வாங்க குட்டீஸ். இன்று நாம் நம் சூரிய குடும்பத்தில் ரொம்ப தூரம் தள்ளி இருக்கிற, ‘கோள்களின் அரசன்’ வியாழன் கோளைப் போய் பார்க்கப் போறோம். வாங்க போகலாம்.
ஒளி வண்டியில் ஏறி 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னால் வந்தாச்சி. பால்வெளியின் ஒரு ஓரத்தில் குழந்தை சூரியன் இப்போதுதான் உருவாகி தன் பிஞ்சு ஒளிக்கதிர்களால் பிரகாசமாக சிரிக்கிறது. சூரியனைச் சுற்றி இருக்கும் தூசிகள், பாறைகள் ஆங்காங்கே ஒன்று சேருகின்றன. முதன்முதலில் உருவாகியிருப்பது நாம் பார்க்க வந்த வியாழன் கோள் தான். ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களால் உருவாகி ஒரு காற்று அரக்கனாக சூரியனைச் சுற்ற ஆரம்பிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக சூரியனை நோக்கி நகர்கிறது. தன் பாதையில் உள்ள பாறைகளை தனதாக்கிக் கொள்கிறது. இல்லையென்றால் அண்டத்திற்குள் தூக்கியெறிகிறது. அப்பா! எத்தனை ஆக்ரோசமான நடனம்!

வியாழனின் வருகையால் புதன் கோளுக்கும் வியாழனுக்கும் நடுவில் இருக்கும் தூசிகள், பாறைகள் பெருமளவில் குறைந்துவிட்டன. அந்த தூசிகளும் பாறைகளும் இருந்திருந்தால் புதன் கோளுக்கும் வியாழனுக்கும் நடுவில் ஒரு கோள் உருவாகியிருக்கலாம்.
இதோ இன்னும் நகர்ந்து புதன் கோளின் வட்டப்பாதைக்கு வந்துவிட்டது. இங்கேயும் அதே வேலைதான். பாறைகளை, தூசிகளைக் கபளீகரம் செய்கிறது. ஓகோ! மிச்சமிருக்கிற பாறைகளால் உருவானதால் தான், புதன் கோள், நம் பூமி, வெள்ளியை விட மிகச்சிறியதாக இருக்கிறதா?
அச்சச்சோ! அடுத்து இருப்பது நம் பூமியின் பாதை. இங்கேயும் வந்து வியாழன் தன் வேலையைக் காட்டினால், பூமி எப்படி உருவாகும்? வாங்க.. என்ன நடக்குது, பார்க்கலாம்..
ஆஹா! என்ன அதிசயம்! வியாழனின் வேகம் குறைகிறது. சுழன்ற படி சூரியனை நோக்கி வந்து கொண்டிருந்த, அடுத்து நம் பூமியாக உருவாகப்போகும் பாறைகளையும் தூசிகளையும் முழுங்க வந்த வியாழனின் வேகம் குறைகிறது.
ஏன்? வாவ்! அங்கே பாருங்க! வியாழனைப் போலவே இன்னொரு வாயு அரக்கன் உருவாகியிருக்கிறான். அது நம் சனி கோள்!! சனி தன் ஈர்ப்பு விசையால் வியாழன் மேலும் முன்னே செல்ல விடாமல் தடுக்கிறது. வியாழனின் வேகம் குறைந்தது மட்டுமில்லை, மீண்டும் தன் இடத்தை நோக்கி, அதாவது சூரியனின் வெளிவட்டப்பாதைக்கு சனிக்கோளோடு சேர்ந்து செல்கிறது.
மெதுவாக இப்போது இருக்கும் இடத்திற்கு வந்துவிட்டது. செவ்வாய், பூமி, வெள்ளி, புதன் கோள்கள் அதனதன் இடத்தில் உருவாகியிருக்கின்றன.
இன்னும் சில கோடி வருடங்களில் பூமியில் உயிர்கள் உருவாகிவிடும்!
அடக்கடவுளே! ஒரு பெரிய மலையளவிற்கு இருக்கக்கூடிய பாறை பூமியை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. இது பூமியைத் தாக்கினால் நம் பூமிக்குழந்தை சுக்குநூறாகிவிடுமே! குட்டீஸ்! இந்த அதிசயத்தைப் பாருங்கள். வியாழன் கோள் தன் ஈர்ப்பு விசையால் அந்த பாறையை தனக்குள் இழுத்துக் கொண்டுவிட்டது. அதைத்தாண்டி எந்த பொருளாலும் நம் பூமிக்கு அருகில் வரமுடியவில்லை.
ஆனா பாருங்க.. இந்த வியாழன் நல்லவனா, கெட்டவனா என்றே தெரியவில்லை. அந்த பக்கம் இந்த பக்கம் போகும் பாறைகளை யெல்லாம் பிடித்துக்கொண்டு அதோட நிலாவாக மாற்றி வைத்துக் கொண்டிருக்கிறது. சரியான சேட்டை பிடித்த கோளாக இருக்கு! எண்ணிப் பார்ப்போமா? அம்மாடி! மொத்தம் 95 நிலாக்கள் இருக்கு. வியாழனில் நின்று பார்த்தால் அதன் வானத்தில் 95 நிலாக்கள் இருக்கும். அட! அட! எத்தனை கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
ஆனா ஆசைப்பட்டு அதோட காற்றுவெளிக்குள் போயிடாதீங்க. அது ஒரு வாயு கோள். அப்படின்னா பாறையெல்லாம் இருக்காது. ஹைட்ரஜன் காற்றாகவும் நடுவில் திரவநிலையிலும் இருக்கு. நம் பூமியைப்போல இரும்பு, கல் பாறை என் கண்ணிற்குப் படவில்லை. அது மட்டுமில்லை.. நம் பூமி அளவிற்குப் பெரிய புயல் வேறு இருக்கு. அதுவும், ஒரு நாள், இரண்டுநாள் இல்லை. பல நூறு வருடங்களாக!
எது எப்படியோ, கோடி கோடி கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருந்தும் வியாழன்கோள் நம் பூமியைப் பாதுகாக்குது. சூரிய குடும்பத்தின் மற்ற கோள்கள் இப்போது இருக்கும் நிலைக்கு பெரிய காரணம் வியாழன் தான்.
ஓகே குட்டீஸ்.. 2025க்கு வந்துட்டோம். நல்லா இருந்ததா பயணம்? வியாழன் பற்றி நீங்க தெரிஞ்சிகிட்டதை உங்க நண்பர்களோடு பகிர்ந்துக்கோங்க. அடுத்த மாதம், மீண்டும் சந்திக்கலாம். பை!!
– வித்யா செல்வம்