குட்டீஸ்.. அதிகாலை நேரம் இல்லைன்னா இரவு நேரம் வானத்தைப் பாருங்க. இருப்பதிலேயே அதிகப் பிரகாசமான தெரியுற நட்சத்திரத்தை குறிச்சிக்கோங்க. அங்கேதான் இந்த மாதம் போய் பார்க்கப் போறோம். அதுக்கு முன்னாடி ஒரு உண்மையைச் சொல்லிடுறேன். அது நட்சத்திரமே இல்லை. அதுதான் வெள்ளி கோள். சூரியன், நிலாவுக்கு அப்புறமா நம் வானத்தில் பிரகாசமாகத் தெரிவது வெள்ளி கோள் தான். நிலாவைப் போல அதுவும் சூரிய ஒளியைப் பிரதிபலிப்பதால் பிரகாசமாகத் தெரியுது.
இப்போது நாம் பார்க்கும் வெள்ளி கோள் பல வித்தியாசமான பண்புகளோடு இருக்குது. நம் சூரிய குடும்பத்தில் சூரியனுக்கு அடுத்தபடியாக அதிகமான வெப்பம் உள்ள விண்பொருள் இது. சூரியனுக்கு அருகில் இருக்கும் புதன் கோளை விட வெள்ளியின் வெப்பநிலை அதிகம். அதன் காற்று மண்டலம் 90%க்கும் மேல் கார்பன்டை ஆக்சைடால் நிறைந்துள்ளது. வானில் மிதக்கும் மேகக்கூட்டங்கள் சல்பர் டை ஆக்சைடு என்ற கந்தகத்தால் உருவானதால் அங்கு பெய்யும் மழை சல்ப்யூரிக் ஆசிட் என்னும் கந்தக அமில மழை. கோளின் மேற்புறத்தில் தினமும் நூற்றுக்கணக்கான எரிமலைகள் வெடித்துக் கொண்டிருக்கின்றன.
இந்த வெள்ளி 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னால் எப்படி இருந்தது என்று பார்க்கலாமா? சீட் பெல்ட் போட்டுக்கோங்க.. வண்டி கிளம்பிடுச்சி..

4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னால் வந்துட்டோம். சூரியனைச் சுற்றியுள்ள தூசிப் படலங்கள் ஆங்காங்கே சேர்ந்து இப்போதுதான் கோள்கள் உருவாகியிருக்கின்றன. ஆஹா! வெள்ளி கோள் எத்தனை அழகாக இருக்கிறது. கிட்டத்தட்ட நம் பூமியின் அளவுதான் இருக்கிறது. பூமியைப் போலவே நீரால் ஆன கடல் இருக்கிறது. அதன் காற்று மண்டலத்திலும் ஆக்சிஜன் நிறைந்திருக்கிறது.
சில மில்லியன் வருடங்கள் சென்றால் பூமியைப் போலவே, வெள்ளியிலும் உயிர்கள் வர வாய்ப்பிருப்பதைப் போலத் தெரிகிறதே! வாங்க.. கொஞ்சம் முன்னே போய்ப் பார்க்கலாம்.
அடடா! சூரியனின் வெப்பம் அதிகமாக இருப்பதால் வெள்ளியின் மேற்பரப்பில் உள்ள கடலின் நீர் நீராவியாகிக் கொண்டேயிருக்கிறது. அதனால் நீராவியின் அளவு காற்று மண்டலத்தில் அதிகமாகி வருகிறது. வெள்ளி கோளின் மேற்புறத்தில் பட்டு பிரதிபலிக்கப்பட்டு, விண்வெளிக்குச் செல்லும் சூரியனின் வெப்பக் கதிர்களை இந்த நீராவி மீண்டும் வெள்ளிக் கோளுக்கே திருப்பி அனுப்புகிறது. காற்று மண்டலத்தில் சிக்கிக் கொண்ட வெப்ப அலைகளால் வெள்ளியின் வெப்பநிலை அதிகமாகிறது. இது நீரை மேலும் அதிகமாக நீராவியாக்கி, அந்த நீராவி மேலும் வெப்பத்தை அதிகமாக்குவது என மீள முடியா ஒரு சுழற்ச்சிக்குள் வெள்ளி கிரகம் சிக்கி விட்டது.. வெப்பநிலை அதிகமாகுவதால், காற்று மண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜன் குறைந்து கார்பன்டைஆக்ஸைடு அதிகமாகிறது.
வெள்ளி கோளின் நிலம் நம் பூமியைப் போல இரும்பு நிறைந்த திரவ நிலையில் உள்ள உட்பகுதியையும் கல் பாறையால் ஆன மேல் தகட்டையும் கொண்டுள்ளது. மேலே உள்ள பாறைத் தகடுகள் அடர்த்தி வேறுபாடு காரணமாக நகர்வதாலும், அதீதமான காற்று மண்டலத்தின் அழுத்தத்தாலும் எரிமலைகள் வெடித்துக் கொண்டேயிருக்கின்றன. அதில் வெளிவருகிற கந்தகம் மேகமாக மாறி கந்தக அமில மழை பெய்ய ஆரம்பிக்கிறது.
சில மில்லியன் வருடங்களில் உயிர் வாழ்விற்குச் சாதகமான அனைத்துக் கூறுகளையும் இழந்து, வெள்ளி கொதிக்கிற வளிமண்டலம் கொண்ட தற்போதைய நிலைக்கு வந்துவிட்டது.
ஓரே நேரத்தில் பிறந்த, பார்க்கவும் ஒன்று போல் இருக்கும் இரட்டைக் குழந்தைகள், ஒரே பாதையில் பயணித்து ஒரு புள்ளியில் வெவ்வேறு பாதை மாறிச் செல்ல ஒரு குழந்தை நல்ல மனிதனாகவும் மற்றொரு குழந்தை தீய பழக்கங்கள் கொண்டவனாகவும் ஆவது போல நிறைய கதைகள் படித்திருக்கிறோம் இல்லையா? உண்மையில் நம் பூமிக்கும் வெள்ளிக்கும் கிட்டத்தட்ட அதேதான் நடந்திருக்கிறது.
ஆச்சரியமாக இருக்கிறதா? பல கோடி அதிசயங்கள் நிறைந்த நம் விண்வெளியின் மிகச்சிறிய, மிகச்சிறிய என்றால் நீங்கள் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு மிகச்சிறிய பகுதியைப் பற்றித்தான் நாம் ஆராய்ந்து அறிந்து வர்றோம். அதுவே எத்தனை அதிசயமா இருக்குதுல்ல குட்டீஸ்!
சரி.. அடுத்த மாதம் இது போல இன்னொரு விண்வெளிப் பொருளைப் போய் பார்த்து தெரிஞ்சிக்கலாம். பை!!
– வித்யா செல்வம்