Around the world in 80 days
– ஜூல்ஸ் வெர்னே
தமிழில் – அகிலாண்டபாரதி
இதுவரை:
சாகசங்களில் ஆர்வம் உடையவராகவும் நேரம் தவறாத மனிதராகவும் விளங்கும் ஃபிலியாஸ் பாக் என்ற ஆங்கிலேய செல்வந்தர் தன் நண்பர்களுடன் ஏற்பட்ட விவாதம் ஒன்றில், “என்னால் எண்பது நாட்களில் உலகத்தை சுற்றிவர முடியும்!” என்று சவால் விடுகிறார். உடனடியாக அந்தச் சவாலை நிறைவேற்றுவதற்காக சுறுசுறுப்பான தன்னுடைய உதவியாளரான பாஸர்பார்பட்டவுட்டை அழைத்துக் கொண்டு பயணம் ஆகிறார். முதலில் ரயில் பயணம் பின் கப்பல் பயணம் என்று கிளம்பும் அவர்களுக்கு வழியில் ஒரு இடர்பாடு நேருகிறது. கப்பலில் அவர்களுடன் பயணிக்கும் திரு பிக்ஸ் என்ற காவல் அதிகாரி, இவர்கள் இருவரும் வங்கிக் கொள்ளையர்களாக இருப்பார்களோ என்று சந்தேகிக்கிறார்.
இனி..
வங்கியைக் கொள்ளையடித்த கொள்ளைக்காரர் ஃபிலியாஸ் ஃபாக் தான் என்று முடிவு செய்து விட்டார் திரு. ஃபிக்ஸ். நிறைய தகவல்கள் சேகரிக்கலாம் என்று பாஸர்பார்ட்டவுட்டிடம் தொடர்ந்து உரையாடலை வளர்த்தார் ஃபிக்ஸ்.
“எங்கே போய்க்கிட்டு இருக்கீங்க?” என்று விசாரித்தார்.
“நாங்க இங்கிருந்து ஏடன்* நகருக்குப் போறோம். அதுக்கப்புறம் இந்தியாவில இருக்கிற பம்பாய்** நகரத்துக்குப் போகப் போறோம்” என்று சொன்னார்.
அவருக்குத்தான் திரு.ஃபிக்ஸ் ஒரு போலீஸ்காரர் என்பதும், தங்களை சந்தேகப்படுகிறார் என்பதும் தெரியாதே.. அதுவும் போக அவர்களிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லாததால் உண்மையை அப்படியே கூறிவிட்டார். இந்தியாவுக்குத் தான் போகிறார்கள் என்றவுடன் திரு. ஃபிக்ஸின் மனதில் ஒரு திட்டம் உதித்தது. அப்போது இந்தியாவும் இங்கிலாந்து நாட்டின் ஆட்சியின் கீழிருந்த ஒரு நாடு தான். அதனால் இங்கிலாந்தில் உள்ள சட்டங்கள் இந்தியாவிலும் பொருந்தும். இங்கிலாந்து நாட்டில் ஒரு நபர் ஏதேனும் குற்றமிழைத்து விட்டு இந்தியாவுக்கு வருகிறார் என்பது உறுதியாகத் தெரிந்தால், இங்கிலாந்து நாட்டின் தலைமைக் காவல் நிலையத்தில் இருந்து இந்தியாவிற்கு ஒரு தந்தி மூலம் ஒரு தகவல் அனுப்பினால் போதும், அந்தத் தகவலை வைத்து இந்தியாவில் அந்தக் குற்றவாளியைக் கைது செய்து கொள்ளலாம்.

இந்த சட்டத்தைப் பயன்படுத்த முடிவு செய்த ஃபிக்ஸ், லண்டனில் இருக்கும் இங்கிலாந்து காவல் தலைமையகத்தைத் தொடர்பு கொண்டு உடனடியாக ஃபிலியாஸ் பாகைக் கைது செய்வதற்கு ஒரு ஆணையை பம்பாய் காவல் நிலையத்திற்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். தொடர்ந்து கப்பலில் அவர்களைக் கண்காணித்துக் கொண்டே அவர்களுடன் பயணித்தார்.
எதிர்பார்த்ததற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே கப்பல் பம்பாயைச் சென்றடைந்தது. ஃபிலியாஸ் ஃபாக், பாஸர்பார்ட்டவுட், ஃபிக்ஸ் மூவரும் பம்பாய் துறைமுகத்தில் இறங்கினார்கள். வேகமாக பம்பாய் காவல் நிலையத்தை அடைந்த ஃபிக்ஸ், “லண்டனில் இருந்து தந்தி வந்திருக்கிறதா? ஃபிலியாஸ் ஃபாக் என்பவரைக் கைது செய்யணும்.” என்று கேட்டார்.
“இல்லையே? அப்படி எந்தத் தந்தியும் வரவில்லை. ஒருவேளை நாளைக்கு வரலாம்.” என்று பம்பாய் காவல் நிலையத்தில் கூறினார்கள்.
“என்ன பண்றது?” என்று யோசித்த ஃபிக்ஸ், சரி இவர்களை நம் கண் பார்வையிலேயே வைத்திருப்போம் என்று அவர்களைத் தொடர ஆரம்பித்தார்.
ஃபிலியாஸ் ஃபாக் ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கிவிட்டார். பாஸர்பார்ட்டவுட் ஊர் சுற்றிப் பார்க்கக் கிளம்பினார். அவருக்கு இந்திய நாட்டின் இடங்கள், மக்கள், கலாச்சாரம் இதெல்லாம் வித்தியாசமாகத் தெரிந்தது. உற்சாகத்துடன் பார்த்துக் கொண்டே போனார். ஒரு கட்டிடத்தில் மக்கள் கூட்டமாக இருந்தனர்.
எதற்காக இவ்வளவு கூட்டமாக இருக்கிறார்கள் என்று தெரியாத பாஸர்பார்ட்டவுட் அந்தக் கட்டிடத்திற்குள் நுழைந்தார். அது ஒரு கோவில். செருப்பு போட்டுக் கொண்டு கோவிலுக்குள் நுழையக்கூடாது என்ற இந்து மதத்தின் சட்டம் தெரியாமல் தன் காலணிகளுடனே உள்ளே போய்விட்டார். கோவிலில் இருந்த பக்தர்கள், “யாரோ செருப்புப் போட்டு உள்ள வந்துட்டாங்க..” என்று கூறி பாஸர்பார்ட்டவுட்டைப் பிடித்து நிறுத்தினர்.
சிலர், “உன் செருப்புகளைத் தா!” என்று அதைப் பிடுங்கி வைத்துக் கொண்டனர். வேறு சிலர் அவரைத் துரத்த ஆரம்பித்தனர். அடித்து விடுவார்களோ என்ற பயத்தில் வெகுவேகமாக ஓடினார் பாஸர்பார்ட்டவுட். வெகு தூரம் வந்த பின்பே ஓட்டத்தை நிறுத்தினார்.
‘அப்பாடி! தப்பிச்சோம்! இனிமே ராத்திரியில கல்கத்தாவுக்குப் போற ரயிலைப் பிடிக்கணும்னு முதலாளி சொல்லியிருக்கார். அதனால அதுவரைக்கும் இந்த பக்தர்களோட கண்ணுல படாம இருக்கணும்..’ என்று நினைத்துக் கொண்டார். ஆனால் நடந்ததை எல்லாம் கவனித்து வந்த திரு. ஃபிக்ஸ் மனதில் வேறு ஒரு திட்டம் உருவானது.
‘இங்கிலாந்தில் நடந்த குற்றத்துக்குத் தானே அங்கிருந்து தகவல் வரணும்? இந்தியாவிலேயே நடந்த குற்றத்திற்கு இங்கே கைது செய்யலாம் தானே? ஆமா.. அப்படித்தான் சட்டம் சொல்லுது. இவங்க கல்கத்தாவுக்குப் போய் சேருறதுக்கு முன்னாடி நான் போயிடுறேன். பம்பாய்ல ஒரு கோவிலுக்கு செருப்புப் போட்டுக்கிட்டு உள்ளே போனான். அந்தக் குற்றத்தைச் செஞ்சுட்டு கல்கத்தாவுக்கு ஓடி வந்துட்டான் அப்படின்னு சொல்லி இவனைக் கைது செய்றதுக்கு அங்கே ஆணை வாங்கிடலாம், அது இன்னும் வசதியா இருக்கும், இவங்களைத் தடுத்து நிறுத்த எனக்கு இது ஒரு வழி’ என்று நினைத்துக் கொண்டார்.
அவர்கள் கிளம்பிய ரயிலுக்கு முன்பாகவே இன்னொரு ரயிலைப் பிடித்து கல்கத்தாவுக்குப் பயணமானார் திரு. ஃபிக்ஸ்.
– தொடரும்.
ஃபிலியாஸ் ஃபாகின் பயணம்: சூயஸ் கால்வாய் —–> ஏடன் நகரம் ——->பம்பாய் ——->கல்கத்தாவை நோக்கி..
*கிழக்கு நாடுகளில் ஒன்றான ஏமன் என்ற நாட்டின் உள்ள நகரம் ஏடன். குறிப்பிட்ட காலகட்டத்தில் அந்த நகரம் பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கீழ் இருந்து வந்தது. பம்பாய் மாகாணத்தில் ஒரு பகுதியாக சில காலம் இருந்தது.
**இப்போது மும்பை என்று நாம் அழைக்கும் இந்தியாவின் முக்கிய நகரம் வெகுகாலமாக பம்பாய் என்றே அழைக்கப்பட்டு வந்தது.
– Dr. அகிலாண்ட பாரதி