கீச் கீச்
கா கா கா

க்ர் க்ர் கி க்க்

இப்படி பல விதமான ஒலிகள் கேட்டு கண் விழித்தாள் கவிநயா.

கவிநயா மூன்றாம் வகுப்பு படித்தாள். பரிட்சை முடிந்து விடுமுறை. அத்தை வீட்டுக்கு வந்திருக்கிறாள்.

எழுந்து சென்று ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள். பக்கத்து வீட்டு காம்பவுண்ட் சுவரை ஒட்டி நிறைய அணில்கள், தவிட்டுக் குருவிகள், காகங்கள் கத்திக் கொண்டிருந்தன.

அந்த வீட்டின் உள்ளேயும் வெளியேயும் பறந்து தவித்துக் கொண்டு இருந்தன பறவைகள்.

அணில்களும் கூச்சல் இட்டுக் கொண்டிருந்தன.

பார்த்துக் கொண்டே நின்றாள் கவிநயா.
பின் ஓடிச்சென்று தன் அத்தையை அழைத்து வந்தாள்.

“அத்தை அத்தை இங்க பாருங்களேன். வாங்க அத்த” என கைப்பிடித்து இழுத்து வந்தாள்.

அத்தையும் அவளோடு வந்து பார்த்தார். இருவரும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள்.

படம் – அப்பு சிவா

“ஏன் அத்த அந்த வீட்ல இத்தன பறவைகள், அணில்கள் இருக்கு? ஏன் கத்திட்டே இருக்கு?”

“அதுவா! இதுக்கு முன்னாடி அந்த வீட்ல குடியிருந்தவங்க, தினமும் வாசல்ல மிக்சர் தட்டி வைப்பாங்க. அவங்க போய்ட்டாங்க”

“எங்க போனாங்க அத்த?”

“அவங்க வீடு காலி செஞ்சிட்டு போய்ட்டாங்க டா.”

“ஏன் காலி செஞ்சாங்க?”

“அவங்க வாடகை வீட்டில இருந்தாங்க. இப்ப வேற வீட்டுக்கு மாறி போயிட்டாங்க.”

“அப்ப இந்த விலங்குகளையெல்லாம் ஏன் கூட்டிட்டு போகலை அத்த?”

“இதெல்லாம் வீட்ல வளக்கற பிராணிகள் இல்ல டா. அவங்க எதேட்சையா ஒரு நாள் மிக்சர் வச்சிருக்காங்க. அணில்கள் வந்து தின்னவும் தினமும் வைக்க ஆரம்பிச்சிட்டாங்க. நிறைய பிராணிகள் வர ஆரம்பிச்சிடுச்சு.”

“ரொம்ப நல்ல விசயம் தான அத்த?”

“இல்லையே டா. பாரு இந்த விலங்குகளெல்லாம் உணவு சேகரிக்கறதயே மறந்துடுச்சு. இப்ப அவங்க இல்லாம ரொம்ப கஷ்டப்படும்ல?”

“அப்ப நாம மிக்சர் வாங்கி வைக்கலாமா?” என கண்களில் ஆர்வம் மிகக் கேட்டாள் கவிநயா.

“இல்ல டா மிக்சர், சேவு, ஸ்வீட்ஸ் இதெல்லாம் மனிதர்கள் தயாரிக்கிற உணவுகள். ஜங்க் புட் அப்டின்னு சொல்வாங்க. குப்பை உணவுகள். இதெல்லாம் நம்ம ஆரோக்கியத்துக்கே நல்லது இல்ல. அத விலங்குகள் சாப்பிட்டா அதுக்கும் நல்லது இல்லை டா”.

“அப்ப அதுக்கு உணவு தரக்கூடாதா அத்த?”

“அப்படி இல்ல கவி, உணவு அதோட உடலுக்கு ஏத்த மாதிரி குடுக்கனும். உணர்வுகளை அடிமையாக்கற உணவுகளை குடுக்கக் கூடாது”.

“அப்படின்னா என்ன அத்த?”

“இந்த அணில், குருவி எல்லாம் மிக்சர் சாப்பிட்டு அதோட டேஸ்ட்க்கு பழகிடுச்சு. இனி அதுக்கு தானியங்கள் குடுத்தா சாப்பிடவே பிடிக்காது. உணவு தேடி சேகரிக்கப் பிடிக்காது. அதோட குழந்தைகளுக்கும் உணவு சேகரிக்க சொல்லிக் குடுக்காது.”

“அப்ப சோம்பேறி ஆகிடுமா?!”

“ஆமா டா பட்டு. அதனால அதையெல்லாம் பிராணிகளுக்கு குடுக்கவே கூடாது. அதுவும் வாடகை வீட்டில் இருந்து மாறி வேற வீடு போக வேண்டிய சூழல்ல இருக்கறவங்க இப்படி பிராணிகள பழக்கிட்டு அனாதையா விட்டுட்டு போகவே கூடாது டா” என்றார் அத்தை கவலையாக.

“நாம அதுக்கு எதாவது உணவு குடுக்கலாம் அத்தை. ப்ளீஸ்! ப்ளீஸ்!”

“நாமளும் வாடகை வீட்டில தான டா இருக்கோம்.” என்றார் அத்தை.

“இல்ல அத்த இவங்கள சோம்பேறி ஆக்காத, அடிமை ஆக்காத உணவு குடுக்கலாம்.”

“எப்படி ?”

“நாம தானியங்கள வாங்கி நம்ம தெரு முழுக்க அங்க அங்க சிதறி விடுவோம். இவங்களுக்கு ரொம்ப பசிக்கும் போது அதெல்லாம் சாப்பிட ஆரம்பிச்சு அப்படியே உணவு தேட பழகிடுவாங்கல்ல அத்த?” என்றாள் கவிநயா.

“சரி டா தங்கம் இதோ!” ஒரு கிண்ணம் நிறைய வேறு வேறு தானியங்களின் கலவையை நிரப்பி நீட்டினார் அத்தை.

உற்சாகத்தோடு தெருவில் இறங்கினாள் கவிநயா.

– ராஜலட்சுமி நாராயணசாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *