நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள் குழந்தைகளே!
சங்ககாலத்தில் எழுதப்பட்ட நூலான கணக்கதிகாரம் என்கிற நூலில் கணிதத்தின் வழிமுறைகளும், எண்ணற்ற புதிர்களும் செய்யுள்களாகத் தரப்பட்டுள்ளன.
ஓர் பூசணிக்காயை அரியாமலேயே அதில் எத்தனை விதைகள் இருக்கின்றன என்றும், பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளைகளின் எண்ணிக்கையையும் நம்மால் சொல்லமுடியுமா ? முடியும் என்கிறது இந்த நூல்.
“கணக்கதிகாரம்” என்கிற இந்த நூலை, கொறுக்கையூரைச் சேர்ந்த காரி நாயனார் என்பவர் எழுதியுள்ளார். கணித வழிமுறைகளை, மக்களின் அன்றாட வாழ்க்கையோடு ஒட்டி ஆராய்கிறது இந்த நூல். மனிதனின் தினசரி உழைப்பின் பரிமாணங்களை கணக்கியல்ரீதியாக எப்படி அணுகுவது என்பது இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளது.
பின்ன எண்களின் பெயர்கள்,
முழு எண்களின் பெயர்கள்,
எப்படிக் கூட்டினாலும் ஒரே விடை வரும் கட்டக் கணக்குகள்,
பொழுதுபோக்கு வினாவிடைக் கணக்குகள்
போன்றவை இந்த நூலில் தரப்பட்டுள்ள பகுதிகளில் குறிப்பிடத் தக்கவை.
“கீற்றெண்ணி முத்தித்துத் கழாறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலேபாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும் பூசணிக்காய் தோறும் புகல்”
ஒரு பூசணிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று, ஆறு, ஐந்து இவற்றால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கை என்கிறது மேலே தரப்பட்டுள்ள செய்யுள்.

அதாவது ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை “அ” என்று எடுத்துக் கொள்வோம். பாடலின் படி அதை 3,6,5 ஆகியவற்றால் பெருக்கக் கிடைப்பது “90அ” ஆகும். அதைப் பாதியாக்கினால் கிடைப்பது “45அ” ஆகும். அதை மீண்டும் மூன்றால் பெருக்கக் கிடைப்பது “135அ” ஆகும்.
ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிகையை அ=6 ஆறு என்று எடுத்துக்கொண்டால் (135 * 6 = 810) 135 ஐ ஆறால் பெருக்கக் கிடைப்பது 810 ஆகும். எனவே பூசணியில் உள்ள விதைகளின் எண்ணிக்கை 810 ஆகும்.
ஒரு பலாப்பழத்தைப் பிளக்காமல் அதில் எத்தனை சுளைகள் இருக்கின்றன என்பதை அடுத்ததாகப் பார்க்கலாம்.
“பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு
சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி – வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை”
பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம்.

ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா குழந்தைகளே! வாருங்கள், நம் முன்னோர்களின் அறிவியல் படைப்புகளில் ஒன்றான இதன் பெருமையை உலகெங்கும் பறைசாற்றுவோம்!
– புவனா சந்திரசேகரன்.