கிளியக்காவின் பாட்டு

கிளியக்காவின் பாட்டு
சிறுவர் கதைகள்
ஆசிரியர்:- கமலா முரளி
வெளியீடு:- லாலிபாப் சிறுவர் உலகம், சென்னை-18
விலை ரூ 110/-.

இத்தொகுப்பில் 14 கதைகள் உள்ளன. சிறுவர்களைக் கதாபாத்திரமாகக் கொண்ட 10 கதைகளும், விலங்குகளைப் பாத்திரமாகக் கொண்ட 3 கதைகளும் உள்ளன. ‘நேசம் பழகு’ என்பது எல்லோரிடமும் நேசத்துடன் பழக வேண்டும் என்ற நீதியைப் போதிக்கும் கதை.

குழந்தைகளுக்கு இயல்பிலேயே இருக்கும் செல்லப் பிராணி வளர்க்கும் ஆசையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை, ‘காணாமல் போன பூனைக்குட்டி’. வேலைக்குப் போகும் அம்மாவால் பூனைக்குட்டி வளர்க்கும் குழந்தைகளின் ஆசையைப் பூர்த்தி செய்ய முடியாது. ஆனால் அம்மா அவர்கள் விருப்பத்துக்கு மதிப்பு கொடுத்துச் செல்லப் பிராணிகளுடன் மகிழ்ச்சியுடன் நேரம் செலவழிக்கும்படி மாற்று ஏற்பாடு செய்து தருகிறார்.

படம் – அப்பு சிவா

சமூக அக்கறை கொண்ட பெற்றோர் சிலர், பிள்ளைகளையும் சேர்த்துக் கொண்டு முள் காடாகக் கிடந்த கோவிலுக்குச் சொந்தமான இடத்தைச் சுத்தம் செய்து பதின்வயது பிள்ளைகள் விளையாட மைதானம் அமைக்கும் பணியில் ஈடுபடுவதைச் சொல்லும் கதை, ‘செமையா ஒரு ஈவ்னிங் டிரில்’.

“மென்மையாகப் பேசுவோமே” என்ற கதையில் கத்திக் கூச்சல் போடும் சக மாணவிகளுக்கு அமைதியாகவும், சத்தம் குறைவாகவும் எப்படிப் பேசுவது என்பதைச் சொல்லித் தருகிறாள் மேகா. குழந்தைகள் அவர்களுக்கான வேலையை அவர்களே செய்து கொள்ள எவ்வாறு பழக்குவது என்பதைச் ‘சோம்பலுக்கு குட் பை’ கதை சொல்கிறது.

‘கிளியக்காவின் பாட்டு’ என்பது கடைசிக் கதை. தவளையின் தாழ்வு மனப்பான்மையைப் போக்கி அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கிளி பாட்டுப் பாடுகிறது. தவளைக்கு உற்சாகம் ஏற்படுகிறது. 9-12 வயதினர்க்கான கதைகள்.

– ஞா. கலையரசி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *