ஆனியின் அன்புசூழ் உலகு – 12

(Anne of Green Gables – By Lucy Maud Montgomery)
தமிழாக்கம் – ஞா.கலையரசி

ஆனி போன பிறகு மரிலா குழப்பமான மனநிலையுடனேயே மாலை வேலைகளைப் பார்த்தார். பொக்கிஷமாக அவர் பாதுகாத்து வைத்து இருந்த உடை ஊசி (Brooch) காணாமல் போனதை நினைத்துக் கவலைப்பட்டார்.
‘ஆனி அதைத் தொலைத்து இருந்தால் என்ன செய்வது? ஆனி அதை எடுத்துவிட்டு இல்லை என்று மறுப்பது எவ்வளவு கெட்ட குணம்? அதுவும் அப்பாவியான அந்த முகத்தை வைத்துக் கொண்டு மறுப்பது எவ்வளவு பொல்லாத குணம்?’ என்று மரிலா சிந்தித்தார்.
‘அதை அவள் திருடி இருப்பாள் என்று நான் நினைக்கவில்லை. அவள் அதை வெளியே எடுத்துச் சென்று தொலைத்து இருக்க வேண்டும். நான் தண்டனை கொடுப்பேன் என்று பயந்து கொண்டு அவள் உண்மையைச் சொல்ல மறுக்கிறாள். இந்த மாதிரி அவள் பொய் சொல்வதை நினைத்தாலே பயமாக இருக்கிறது. இப்படி நம்ப முடியாத ஒரு குழந்தையை வீட்டில் வைத்து இருப்பது ரொம்ப ஆபத்து. அவள் உண்மையை ஒத்துக் கொண்டால் போதும்; நான் உடை ஊசி தொலைந்ததைக் கூடப் பெரிது பண்ண மாட்டேன்.’ என்று மேலும் யோசித்தார் மரிலா.
மரிலா மாலை வேளையில் இடையிடையே அறைக்குச் சென்று மீண்டும் தேடிப் பார்த்தார். அவர் தூங்குவதற்கு முன் மீண்டும் ஆனியின் அறைக்குச் சென்று பார்த்தும் பலன் எதுவும் கிடைக்கவில்லை. ஆனி தனக்கு எதுவும் தெரியாது என்று வலியுறுத்திச் சொன்னாள். ‘ஆனி தான் எடுத்திருக்க வேண்டும்.’ என்று மரிலா உறுதியாக நம்பினார்.
மறுநாள் காலையில் மரிலா மாத்யூவிடம் விஷயத்தைச் சொன்னார். அதைக் கேட்ட மாத்யூவுக்குக் குழப்பம் ஏற்பட்டது. உடனே அவரால் ஆனி மேல் வைத்த நம்பிக்கையை இழக்க முடியவில்லை. ஆனால் சந்தர்ப்பமும், சூழ்நிலையும் அவளுக்கு எதிராக இருந்ததால் அவர் ஒத்துக் கொள்ள வேண்டியதாயிற்று.
“பீரோவுக்குப் பின்னாடி விழலேன்னு உறுதியாப் பார்த்துட்டியா?” என்று மட்டும் கேட்டார்.
“பீரோவை நகர்த்தி எல்லா டிராயரோட மூலை முடுக்கையும் பார்த்துட்டேன். அந்த ஊசி போய் விட்டது. அந்தக் குழந்தை எடுத்துட்டுப் பொய் சொல்றாள். அது தான் உண்மை மாத்யூ.”

படம் – அப்பு சிவா


“சரி. இப்ப என்ன செய்ய போறே?” என்றார் மாத்யூ.
“அவள் உண்மையை ஒத்துக்கிற வரைக்கும் அந்த அறையிலேயே தான் இருக்கணும். அப்புறம் என்ன செய்யலாம்னு பார்க்கலாம். உடை ஊசியை எடுத்துட்டுப் போன இடத்தை சொன்னால்தான் அதைக் கண்டுபிடிக்க முடியும். எப்படி இருந்தாலும் அவளுக்குக் கடுமையான தண்டனை கொடுக்கணும் மாத்யூ.” என்றார் மரிலா.
“சரி நீ தண்டனை கொடு. நான் இதில் செய்யறதுக்கு எதுவும் இல்லை. நான் தலையிடக் கூடாதுன்னு ஏற்கெனவே நீ என்னை எச்சரிக்கை செஞ்சது ஞாபகம் இருக்கா?” என்றார் மாத்யூ.
மாத்யூவும் இப்படி சொல்லி விட்டதால் மரிலாவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. யோசனை கேட்டுத் திருமதி லிண்டேவிடமும் செல்ல முடியாது. திரும்பவும் ஆனி அறைக்குச் சென்று கேட்டார். ஆனால் அவள் தான் எடுக்கவில்லை என்றே சொன்னாள்.
“நீ உண்மையைச் சொல்ற வரைக்கும் இந்த அறையிலேயே தான் இருக்கணும் ஆனி.” தீர்மானமாகச் சொன்னார் மரிலா.
“ஆனா நாளைக்குப் பிக்னிக் இருக்கே!” என்று அழுதாள் ஆனி. “நாளைக்கு மதியம் மட்டும் என்னை வெளியே போக விடுங்க. அதற்குப் பிறகு எவ்வளவு நாள் வேணுமானாலும் நான் இங்கேயே மகிழ்ச்சியா இருப்பேன். நான் பிக்னிக் மட்டும் போகணும்.” என்றாள் ஆனி.
“நீ உண்மையைச் சொல்ற வரைக்கும் பிக்னிக் மட்டும் இல்ல, எங்கேயும் போக முடியாது.” என்று சொன்ன மரிலா கதவைச் சாத்திவிட்டுப் போய்விட்டார்.
புதன் காலையில் மரிலா ஆனிக்குக் காலை உணவு எடுத்துச் சென்ற போது, கண்ணில் நீர் பளபளக்க ஆனி படுக்கையில் உட்கார்ந்து இருந்தாள்.
“மரிலா! நான் குற்றத்தை ஒப்புக் கொண்டு உண்மையைச் சொல்றேன்.” என்றாள் ஆனி.
“சரி!” என்ற மரிலா தான் கொடுத்த தண்டனை வேலை செய்கிறது என்ற எண்ணத்துடன் தட்டைக் கீழே வைத்து விட்டுக் கேட்கத் தயாரானார்.
“ம். சொல்லு. என்ன சொல்றேன்னு கேட்கிறேன்” என்றார்.
“நான்தான் அந்த உடை ஊசியை எடுத்தேன். அது ரொம்ப அழகா இருந்துது. அதை எடுத்து என் உடையில குத்திப் பார்த்தேன். நீங்க திரும்பி வருவதற்குள் அதைத் திரும்ப கொண்டு வந்து வைச்சிடலாம்னு நினைச்சேன். அதை என் உடையில் குத்திக்கிட்டு ஏரிக்குப் போனேன். பாலத்து மேல போன போது, அதைக் கையில் எடுத்துப் பார்த்தேன். சூரிய ஒளியில அது அப்படி பிரகாசிச்சுது. நான் அந்தப் பாலத்துல நின்னு குனிஞ்சு தண்ணியைப் பார்த்த போது, அது என் விரலில் இருந்து நழுவி ஏரித் தண்ணீரில் விழுந்து ஆழத்துக்குப் போய் விட்டது. இது தான் நடந்தது.” என்று சொல்லி முடித்தாள் ஆனி.
“நான் பொக்கிஷமாக நினைத்த உடை ஊசியை இவள் எடுத்துத் தொலைத்துவிட்டாள்; அதைப் பற்றி எந்தக் கவலையோ வருத்தமோ இல்லாமல் இப்படி அமைதியாக உட்கார்ந்து கொண்டு சொல்கிறாளே!” என்று நினைத்தபோது, மரிலாவுக்குக் கோபம் தலைக்கேறியது.
“ஆனி இது பயங்கரம். நான் இது வரை கேள்வியே படாத அளவுக்கு நீ ரொம்பக் கெட்ட பெண்.” என்றார் மரிலா.
“ஆமாம். நான் மோசமானவள் தான். நான் தண்டிக்கப் பட வேண்டியவள் தான். எனக்குத் தண்டனை கொடுக்க வேண்டியது உங்கள் கடமை. நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன். இப்ப நான் பிக்னிக் போக விரும்புறேன்.”
“பிக்னிக்கா? நீ பிக்னிக் போக முடியாது ஆனி ஷெர்லி. அது தான் உனக்குத் தண்டனை. நீ செஞ்ச வேலைக்கு அது பாதியளவு கூட கடுமையான தண்டனை இல்லை.”
“பிக்னிக் போக முடியாதா?” மரிலாவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள் ஆனி.
“பிக்னிக் போகலாம்னு நீங்க அன்னிக்கு பிராமிஸ் பண்ணுனீங்க. நான் பிக்னிக் போகணும். அதுக்காகத் தான் நான் குற்றத்தை ஒத்துக்கிட்டேன். என்னை எப்படி வேணும்னாலும் தண்டிங்க. ஆனா தயவுசெஞ்சு என்னை பிக்னிக் போக விடுங்க. மறுபடி ஐஸ்கிரீம் சாப்பிட எனக்கு வாய்ப்பே கிடைக்காமல் போகலாம்.”
மரிலா ஆனியின் கைகளை வலுக்கட்டாயமாக விலக்கி விட்டார்.
“நீ கெஞ்ச வேண்டாம் ஆனி. நீ பிக்னிக் போகப் போறது இல்ல. அது தான் இறுதி முடிவு. இனி ஒரு வார்த்தை பேசாதே”.
எவ்வளவு கெஞ்சினாலும் மரிலாவைச் சம்மதிக்க வைக்க முடியாது என்று ஆனிக்குப் புரிந்தது. ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல் தன் இரு கைகளையும் சேர்த்துப் பிடித்தபடி, படுக்கையில் குனிந்து வீறிட்டு அழுதாள் ஆனி.
‘இவளுக்குப் பித்து பிடித்து விட்டது போல இருக்கிறது. இவளை மாதிரி எந்தக் குழந்தையும் நடந்து கொள்ளாது. ரொம்ப மோசம். திருமதி லிண்டே ஆரம்பத்திலேயே சரியாகச் சொன்னார். ஆனால் நான் தான் இவளை வளர்க்க ஒப்புக் கொண்டேன். இதற்காக நான் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை’ என்று நினைத்தார் மரிலா.
மறுநாள் காலையில் மாடிப்படி அருகே நின்று ஆனியைக் கூப்பிட்டார். அழுது அழுது கண்ணீர் வடிந்து காய்ந்து போய் இருந்த சோகமான ஆனியின் முகம் வெளியே தெரிந்தது.
“சாப்பிடக் கீழே வா ஆனி.” என்று கூப்பிட்டார் மரிலா.
“எனக்குச் சாப்பாடு வேணாம் மரிலா” விம்மிக் கொண்டே சொன்னாள் ஆனி.
“என்னால் எதையும் சாப்பிட முடியாது. என் இதயம் நொறுங்கிவிட்டது. என் இதயத்தை உடைத்ததற்காக ஒரு நாள் உங்கள் மனசாட்சி உங்களைக் குத்தும். ஆனால் நான் உங்களை மன்னிக்கிறேன். ஆனால் எதையும் சாப்பிடச் சொல்லி என்னைக் கேட்காதீர்கள்.”
மரிலா திரும்பிச் சென்று மாத்யூவிடம் விஷயத்தைச் சொன்னார். அதைக் கேட்ட மாத்யூ என்ன செய்வது என்று தெரியாமல் ஆனியின் மீது இருந்த கருணைக்கும், நேர்மையின் மீது இருந்த பிடிப்புக்கும் இடையே மாட்டிக் கொண்டு தவித்தார்.
“சரி. அவள் அதை எடுத்திருக்கக் கூடாது மரிலா. அல்லது அதை எடுத்தது போல் கதை சொல்கிறாள். அவள் சுவாரசியமான குட்டிப் பெண். பிக்னிக் போக அவள் அவ்வளவு ஆசைப்படும் போது, அவளைப் போக விடாமல் தடுப்பது ரொம்பவும் கடுமையான தண்டனை என்று நீ நினைக்கவில்லையா?” என்றார் மாத்யூ.
“மாத்யூ! நீங்க சொல்றதைக் கேட்க ஆச்சரியமா இருக்கு. அவளை நான் அவ்வளவு சுதந்திரமா விட்டேன். ஆனால், தான் மோசமா நடந்துக்கிட்டதை அவள் உணர்ந்ததா தெரியல. தான் செஞ்சதுக்காக அவ வருத்தப்பட்டாக் கூட பரவாயில்லை. அது உங்களுக்குப் புரியுதா? ஆனா ஒவ்வொரு முறையும் நீங்க அவளுக்கு சப்போர்ட் பண்ணிப் பேசறீங்க.”
“அவள் ரொம்பச் சின்னப் பெண். அவளுக்கு முறையான வளர்ப்பு கிடைக்கல மரிலா.”
“இப்ப அவளுக்குக் கிடைக்குது.” என்றார் மரிலா கோபத்துடன். அதற்குப் பிறகு மாத்யூ எதுவும் பேசவில்லை.
காலை உணவுக்குப் பிறகு பாத்திரங்களைக் கழுவி முடித்தார் மரிலா. தம் கருப்புச் சால்வையில் ஒரு சின்னக் கிழிசலைப் பார்த்தது, அப்போது அவருக்கு நினைவுக்கு வந்தது. அதைத் தைக்கலாம் என்று அறைக்குச் சென்றார்.
டிரங்கு பெட்டியில் இருந்த அந்தச் சால்வையை எடுத்தார். அப்போது சன்னல் வழியாக உள்ளே விழுந்த சூரிய ஒளி பட்டு, சால்வையில் இருந்த ஏதோ ஒன்று பளீரென்று பிரகாசித்தது, அவர் கவனத்தைக் கவர்ந்தது. மரிலா டக்கென்று அது என்னவென்று பிடித்துப் பார்த்தார். அது தொலைந்து போனதாக அவர் தேடிய அவருடைய ஊதா உடை ஊசி! சால்வையில் இருந்த லேஸ் பகுதியில், அது மாட்டிக் கொண்டு இருந்தது.
‘ஏரி நீரில் விழுந்து விட்டதாக நினைத்த என் உடை ஊசி இங்கே பத்திரமாக இருக்கிறது. திங்கள் அன்று இந்தச் சால்வையை ஒரு நிமிடம் பீரோவில் வைத்து எடுத்தது என் நினைவுக்கு வருகிறது. அப்போது இந்த ஊசி சால்வை லேசில் மாட்டி இருக்க வேண்டும்.’ என்று நினைத்தார் மரிலா.
மரிலா சால்வையை எடுத்துக் கொண்டு ஆனி அறைக்குச் சென்றார். ஆனி அழுது முடித்துச் சன்னல் அருகே சோகமாக உட்கார்ந்து இருந்தாள்.
“ஆனி! இப்ப தான் என் கருப்புச் சால்வையில் ஒட்டிக்கிட்டு இருந்த உடை ஊசியைக் கண்டுபிடிச்சேன். இன்னிக்குக் காலையில நீ சொன்ன கதைக்கு என்ன அர்த்தம்னு, இப்ப எனக்குத் தெரியணும்.”
“நான் குற்றத்தை ஒப்புக் கொள்கிறவரைக்கும் இந்த அறையில் இருக்கணும்னு சொன்னீங்க. பிக்னிக் போகணும்னு நினைச்சி நான் எடுத்துச் தொலைச்சிட்டதாச் சொன்னேன். நேத்து ராத்திரி பூராவும் என்ன சொல்லலாம்னு யோசிச்சிச் சொன்னேன். ஆனால் நீங்க என்னை பிக்னிக் அனுப்பலை. நான் செஞ்சது எல்லாம் வீணாப் போயிடுச்சி.”
மரிலாவுக்குச் சிரிப்பு வந்தது. அதே சமயம் மனசாட்சி உறுத்தியது.
“ஆனி! நான் தப்பு செஞ்சிட்டேன். எடுக்கலேன்னு சொன்ன உன் வார்த்தையை நான் சந்தேகப்பட்டிருக்கக் கூடாது. ஆனால் இது மாதிரி நீ செய்யாத ஒன்றைச் செஞ்சது மாதிரி சொல்லக் கூடாது. அது ரொம்பத் தப்பு. ஆனால் அந்த மாதிரி நீ சொல்லும்படி நான் தூண்டிட்டேன். நானும் உன்னை மன்னிச்சிடறேன். நீயும் என்னை மன்னிச்சிடு. சீக்கிரம் பிக்னிக் போகத் தயாராகு.”
ஆனி ராக்கெட் போலப் பாய்ந்து எழுந்தாள்.
“பிக்னிக்குக்கு நேரமாகி விடவில்லையா?”
“இல்லை. இரண்டு மணிக்குத் தான். முகத்தை அலம்பித் தலையைச் சீவு. நான் உனக்கு பிஸ்கட் கூடை தயார் பண்ணித் தாரேன். ஜெரி உன்னைக் குதிரை வண்டியில் கொண்டு போய் விடுவான்.”
“ஓ! மரிலா! அஞ்சு நிமிடத்துக்கு முன்னாடி நான் பிறந்தே இருக்கக் கூடாதுன்னு அழுதுகிட்டு இருந்தேன். இப்ப ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன்” என்று சொல்லிவிட்டு முகம் கழுவ ஓடினாள் ஆனி.

– தொடரும்..

ஞா. கலையரசி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *