
சாதிகள் இருக்குதடி பாப்பா – நீ
சந்தேகம் கொள்ளாதே பாப்பா; – அவற்றில்
நீதிகளும் இருக்குதடி பாப்பா – அவற்றை
நீயென்றும் தள்ளாதே பாப்பா!
(சாதிகள்…)
குறிவைத்துப் பார்த்திடுவோர் கொக்குசாதி;
கூர்மையாய்ப் பார்த்திடுவோர் கழுகுசாதி;
நெறிவைத்து நடந்திடுவோர் யானைசாதி;
நேரத்தில் கவ்விடுவோர் பூனைசாதி !
(சாதிகள்…)
பதுங்கிப் பாய்ந்திடுவோர் புலியின்சாதி;
பயந்து வாழ்ந்திடுவோர் எலியின்சாதி;
ஒதுங்கி வாழ்ந்திடுவோர் ஆந்தைசாதி;
ஓயாமல் உழைத்திடுவோர் மாட்டின்சாதி !
(சாதிகள்…)
கொண்டபிடி விடாதோர் உடும்புசாதி;
கொப்புதோறும் தாவிடுவோர் குரங்குசாதி;
கண்டபடி வாழாதோர் சிங்கசாதி;
காற்றைப்போல் விரைந்திடுவோர் குதிரைசாதி !
(சாதிகள்…)
அன்போடு நின்றிடுவோர் அரியசாதி;
அரவணைத்துச் சென்றிடுவோர் இனியசாதி;
பண்போடு வாழ்ந்திடுவோர் உரியசாதி;
பாரினிலே இவரெல்லாம் பெரியசாதி !
(சாதிகள்…)
– திரு. இளங்கோ கண்ணன்