யார் தங்களை அழைப்பது என்று இருவரும் ஒருசேர திரும்பி, மேலே பார்த்தபொழுது விடுதி பணியாளர் மேலே வரும்படி கையசைத்தார்.
“என்ன சார்?” என்றார், நவீன்.
“நீங்க யூடியூபராமே?” என்று ஆச்சர்யப்பட்டார், அவர்.
“ஆமாம்!” என்றார், மதன்
“நீங்க வீடியோ எடுக்கும் போது, என்னை பத்தியும் சொல்லி வீடியோ போடுங்களேன்.” என்றார், அவர்.
“நாங்க மேலே வந்த பிறகு, நீங்க இதை சொல்லியிருக்கலாமே?” என்று எரிச்சலானார், மதன்.
“வேலை பார்க்கப் போனா உங்களை பார்க்க முடியாதே, அதான் நீங்க இந்த தண்ணிக்குள்ளே இறங்கும் முன்னே சொன்னேன்” என்றார், அவர்.
கோபமாக முறைத்த மதனின் தோளை தட்டிய நவீன், “சரி சார்! இந்த டேமை பத்தி சொல்லுங்க.” என்றார்.
“சார்! இது டேம் இல்ல. இது ஏரி. டேமை பார்க்கணும்னா இன்னும் கொஞ்ச தூரம் போகணும்.” என்றார்.

அவரை வீடியோ எடுத்து அனுப்பி விட்டு ஏரி நீரில் இறங்கினர், இருவரும்.
சிற்றோடைகளிலிருந்து வந்த நீர் ஏரியை நிரப்பிக்கொண்டிருந்தது. வெயில் காலமாதலால், சிற்றோடையில் நீர் வரத்து குறைவாகவே இருந்தது.
வேறெங்கெல்லாம் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தவர்கள், படங்களை எடுத்து விட்டு மேலேறினர்.
சூரிய உதயத்தினால் அங்கிருந்த மெல்லிய பனி விலகியது. கதிர்களால் ஏரி மின்ன ஆரம்பித்தது.
இருவரும் அடுத்திருந்த தேயிலைத் தோட்டங்களை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.
“யானைய பார்த்தாச்சு! இந்த புலி எல்லாம் எப்போ பார்ப்போம்?” என்றார், மதன்.
“புலியை பாக்கணுமா?” என்று ஆச்சர்யப்பட்டவர், “இது என்ன ஜு வா? பார்க்கிற இடமெல்லாம் விலங்குகள் இருக்கிறதுக்கு?” என்றார், நவீன்.
“அப்புறம் எங்கேயிருக்கும்டா?”- மதன்
“சொல்லாம நீ விடுவியாடா? இது பெரியார், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு பக்கத்துல இருக்கிறதால, இதை மேகமலை புலிகள் சரணாலயம்னு அறிவிச்சுட்டாங்க…” என்றார், நவீன்.
“புலிகள் சரணாலயம்னு பேரிருந்தால், புலிகள் இருக்கணுமேடா?” என்று வினா எழுப்பினார் மதன்.
– தொடரும்..
– தேவி பிரபா