ஒரு காட்டில் அந்தக் காலத்தில் நிறைய டைனோசர்கள் இருந்தன. விதவிதமான வகைகள், விதவிதமான உருவங்கள், விதவிதமான குணாதிசயங்கள் என்று ஒரு பெரிய டைனோசர் கூட்டமே அந்தக் காட்டில் இருந்தது.
குட்டி டைனோசரான ராக்கிக்கு எப்போதும் தன்னைப் பற்றிய உயர்ந்த மனப்பான்மை இருந்தது. ராக்கியின் அப்பா, அந்த டைனோசர் கூட்டத்தின் தலைவன் என்பதால் அதற்குப் பெருமை அதிகம். ராக்கியின் அம்மாவும், அப்பாவும் அதைத் திருத்த முயற்சி செய்து தோற்றுப் போனார்கள்.
“தானாகவே ஒருநாள் புரிஞ்சுக்குவான். பட்டால் தெரியும். நாம எவ்வளவு அறிவுரை சொன்னாலும் அவனோட மண்டையில ஏறப் போறதிலை.” என்று ஒருவருக்கொருவர் கூறிக்கொண்டு ராக்கியின் அம்மாவும், அப்பாவும் விட்டு விட்டார்கள்.
‘எல்லா டைனோசர்களும் ஒரே மாதிரி இருக்கோம். பச்சை நிறத்திலேயே கொஞ்ச கொஞ்ச வித்தியாசம், பழுப்பு நிறம், சாம்பல் நிறம் இப்படி டல் கலரிலேயே இருக்காங்க எல்லாரும். நல்ல பளிச்சுன்னு கண்ணைப் பறிக்கற நிறத்தில் நான் மாறினேன்னா எல்லோரும் என்னை ஆச்சர்யத்தோடு பாப்பாங்க. என்னோட அப்பாவுக்கு அப்புறம் நான் இந்தக் கூட்டத்தின் தலைவனாகும்போது தனியாத் தெரிவேன்!’ என்று நினைத்துப் பார்த்த ராக்கி, அப்பாவிடம் போனது.

“அப்பா, என் நிறத்தை மாத்தணும்னா என்ன செய்யணும்?” என்று கேட்டது.
“அதையெல்லாம் நாம மாத்த முடியாது. அந்த நிறம் பிறக்கும் போது நமக்குக் கிடைக்கிறது. ஆண்டவனால தான் அதை மாத்த முடியும்.”
“ஆண்டவன் யாரு? எங்கே இருக்காரு? அவரை நான் பாக்கணுமே!”
“எனக்குத் தெரியலையே! நாங்கள்ளாம் மனசுக்குள்ள வேண்டிக்குவோம். நேரில் போய்ப் பாத்ததில்லையே?”
“இல்லை. எனக்கு நேரில் பாக்கணுமே? முக்கியமான ஒரு வரம் வாங்கணும். நான் கெளம்பிப் போறேன். எப்படியாவது அவரைச் சந்திச்சு வரம் வாங்கிட்டுத்தான் வருவேன்.” என்று வீராவேசமாகச் சொல்லிவிட்டுக் கிளம்பியது ராக்கி.
“பிடிவாதக்காரன். நாம என்ன சொன்னாலும் கேக்கப் போவதில்லை. அனுபவிச்சுத் தானாப் புரிஞ்சுக்கட்டும். அதுதான் நல்லது.” என்று அம்மா டைனோசரிடம் சொல்லிவிட்டு நகர்ந்தது அப்பா டைனோசர்.
ராக்கி கிளம்பி விட்டது. வழியில் தென்பட்ட விலங்குகள், பறவைகளிடம் கேட்டுக் கொண்டே பயணம் செய்தது.
“எனக்கு ஆண்டவனைப் பாத்து வரம் கேட்கணும். அவர் எங்கே இருப்பார்? எனக்கு யாராவது வழி சொல்லுங்களேன்.” என்று கேட்டுக் கொண்டே பயணம் செய்தது ராக்கி. யாருக்குமே வழி தெரியவில்லை. அப்போது வழியில் ராக்கி ஒரு யானையைச் சந்தித்தது. அந்த யானை, ராக்கியைப் பார்த்து இரக்கம் காட்டியது.
“கடவுள் எங்கே இருப்பார்னு எனக்குத் தெரியாது. ஆனால் மேற்குப் பக்கம் இன்னும் கொஞ்ச தூரம் நடந்து போனால் ஒரு மலை தெரியும். அந்த மலை உச்சியில் ஒரு குகையில் வன தேவதை இருக்கு. அவ கிட்ட உதவி கேளு.” என்று சொன்னது.
ராக்கியும் மகிழ்ச்சியுடன் மேற்குத் திசையில் பயணித்து, மலையில் ஏறி குகையையும் அடைந்தது. குகையின் வாசலில் நின்று கொண்டிருந்த தேவதையை அடையாளம் கண்டு கொண்ட ராக்கி, பணிவோடு வணங்கியது.
“என்ன வேணும் ராக்கி?” என்று பரிவோடு கேட்டாள் அந்த தேவதை.
“என்னோட நிறத்தை மாத்திக்கணும். அதுக்காகக் கடவுளைச் சந்திக்கணும்.”
“கடவுளைச் சந்திக்க ரொம்ப தூரம் போகணும். அப்படிப் போயி அவரைச் சந்திச்சா, அதுக்கப்புறம் இங்கே திரும்பி வரமுடியாது. அங்கேயே இருக்கணும். உனக்கு வேணுங்கற வரத்தை நானே தரேன். எங்கிட்டயே கேளு.” என்று சொன்னதும், ராக்கிக்கு சந்தோஷம்.
‘எது எப்படியோ வந்த வேலை முடிஞ்சா சரி!’ என்று நினைத்த ராக்கி, தன் மனதிலிருந்த ஆசையை வெளியிட்டது.
“எனக்குப் பளிச்சுன்னு ஒரு நிறம் வேணும். ஒரு நல்ல வயலட் கலரில் என்னை மாத்திடறீங்களா?”
“நல்லா யோசிச்சுக்கோ. திரும்பத் திரும்ப மாத்தறது ரொம்பக் கஷ்டம்.”
“அதெல்லாம் யோசிசிட்டுத்தான் வந்திருக்கேன். நீங்க சொன்னபடி வரம் தாங்க.”
ராக்கியின் பிடிவாதத்தைக் கண்டு வியந்த தேவதை, தன் கையில் இருந்த மந்திரக்கோலைச் சுழற்ற, அதுவரை பச்சை நிறத்தில் இருந்த ராக்கி, நல்ல வயலட் நிறத்தில் மாறிவிட்டது. தேவதைக்கு நன்றி சொன்ன ராக்கி, தன்னுடைய காட்டுக்கே வந்து சேர்ந்தது. பெருமையுடன் நடந்து வந்த ராக்கியை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. எல்லா விலங்குகளும் அதைக் கண்டு பயந்து ஓடின.
அம்மா, அப்பா எதிரே சென்று பெருமையுடன் நின்றது ராக்கி. அவர்களுக்கு ராக்கியின் புதிய தோற்றம் பிடிக்கவில்லை. இருந்தாலும் ஒன்றும் சொல்லவில்லை.
வயலட் நிறத்தில் இருந்த ராக்கியிடம் எந்த டைனோசரும் ஒட்டவில்லை. பயந்து ஓடின. ராக்கியுடன் விளையாட யாருமே வராததால் கொஞ்ச நாட்களில் ராக்கிக்கு போரடிக்க ஆரம்பித்தது. தனிமை வாட்டியபோது தவறு புரிந்தது. இந்த முறை அம்மா, அப்பாவிடம் பணிவோடு நின்று தன்னுடைய தவறை உணர்ந்து பேசிய ராக்கியை அன்போடு பார்த்து ஆறுதல் கூறின அந்தப் பெரிய டைனோசர்கள்.
“தேவதை கிட்டப் போயி திரும்பவும் பழையபடி மாறமுடியுமான்னு பாக்கறேன்.” என்று கிளம்பிய ராக்கிக்கு விடை கொடுத்து அனுப்பின. எப்படியோ ராக்கி மனம் மாறியதில் அவற்றுக்கு மகிழ்ச்சியே.
கஷ்டப்பட்டு மீண்டும் தேவதை இருக்கும் குகையை அடைந்த ராக்கி, தேவதையின் முன்னால் தலை குனிந்து நின்றது. தேவதைக்குப் புரிந்து விட்டது.
“இப்பவாவது நல்லா யோசிச்சு முடிவெடுத்திருக்கயா? இந்தத் தடவை மாத்தினதுக்கு அப்புறம் நிரந்தரமாக அதே நிறம்தான் இருக்கும். திரும்ப மாத்த முடியாது. பரவாயில்லையா?” என்று தேவதை கேட்டபோது ராக்கியும் புரிந்து கொண்டு ஒத்துக் கொண்டது.
மனம் திருந்தித் தன் பழைய தோற்றத்தில் திரும்பிய ராக்கியை எல்லா டைனோசர்களும் வரவேற்று அன்பு செலுத்தின. மீண்டும் ராக்கியுடன் விளையாட முன்வந்தன.
ராக்கி அதற்குப் பிறகு சந்தோஷமாகக் காட்டில் வாழ்ந்தது.
– புவனா சந்திரசேகரன்.