மலையடிவாரத்தில் இருந்த அந்தச் சிறிய கிராமத்தில் கந்தனும், அவனுடைய அம்மாவும் வசித்து வந்தார்கள். அம்மாவும், பையனும் மட்டுமே அந்த வீட்டில் இருந்தார்கள். பிழைப்புக்காக அவர்கள் ஆடு வளர்த்து வந்தார்கள்.
தினமும் காலையில் ஆடுகளை அழைத்துக்கொண்டு கந்தன் மலைப்பக்கம் போவான். அதிக உயரத்திற்குப் போகாமல் ஆடுகளை நாள் முழுவதும் மேய விட்டுவிட்டு சாயந்திரம் வீட்டுக்குத் திரும்பி வருவான்.
கந்தன் ஆடுகளை விரட்டிக் கொண்டு போகும்போது கையில் புல்லாங்குழலை எடுத்துப் போவான். காலையில் போனதும் ஆடுகளை நாலா பக்கங்களிலும் விரட்டி விடுவான். மாலையில் திரும்பும் நேரமானதும் குழலை எடுத்து ஊதினால், அந்த இசையைக் கேட்டு எல்லா ஆடுகளும் திரும்பி வந்து விடும். அவற்றை விரட்டிக் கொண்டு வீடு வந்து சேர்வான்.
அன்றும் அப்படித்தான் வீட்டுக்கு வந்து ஆடுகளைக் கொட்டிலில் சேர்த்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான் கந்தன். திடீரென்று அம்மா கூப்பிடும் குரல் கேட்டது.
“கந்தா இங்கே பாரு. நம்ம பொம்மி ஆடும், அதோட மூணு குட்டிகளையும் காணோமே?”
“எல்லா ஆட்டையும் வழக்கம் போலப் பத்திரமாக் கூட்டிட்டு வந்தேனே? நல்லாப் பாருங்கம்மா. இங்கே தான் இருக்கும்.”
“நீயே வந்து பாரு. இங்கே காணோம்.” என்று அம்மா சொல்ல, கந்தனும் போய்த் தேடினான். பொம்மியும், அதனுடைய குட்டிகளும் அங்கு இல்லை.
“வழி தவறி எங்கயாவது போயிருக்கும். நான் இப்ப உடனே போயித் தேடிப் பாக்கறேன்.” என்று கிளம்பினான் கந்தன்.
“சரி, ஜாக்கிரதையாப் போயிட்டு வா. இருட்டறதுக்குள்ள வந்துரு. அப்புறம் மலை மேல ரொம்ப உசரத்துக்குப் போகாதே. கொடிய விலங்குகள் உலாவற நேரம்.” என்று புத்திமதி சொல்லி அனுப்பினாள் அம்மா.

கந்தன் கிளம்பி மலை மேல் ஏறினான். வழக்கமாக ஆடுகள் மேயும் இடத்தில் பொம்மி கிடைக்கவில்லை. குழலை எடுத்து ஊதிப் பார்த்தான். காதில் அந்தச் சத்தம் விழுந்தால் ஆடுகள் சாதாரணமாக வந்துவிடும். வரவில்லை என்பதால் இன்னும் கொஞ்சம் உயரத்துக்கு ஏறினான். அங்கேயும் கிடைக்கவில்லை. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ஏறி அதிக உயரத்துக்குப் போய்விட்டான். இலேசாக இருட்டவும் ஆரம்பித்துவிட்டது. ஆடுகளும் கிடைக்கவில்லை.
அங்கே சற்று தூரத்தில் ஒரு குகை தெரிந்தது. குகையை நோக்கி நடந்தான். வழியில் அழகான பூக்கள் பூத்துக் குலுங்கின. பல்வேறு வண்ணப் பூக்களைப் பார்க்கவே அழகான காட்சியாக இருந்தது. குகையின் வாசலில் அழகான ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். தலையில் மலர்களால் இன கிரீடம். சிரித்த முகம்.
“வா கந்தா வா. பொம்மியைத் தேடி வந்தயா?” என்று அந்தப் பெண் கேட்க, ஆச்சரியம் அடைந்தான் கந்தன்.
“ஆமாம், உங்களுக்கு எப்படித் தெரியும்? என் பேரு கூடச் சொல்லறீங்களே? எப்படி?”
“நான்தான் தினமும் உன்னைப் பாக்கறேனே? நீ நல்ல பையன். ஆடுகள் கிட்டயும் நீ அன்பா நடந்துக்கறதைப் பாத்திருக்கேன். நான் இந்த வனத்தைக் காக்கற தேவதை. இங்கிருக்கும் உயிர்களைக் காப்பாத்தறது என்னோட கடமை. இப்போ உன் குழலை எடுத்து ஊது.” என்று சொன்னாள் தேவதை. கந்தனும் ஊதினான்.
குகையில் இருந்து பொம்மியும், அதனுடைய குட்டிகளும் வெளியே வந்து கந்தனுக்கு அருகில் நின்றன.
“வழி தவறித் திண்டாடிட்டு இருந்த ஆடுகளை நான் தான் இங்கே கூட்டிட்டு வந்தேன். இனிமேல் நீ கூட்டிட்டுப் போலாம். அப்புறம் உனக்கு ஏதாவது பரிசு தரணுமே? குகைக்குள் போயி என்ன வேணுமோ, எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோ.” என்றாள்.
உள்ளே போய்ப் பார்த்தான் கந்தன். வைரம், வைடூரியம், நவரத்தினம் என்று விலை உயர்ந்த கற்கள் கொட்டிக் கிடந்தன. எதையும் எடுத்துக் கொள்ளாமல் வெளியே வந்துவிட்டான் கந்தன்.
“எங்க வீட்ல நானும், அம்மாவும் தான். எங்களுக்குச் சொந்த வீடு இருக்கு. ஆடுகளை வளக்கறதுனால கிடைக்கற வருமானம் எங்களுக்குப் போதுமானது. எனக்கு இந்த மாதிரி விலை உயர்ந்த கற்கள் தேவையில்லை.” என்று கந்தன் சொன்னதைக் கேட்டு தேவதை அசந்து போய் நின்றாள்.
“நீ ரொம்ப நல்லவன்னு நான் நெனைச்சது சரிதான். ஆனாலும் உனக்கு ஏதாவது நான் தந்தாகணுமே? வேற ஏதாவது உனக்குப் பிடிச்சதைக் கேளு” என்று கேட்டாள் தேவதை.
கந்தன் அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தான்.
“இங்க இருக்கற பூக்கள் எல்லாம் ரொம்ப அழகா இருக்கு. இந்தச் செடிகளை நான் கொஞ்சம் எடுத்துட்டுப் போகட்டுமா?” என்று கேட்டான். தேவதையும் சரியென்று சொன்னாள். வெள்ளை, இளஞ்சிவப்பு, சிவப்பு நிறங்களில் அழகான மலர்கள் இருந்த செடிகள் சிலவற்றை எடுத்துக் கொண்டான் கந்தன். தேவதை அவனிடம் கொஞ்சம் விதைகளையும் தந்தாள். கந்தனையும், ஆடுகளையும் மலை அடிவாரத்தில் கொண்டு வந்து விட்டாள்.
கந்தனுக்காகக் கவலையுடன் காத்துக் கொண்டிருந்த அம்மா, அவனைக் கண்டதும் நிம்மதி அடைந்தாள். அம்மாவிடம் தேவதையைச் சந்தித்ததைப் பற்றிச் சொன்னான் கந்தன்.
அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் அந்தச் செடிகளை நட்டு, விதைகளை ஊன்றினார்கள். நிறையச் செடிகள் முளைத்தன. வெள்ளை நிறத்தில் முதலில் மலர்ந்த பூக்கள், இளஞ்சிவப்பு, சிவப்பு என்று நிறம் மாறின.
சில நாட்கள் கழித்து அங்கே வந்த தேவதை, அவர்களிடம் அந்தச் செடி பருத்திச் செடி என்று சொல்லி, பூவிலிருந்து பருத்தி எப்படி எடுப்பது, நூலை எப்படி நூற்பது என்று சொல்லிக் கொடுத்தாள் தேவதை. சில நாட்கள் கழித்து அந்தக் கிராம மக்கள் அனைவரும் பருத்தி அதிக அளவில் விளைவித்துத் துணி தயாரித்து வாழ்க்கையில் முன்னேறினார்கள்.
– புவனா சந்திரசேகரன்.