித்தது.
வறா கிராமத்தின் மூலைமுடுக்கெல்லாம் மழையில் நனைந்தது. நிலம் நீரை வேண்டிய மட்டும் உறிஞ்சியது.
குளம் நிரம்பியது. கிணறுகள் நிறைந்தன.
காரி கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து காணாமல் போனது. இல்லை மழையாக மகிழ்ச்சியாக மாறியது.
குழந்தைகளின் புன்னகைக்குள் சிரித்தது.
– ராஜலட்சுமி நாராயணசாமி