வெப்பம் மிகுந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாள். பிற்பகல் நேரம். ‘நான் அனுமதி கொடுத்த நேரத்தை விட, ஆனி அரை மணி நேரம் அதிகமா டயானாவோட விளையாடிக்கிட்டு இருக்கா. அவள் தையல் வேலை செய்ய வேண்டிய நேரமிது’ என்றார் மரிலா, கடிகாரத்தைப் பார்த்து விட்டு.
‘இப்ப வேலை செய்ய வேண்டிய நேரம்னு அவளுக்கு நல்லாத் தெரியும். ஆனால் மாத்யூ கிட்ட பேசிக்கிட்டு இருக்கா. அவரும் இவ பேசறதை மடையன் மாதிரி கேட்டுக்கிட்டு இருக்கார். இந்த மாதிரி முட்டாள்தனமான ஆளை நான் பார்த்ததே இல்லை. அவளும் விநோதமா எதையாவது பேசிக்கிட்டே இருப்பா. இவரும் அளவுக்கதிகமா அதை ரசிச்சி ரசிச்சிக் கேட்கிறார்!’ என்று யோசித்த மரிலா “ஆனி உடனே இங்க வா! நான் கூப்பிடுறது காதுல விழுதுல்ல?” என்றார்.
“ஓ! மரிலா! அடுத்த வாரம் ஞாயிறு பள்ளிக்கூடத்துல இருந்து பிக்னிக் போறாங்க. திருமதி பெல்லும், திருமதி லிண்டேவும் ஐஸ்கிரீம் தயாரிக்கப் போறாங்க. ஐஸ்கிரீம்!!!! நானும் பிக்னிக் போகவா மரிலா?”
“கடிகாரத்தைப் பாரு ஆனி. நான் எத்தனை மணிக்கு உன்னை உள்ளே வரச் சொன்னேன்?”
“2 மணிக்கு. ஆனா பிக்னிக் எவ்ளோ அற்புதமான விஷயம் மரிலா? நான் போகலாமா? நான் இதுவரைக்கும் பிக்னிக் போனதே இல்லை. அதைப் பத்திக் கனவு கண்டிருக்கேன். ஆனா….”
“நான் உன்னை இரண்டு மணிக்கு வரச் சொன்னேன். ஆனா இப்ப 3 மணி ஆகப் போவுது. நான் சொன்னது மாதிரி நீ ஏன் நடக்கலேன்னு எனக்குத் தெரியணும் ஆனி.”
“நீங்க சொல்றதை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேட்டுத் தான் நடக்கிறேன் மரிலா. ஆனா நானும் டயானாவும் கட்டி விளையாடுற வீடு எவ்ளோ அட்டகாசமா இருக்குதுன்னு உங்களுக்குத் தெரியாது. அப்புறம் மாத்யூ கிட்ட பிக்னிக் பத்தி வேற சொல்ல வேண்டி இருந்துச்சி. அவரு நான் சொல்றதைக் கவனமாக் கேட்பாரு. தயவு செஞ்சி நான் பிக்னிக் போலாமா மரிலா?”
“நான் ஒரு நேரத்தைக் குறிப்பிட்டு வரச் சொன்னா, அந்த நேரத்துக்குக் கண்டிப்பா நீ வரணும். அரை மணி நேரம் கழிச்சித் தாமதமா வரக் கூடாது. நீ சொல்றதைக் கேட்கிறவங்களுக்காக வழியில நிற்க கூடாது. நீ பிக்னிக் போகலாம். ஞாயிறு பள்ளியில படிக்கிற எல்லாப் பொண்ணுகளும் போகும் போது, நீ போகக் கூடாதுன்னு நான் சொல்ல மாட்டேன்.”
“ஆனால் ஒவ்வொருத்தரும் கூடை நிறையா சாப்பாடு எடுத்துட்டு வரணும்னு டயானா சொன்னாள். எனக்குச் சமைக்கத் தெரியாது. பஃப் வைச்ச சட்டை போடாம பிக்னிக் போறதைப் பத்திக் கூட, எனக்குக் கவலையில்லை. ஆனால் சாப்பாட்டுக் கூடை எடுக்காமல் போனால் எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கும். டயானா சொன்னதைக் கேட்டதுலேர்ந்து அதை நினைச்சி ஒரே கவலையா இருக்கு”.
“அதை நினைச்சி இனிமே கவலைப்பட வேணாம். நான் உனக்கு கேக் செஞ்சி தாரேன்.”

“ஓ! என் அன்பு மரிலா! என் மேல எவ்ளோ கருணையோட இருக்கீங்க! நான் உங்களுக்கு ரொம்பக் கடமைப்பட்டு இருக்கேன்.”
ஆனி சொல்லிவிட்டுச் சட்டென்று மரிலாவின் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தாள். மரிலாவின் வாழ்வில் ஒரு குழந்தை தானாக முன்வந்து அவர் கன்னத்தைத் தொட்டு முத்தம் கொடுப்பது அதுவே முதல் தடவை. அது அவருக்கு ஒருவிதச் சிலிர்ப்பைக் கொடுத்தது. அவர் அந்த இனந்தெரியாத புது இன்பத்தை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. ரகசியமாக அனுபவித்து மகிழ்ந்தார்.
“சரி. சரி. இந்த மாதிரி முத்தம் கொடுத்துக் கொஞ்சுறது எல்லாம் வேணாம். நான் என்ன சொல்றேனோ, கண்டிப்பா நீ அதை உடனே செய்யணும்னு எதிர்பார்க்கிறேன். வேற நாளில் நான் உனக்குச் சமையல் சொல்லிக் கொடுக்கிறேன். ஆனா நீ எதிலேயும் உரிய கவனம் இல்லாம அலட்சியமா இருக்குறே. நான் சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, நீ உன்னைச் சரிப் பண்ணிக்கணும். சமையல் செய்றப்ப, ஏதேதோ கற்பனையில மூழ்கிப் பாதியில நிறுத்திடக் கூடாது. இப்ப தையல் ஒட்டு வேலையை ஆரம்பிச்சி, மாலைக்குள் முடி.”
“இந்த மாதிரி விதவிதமான டிசைன் போட்ட துணிகளை ஒன்னாச் சேர்த்து ஒட்டு வேலை போடறது எனக்குப் பிடிக்காது. வேற விதமான தையல் வேலைன்னா நல்லா இருக்கும். இந்த ஒட்டுத் தையல் வேலையில கற்பனைக்கு இடமே இல்லை. டயானாவோட நான் விளையாடும் போது நேரம் போறதே தெரியாது. இந்த வேலை செய்யும் போது அப்படி வேகமா நேரம் ஓடினா நல்லா இருக்கும்னு ஆசைப்படறேன். டயானாவும் நானும் கட்டி இருக்கிற வீட்டை நீங்க பார்க்கணும் மரிலா! டயானா பிக்னிக் அன்று உடுத்த முழங்கை வரை உள்ள ஒரு புதுச் சட்டை வாங்கி இருக்காள். ஏதாவது நடந்து நான் பிக்னிக் போக முடியாம போனா, என்னால அந்த ஏமாற்றத்தைத் தாங்கிக்கவே முடியாது. நிச்சயமா அது எனக்கு வாழ்நாள் துயரமா இருக்கும். இதுக்குப் பிறகு எனக்கு நூறு பிக்னிக் போக வாய்ப்பு கிடைச்சாலும், இந்தப் பிக்னிக் போல ஆகாது. அவங்க ஏரியில படகுப் பயணம் போறாங்க; ஐஸ்கிரீம் தின்னப் போறாங்க. இதுவரைக்கும் நான் ஐஸ்கிரீம் சாப்பிட்டதே இல்லை. டயானா அது எப்படி இருக்கும்னு விளக்க முயற்சி செஞ்சா. ஆனா நம்ம கற்பனைக்கு எட்டாத விஷயங்களில் அதுவும் ஒன்னுன்னு நான் நினைக்கிறேன்.”
“ஆனி நீ பத்து நிமிஷமா பேசிக்கிட்டு இருக்கிறே. அதே நேரத்துக்கு உன் வாயைக் கொஞ்சம் மூடிக்கிட்டு இருந்தா நல்லது” என்றார் மரிலா.
மரிலா சொன்னது போல அச்சமயம் ஆனி பேச்சை நிறுத்திக் கொண்டாள். ஆனால் அதற்குப் பிறகு அந்த வார முழுதும் பிக்னிக் பற்றியே பேசிக் கொண்டும் கற்பனை பண்ணிக் கொண்டும் இருந்தாள்.
ஞாயிறு அன்று மாதா கோவிலுக்கு மரிலாவும் ஆனியும் சென்றார்கள். அங்கே பிக்னிக் போவதைப் பற்றி மத போதகர் செய்த அறிவிப்பைக் கேட்டவுடன் ஆனிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.
மாதா கோவிலுக்குச் சென்ற போது எப்போதும் போல் மரிலா தம் ஊதா நிற உடை ஊசியை (Brooch) மேல் ஆடையில் குத்தி இருந்தார். அது ரத்தினக்கல் பதித்தது. அவர் அம்மா கொடுத்த அந்த நகையை மரிலா பொக்கிஷமாகப் பாதுகாத்தார்.
“ஓ! மரிலா! எவ்ளோ அழகான உடை ஊசி இது! ஒரு நிமிஷம் என் கையில் அதைக் கொடுப்பீங்களா? என்று கேட்டாள் ஆனி.
மறுநாள் மாலை அறையில் இருந்து வெளிவந்த மரிலாவின் முகத்தில் கலவரம் தெரிந்தது.
“ஆனி! என் உடை ஊசியை எங்கேயாவது பார்த்தாயா? நேற்று மாலை குஷன் டப்பாவில் அதைக் குத்தி வைச்ச ஞாபகம் இருக்கு. இப்ப எங்கேயும் அதைக் காணல” என்றார் மரிலா.
“இன்னிக்கு மதியம் நீங்க வெளியில போய் இருந்தப்ப, அதைப் பார்த்தேன்” என்று மெதுவாகச் சொன்னாள் ஆனி.
“அதை நீ எடுத்தியா?” என்றார் மரிலா.
“ஆமாம். அதை எடுத்து என் மேலாடையில் குத்தி எப்படி இருக்குன்னு பார்த்தேன்.”
“ரொம்ப தப்பு. என் அறைக்கு நீ போனது முதல் தப்பு. உனக்குச் சொந்தம் இல்லாத அந்த உடை ஊசியை நீ தொட்டு இருக்கவே கூடாது. அதை எங்க வைச்சே?”
“நான் பீரோவிலேயே திரும்ப வைச்சிட்டேன். ஒரு நிமிஷம் கூட நான் கையில் அதை வைச்சி இருக்கல. அறை உள்ளே போய் அதை எடுத்துக் குத்திப் பார்த்தது தப்புன்னு நான் நினைக்கல. ஆனா இப்ப அது தப்புன்னு தெரியுது. இனிமே எப்பவும் நான் அந்தத் தப்பைச் செய்ய மாட்டேன்.”
“நீ அதைத் திரும்ப வைக்கல. பீரோவில் எங்கேயும் அது இல்லை. நீ அதை வெளியே எடுத்து இருக்கணும் ஆனி”
“நான் உள்ளே வைச்சிட்டேன். அந்த குஷன் டப்பாவில் வைச்சேனா? அல்லது அந்த சீனா தட்டில் வைச்சேனான்னு நினைவு இல்லை. ஆனால் நான் அதைத் திரும்ப வைச்சிட்டேன். அது மட்டும் உறுதி” என்றாள் ஆனி.
“நான் போய் இன்னும் ஒரு முறை தேடிப் பார்க்கிறேன். நீ பீரோவில் வைச்சி இருந்தா அங்கே தான் இருக்கும். அங்கே இல்லைன்னா நீ வைக்கலைன்னு அர்த்தம். அவ்வளவு தான்” என்றார் மரிலா.
மரிலா அறைக்குச் சென்று பீரோவில் தேடினார். இன்னும் பல இடங்களிலும் அதைத் தேடினார். ஆனால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு அவர் சமையல் அறைக்குச் சென்றார்.
“ஆனி! அந்த ரத்தினக்கல் உடை ஊசி காணாமல் போய்விட்டது. கடைசியா நீ அதை எடுத்ததா நீயே ஒத்துக்கிட்டே. அதை என்ன பண்ணினே? உண்மையைச் சொல்லு. அதை வெளியே எடுத்துட்டுப் போய்த் தொலைச்சிட்டியா?.” கோபமாகக் கேட்டார் மரிலா.
“இல்லை. நான் உங்க அறையை விட்டு அதை வெளியே எடுத்துட்டுப் போகல. அது தான் உண்மை” என்று மறுத்தாள் ஆனி.
“நீ எதையோ எங்கிட்ட சொல்லாமல் மறைக்கிறே. உன் அறைக்குப் போ. நீ உண்மையைச் சொல்கிற வரைக்கும், அறையிலேயே இரு” என்றார் மரிலா.
– தொடரும்
– ஞா.கலையரசி