அமைதிப் பாதையை நாடி

போரோடு வாழும் இனங்கள் – மொத்த
வேரோடு விழுந்த மரங்கள் – நல்ல
பேரோடு வாழும் இனங்கள் – மலைபோல்
சீரோடு நிமிர்ந்த மரங்கள்!

இனத்தின் பேரால், நாட்டின் பேரால்
எல்லைகள் போட்டு வாழும் உலகில்,
சினத்தில் விழுந்து சீற்றம் கொண்டால்,
சிறந்த வாழ்வு எப்படி அமையும்?

உணர்ச்சியைத் தள்ளி, உண்மையை அள்ளி,
உலகைப் பார்ப்போம், ஒற்றுமை காப்போம்,
வளர்ச்சியை எண்ணி, வளமையை எண்ணி,
வாழ்வைப் பார்ப்போம் வலிமை சேர்ப்போம்!

இயற்கை வழங்கும் இன்பம் கோடி;
என்றும் நடப்போம் அதனைத் தேடி;
செயற்க்கை கொடுக்கும் துன்பம் ஒதுக்கி,
செல்வோம் அமைதியின் பாதையை நாடி.

விண்ணில் சொர்க்கம் மிதக்கும் கதையை
விழுந்து வணங்கும் நிலையை மாற்றி,
மண்ணில் படைக்க உறுதியை ஏற்றி,
மகிழ்வாய் வாழ நாளும் முயல்வோம்!

– இளங்கோ கண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *