ஏழும் ஏழும் பதினாலாம்

ஏழும் ஏழும் பதினாலாம்
(குழந்தைப் பாடல்கள்)
ஆசிரியர்:- அழ.வள்ளியப்பா
வெளியீடு:-பஞ்சுமிட்டாய் & ஓங்கில் கூட்டம்
தஞ்சாவூர். செல் +91 9731736363
விலை:-40/-

‘குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களில் இருந்து குழந்தைகள் பாடி மகழ்வதற்கு, 15 சிறந்த பாடல்களைத் தேர்வு செய்து ‘ஏழும் ஏழும் பதினாலாம்’ என்ற தலைப்பில், ‘பஞ்சு மிட்டாய்’ இதழ் நிறுவனர் பிரபு ராஜேந்திரன் நிர்வகிக்கும் ‘பஞ்சுமிட்டாய்- ஓங்கில் கூட்டம் வெளியிட்டு உள்ளது.

“அ,ஆ என்றேனே” என்ற முதல் பாடல், குழந்தை விளையாட்டாய் அரிச்சுவடியைக் கற்க உதவும். ‘ஏழும் ஏழும் பதினாலாம்’ என்பது வேடிக்கையும், நகைச்சுவையும் நிறைந்து குழந்தைகளை மகிழ்ச்சியூட்டும் பாடலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. அதே சமயம் 7+7=14 என்ற கணக்கையும், குழந்தைகள் விளையாட்டாய்த் தெரிந்து கொள்வார்கள்.

“ஏழும் ஏழும் பதினாலாம்
எலியா ருக்கு முழம் வாலாம்.
அறைக்குள் எலியார் புகுந்தாராம்
அங்கும் இங்கும் பார்த்தாராம்.
இரண்டு தட்டில் பணியாரம்
இருந்தது கண்டு மகிழ்ந்தாராம்
கடித்து கடித்துத் தின்றாராம்
கணக்கைக் கூட்டிப் பார்த்தாராம்.
ஏழும் ஏழும் பதினாலாம்
எலியார் ஏப்பம் விட்டாராம்!”

குழந்தைகள் இப்பாடல்களைப் பாடுவதன் மூலம் புதிய சொற்களைக் தெரிந்து கொள்வதோடு, தமிழ் உச்சரிப்பும் மேம்படும்.

நூலின் வலப்பக்கம் பாடலும், இடப்பக்கம் அதற்குப் பொருத்தமான கருப்பு வெள்ளைப் படங்களும் இடம்பெற்று, தரமான அச்சில் வெளிவந்திருக்கும் இப்புத்தகத்தைப் பெற்றோர் தங்கள் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு  வாங்கிக் கொடுக்கலாம்.

– ஞா. கலையரசி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *