மைனா ராணி ஐந்து வயது குழந்தை. தாயார் வீட்டு வேலை செய்பவர். தாயார் வேலைக்கு சென்ற பிறகு வீடே இவளது உலகம்.
இவளிடம் நிறைய பொம்மைகள் இருந்தது.
தாயார் வேலைக்கு சென்ற பிறகு மொத்த பொம்மைகளையும் அடுக்கி வைத்து அதோடு விளையாடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தாள்.
அன்றைக்கும் மொத்த பொம்மைகளையும் வரிசையாக அடுக்கி கொண்டிருக்க அப்படியே தூங்கி இருந்தாள்.
அப்படியே கனவுலகத்திற்கு செல்ல, இவள் அடுக்கி வைத்திருந்த ஒவ்வொரு பொம்மைகளுமே உயிரோடு அங்கு நடமாடிக் கொண்டிருந்தது.
பெரிய பெரிய மரங்களும் பூக்களும் பூத்துக் குலுங்குகின்ற அழகான காடு.
ஒருபுறம் அருவிச் சத்தம் காதில் சங்கீதமாய் ஒலிக்க , குயில்களும், குருவிகளும் தன்னை மறந்து பாடிக் கொண்டிருந்த அழகான மாலை நேரம்.
பூக்களால் அலங்கரிக்கப்பட்ட இருக்கை ஒன்று இருக்க, அங்கே மைனர் ராணி அழகாக அமர்ந்திருந்தாள்.

ஒரு ராணியின் தோரணையில், “இன்றைய வழக்கு என்ன?” கம்பீரமாக குரல் கொடுக்க, கிளி ஒன்று பறந்து வந்து அவளுடைய தோளில் அமர்ந்தது.
அது பேசும் கிளி, மெல்ல ராணியின் காதல் சொல்லிவிட்டு பறக்க, இப்போது கூட்டத்தை பார்த்தாள்.
இரண்டு வரிக்குதிரைகள் முன்னால் வந்து நின்றன.
“எங்களுக்கும் குதிரை இனங்களுக்கும் அடிக்கடி தகராறு நடக்கிறது .
அவர்கள் எங்களை பார்க்கும் போதெல்லாம் குதிரைகள் ஆக்ரோஷத்தோடு எங்களை தாக்க வருகிறது .
இதை நீங்கள் தான் கேட்டு சரி செய்ய வேண்டும் “என்று வரிக்குதிரை புகார் சொல்ல” ஓரமாக நின்றிருந்த குதிரை முன்னால் வந்து நின்றது.
“வரிக்குதிரை இனம் எங்கள் இனத்தை பார்க்கும்போது எல்லாம் எங்களை ஏளனமாக பேசுகிறது.
அழகாக இல்லை. அருவருப்பாக இருப்பதாக கூறுகிறது.
அதனாலேயே அடிக்கடி சண்டை வருகிறது. இதற்கு காரணம் நாங்கள் கிடையாது.
அவர்கள் தான்” என்று சொல்ல வரிக்குதிரையை திரும்பி பார்த்தாள்.
“எங்கள் இனத்தில் எல்லோரும் அப்படி கூறுவது கிடையாது . யாரோ ஒருத்தர் சொன்னதை மனதில் வைத்துக் கொண்டு எங்கள் இனத்தைப் பார்க்கும் போதெல்லாம் சண்டையிடுகிறது .
நிறைய பேருக்கு காயம் ஏற்படுகிறது. இதனாலேயே எங்கள் இனம் அழிந்து விடுமோ என்கின்ற பயம் வந்துவிட்டது.
ஏற்கனவே சிங்கம் ஒருபுறம் எங்களை பார்த்தால் அடித்து உணவாக உண்டு விடுகிறது.
அதனோடு போராடுவதே பெரியதாக இருக்கும் இந்த நேரத்தில் இவர்களும் எங்களிடம் வந்து சண்டையிட்டால் என்ன செய்வது.”
“எத்தனை வருடமாக இந்த சண்டை நடக்கிறது.” என்று மைனா ராணி பொதுவாக கேட்க, “ஆண்டாண்டு காலமாக” என இருவருமே பதில் கூறினர்.
இப்போது மறுபடியும் காதிற்கு அருகே வந்த கிளி வேறொரு விஷயத்தை சொல்லி விட்டுச் செல்ல,
“சரி நான் இப்போது உங்களுக்கு தீர்ப்பு சொல்கிறேன். அதற்கு நீங்கள் இருவருமே கட்டுப்பட வேண்டும்.
அழகு என்பது நிரந்தரம் அல்ல இதை இருவருமே புரிந்து கொள்ள வேண்டும்.”
அதன் பின், வரிக்குதிரையை பார்த்து,
“ஒவ்வொருவரும் தன்னுடைய திறமையாலும் தன்னுடைய செய்கையாலும் அழகாக தெரிய வேண்டுமே தவிர புற அழகை அழகாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
இதுதான் நான் கொடுக்கும் தீர்ப்பு. இவர்களின் இனம் மட்டுமல்ல. இங்கு காட்டில் வசிக்கும் அனைத்து விலங்குகளுக்கும் பொதுவான தீர்ப்பு இது.
இனி இது போல ஒரு வழக்கு இந்த இடத்திற்கு வரக்கூடாது. இன்று முதல் இருவரும் நண்பர்களாகப் பழக வேண்டும்.
ஒற்றுமையாக இருந்து உங்கள் இனத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்க வேண்டும். இதுதான் நான் கொடுக்கும் தீர்ப்பு. இத்தோடு இந்த அவை கலையட்டும்.” என்று சொல்ல அனைத்து விலங்குகளுமே நகர ஆரம்பித்தது.
சட்டென விழித்து எழுந்து அமர்ந்தாள் மைனா ராணி.
கண்டது கனவா அல்லது நிஜமாகவே அப்படி ஒரு உலகத்திற்கு சென்றாளா என்ற சந்தேகம் தோன்ற, அடுக்கி வைத்திருந்த பொம்மைகளை பார்த்தாள்.
காட்டில் மொத்த விலங்குகளுமே எந்த வரிசையில் நின்று இருந்ததோ அது போலவே அவைகளும் வரிசையாக நின்று இருப்பதாக தோன்றியது.
– கவிசெளமி.