ஒரு நாள் அஸ்வினி, யாழினி, தனு, வர்ஷினி இவர்கள் நான்கு பேரும் ‘அமேசான் ரெயின் பாரெஸ்ட்’ என்கிற இடத்திற்குச் சென்றனர். இது உலகிலுள்ள மிகப்பெரிய மலைக்காடு ஆகும். கிட்டத்தட்ட ஒன்பது நாடுகளின் எல்லைப் பகுதிக்குள் இந்தக் காடுகள் பறந்து விரிந்திருக்கின்றன அதில் 60% நிலப்பகுதி பிரேசில் நாட்டில் இருக்கிறது. பல நதிகள் இந்தக் காடுகளின் வழியே பாய்கின்றன. உலகின் எண்ணற்ற விலங்கினங்கள், பறவை இனங்கள் மற்றும் மீன் இனங்கள் அமேசான் காடுகளில் காணப்படுகின்றன. அந்த காட்டுப் பகுதியில் இருக்கும் ஒரு கிராமத்தில் தான் இவர்களது தோழி ப்ரீத்திக்கா வசிக்கிறாள். அஸ்வினி, யாழினி, தனு மற்றும் வர்ஷினியைத் தங்கள் வீட்டிற்கு வருமாறு அழைத்திருந்தாள்.
அவர்கள் செல்லும் வழியில் ஒரு மரம் விழுந்து கிடந்தது. அவர்கள் காரில் சென்றதால் என்ன செய்வது என்று தெரியவில்லை. விழுந்து கிடந்த மரம் மிகப் பெரிதாக இருந்தது. அதனால் அவர்கள் காரிலிருந்து இறங்கி நடந்து காட்டுக்குள் செல்லலாம் என்று முடிவெடுத்தனர்.
காட்டுவழியில் செல்லும்போது மிகவும் அமைதியாக இருந்தது. அப்பொழுது அங்கு ஏதோ ஒரு பெரிய விலங்கின் உறுமும் சத்தம் கேட்டது. அவர்கள் நால்வரும் பயத்துடன் சுற்றிமுற்றிப் பார்த்தார்கள். அதற்குள் அந்தச் சத்தம் நின்றுவிட்டது.
பயத்துடனே அங்கிருந்து சென்றனர். வழியில் ஒரு குளம் இருந்ததைக் கண்டதும் அந்தக் குளத்தில் குளிக்க ஆசைப்பட்டனர்.
அனைவரும் குளத்தில் இறங்கி ஆசைதீரக் குளித்தனர்.
குளத்தில் பல விதமான மீன்கள் இருந்தன. அதில் ஒரு புதிய வகை மீனைப் பார்த்தனர். அதற்கு பெயர் “பிரானா”. பார்ப்பதற்கு தட்டு போல இருந்த அதில் தனு கால் வைத்தாள். உடனே அந்த பிரானா மீன் அவளுடைய காலைக் கடித்துவிட்டது. தனு கதறிவிட்டாள். மற்ற தோழிகள் அவளுக்கு மருந்து வைத்துக் கட்டிவிட்டனர்.

மீன் வகைகளைப் பற்றி ஏற்கனவே நிறைய தெரிந்து வைத்திருந்தாள் யாழினி. அவள், “நல்ல வேலையா லேசா கடிச்ச உடனே நீ வெளியே வந்துட்டே. இனிமே இப்படி எந்த உயிரினங்கள் மிதிக்கவோ, அனாவசியமா பக்கத்துல போகவோ கூடாது. தள்ளி இருந்து ரசிச்சுக்கோ. இந்த பிரானா மீன்கள் பொதுவா சும்மா யாரையும் கடிக்காது. இறந்து போன மீன்களையும், உயிரினங்களையும் மட்டுமே கடிச்சு சாப்பிடும். ஒரு வகையில அது வாழக்கூடிய குளத்தோட பகுதிகளை சுத்தமா வச்சிக்கிறதுல பிரானா மீன்களுக்கு தனிப் பங்கு இருக்குது. இப்போ நமக்கு ஏதாவது காயம் பட்டிருக்குன்னு வச்சுக்கோ, அந்த இரத்தத்தையும் தசைவாடைகளையும் உணர்ந்து கூட்டம் கூட்டமாக பிரானா மீன்கள் வந்து நம்மை தாக்கவும் வாய்ப்பிருக்கு. ஒருவேளை நீ இன்னும் கொஞ்ச நேரம் அந்த குளத்தில் கால் வச்சிருந்தேன்னா ஆபத்துதான்” என்று விவரமாகக் கூறினாள்.
அதன் பின் சிறிது தூரம் நடந்து சென்றனர். அது மாலை நேரம் என்பதால் ஒரே பனிமூட்டமாக இருந்தது. அவர்களுக்கு வழி தெரியவில்லை. அந்தக் காட்டிலேயே அவர்கள் கொண்டு வந்த பொருட்களை வைத்து ஒரு கூடாரம் அமைத்துத் தங்கினர்.
காலை விடிந்ததும் மீண்டும் அவர்களின் பயணம் தொடங்கியது.
நான்கு பேரும் காட்டுச் செடி கொடிகளையும் மரங்ளையும் பூச்சிகளையும் கண்டு மகிழ்ந்தபடியே சென்றனர். மாலை வந்தது. முந்தைய தினம் போலவே பொருத்தமான ஓரு இடத்தில் கூடாரம் அமைத்துத் தங்கினார்கள். காலை கிளம்பி மேலும் நடந்தார்கள். இதுவே அடுத்த மூன்று நாட்களும் நடந்தது.
அவர்கள் சேர வேண்டிய இடத்திற்கு செல்ல வழி தெரியாத நிலையில் காட்டின் எல்லையும் வந்துவிட்டது. இனி எப்படி நாம் செல்வோம். நமக்கு வந்த வழியும் மறந்து விட்டதே, செல்ல வேண்டிய இடத்துக்கும் செல்லவில்லையே என்று வருந்தினர்.
அப்போது அவர்களை அழைத்துச் செல்ல இருவர் அங்கு வந்தனர்.
“நீங்க ப்ரீத்திகாவோட வீட்டுக்கு தானே வந்திருக்கீங்க? நாங்க அவங்களோட நண்பர்கள். நீங்க வழி தவறி இருப்பீங்களோங்குற சந்தேகத்தில் உங்களைத் தேடி வந்தோம். வாங்க ரித்திகாவோட வீட்டுக்குப் போகலாம், இதோ இங்கே பக்கத்தில் தான் எங்களோட வீடும், ப்ரீத்திகாவோட வீடும் இருக்குது” என்றார்கள்.
அங்கேயும் இன்னும் சில நாட்களுக்கு தங்கியிருந்து அமேசான் மழைக் காடுகளைப் பற்றி இன்னும் நிறைய தெரிந்து கொண்டார்கள் நண்பர்கள். தங்கள் நண்பர்களுடன் கோடை விடுமுறையைக் கழிக்க வந்திருந்த தோழிகளுக்கு இந்தக் காட்டுப் பயணம் புதிய அனுபவத்தைக் கொடுத்தது.
எத்தனை வருடங்களானாலும் அவர்கள் அந்தக் காட்டுப் பயணத்தை மறக்கவே மாட்டார்கள்.
– பீ. நீநிகா