மாம்பழமாம் மாம்பழம்
மனதைக் கவரும் மாம்பழம்!
சின்னச் சின்னக் குழந்தைகள்
விரும்பி உண்ணும் மாம்பழம்!
பெரியவரும் தேடித் தேடி
எடுத்து உண்ணும் மாம்பழம்!
மஞ்சள், சிவப்பு, பச்சை என்று
கண்ணைக் கவரும் வண்ணங்கள்!
பார்த்த யாரும் சுவைக்காமல்
நகர்வதில்லை இதனை விட்டு!
இனிப்பும் உண்டு புளிப்பும் உண்டு!
இரண்டும் கலந்த சுவையும் உண்டு!

இங்கு நான் இருக்கிறேன் என்று
வாசனையால் கூவி அழைக்கும்!
கோடைக் காலம் வந்துவிட்டால்
எல்லோருக்கும் கொண்டாட்டம்!
தினம் தினமும் எடுத்துத் தின்ன
மாம்பழம் உண்டு எங்கள் வீட்டில்
மா, பலா, வாழை முக்கனிகளென்று
அன்றே தமிழன் அறிவித்தானே!
மூன்று கனிகள் இருந்தாலும்
முதலிடம் மாம்பழத்திற்கென்றான்!
பழங்களின் அரசன் மா அன்றோ!
வாங்கி நாமும் தினமும் உண்போம்!
மகிழ்ச்சியுடன் ருசித்து ருசித்து
மாம்பழத்தைக் கொண்டாடுவோம்!
சேலத்து குண்டு, கண் கவரும் கிரேப்
ருமேனியா, பங்கனபள்ளி, பாலாமணி
இமாம் பஸந்த், அல்ஃபோன்ஸா, கேசர்,
நீலம், மல்கோவா, காசாலட்டு மற்றும்
கிளி மூக்கு, தஸேரி, லங்க்ரா, சௌஸா
என்று எண்ணினாலும் முடிவதில்லை!
எத்தனை எத்தனையோ மாம்பழங்கள்!
நம் நாட்டில் விளையும் அற்புதங்கள்!
ருசிக்காக உண்கிறோம் என்றால்
இல்லை இல்லை என்போர் பெரியோர்!
வைட்டமின்கள், நார்ச்சத்தைத் தந்து
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூட்டும்!
கண்களையும் தோலையும் காப்பதோடு
புற்றுநோயை விரட்டியடிக்கும்!
இரத்த அழுத்தத்தை சீராக்குவதால்
இதயத்தை நன்கு பாதுகாக்கும் !
ருசியும் உண்டு! நல்ல குணமும் உண்டு
வேண்டாமென்று விட்டிடுவோமோ?
ஓடிச்சென்று மாம்பழங்கள் நிறைய
வாங்கி உண்டு மகிழ்ந்திருப்போம்!
– புவனா சந்திரசேகரன்.