பாகிஸ்தானின் ஸ்வத் பள்ளத்தாக்கில் இருக்கும் மிங்கோரா என்ற இடத்தில் 1997ஆம் ஆண்டில் பிறந்தார் மலாலா. ஆண் குழந்தை பிறந்தால் விழா எடுக்கும் ஒரு சமூகத்தில், இவர் பிறந்ததும்,”ஐயோ பெண் குழந்தையா?’,’ என்ற குரல்கள் மட்டுமே ஒலித்தன. ஆனாலும், பிறந்த நொடியிலிருந்தே இவர் மேல் அலாதியான அன்பு மட்டுமல்லாது, ஒரு தைரியமான குழந்தையாக இவரை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் மலாலாவின் தந்தைக்கு வேரூன்றிருந்தது. பஷ்தூன் மக்கள் கொண்டாடும் ‘மலாலாய்’ என்ற பெண் போர் வீரரின் பெயரையே மலாலா என்று இவருக்குச் சூட்டி அழகு பார்த்தார். பலரும், இந்தப் பெயரின் உண்மையான அர்த்தம் துக்கம் என்ற எதிர்மறையான கருத்துகளைச் சொன்னாலும், தனது குட்டிப் பெண்ணுக்கு மலாலா என்ற பெயர் வைத்துப் பல பாடல்களையும் அவர் பாடுவார், என்று மலாலா அழகாகத் தன்னுடைய புத்தகத்தில் (I am Malala) நினைவு கூர்வது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய சிறுவயதிலிருந்தே சவால்களைச் சந்தித்து, இட்ட பாதையிலிருந்து விலகாது சீராகச் செல்லும் பயிற்சியைப் பல்வேறு தருணங்களிலும், கற்றுக் கொடுத்த தாய் தவிர, நான்கு சுவருக்குள் அடைபடாது சுதந்திரம், கல்வி என்று எல்லாம் பெண்களுக்குத் தேவை என்ற பாடத்தையும் மலாலா பிறந்த நொடியிலிருந்தே போதித்தவர் அவர் தந்தை.

ivar yaar
படம்: அப்புசிவா

மலாலாவின் தந்தை சியாயுதீன் யூஸஃப்சாய், தன்னுடைய இளம் வயதிலிருந்தே மாணவ இயக்கங்களில், கல்வி மற்றும் பாகிஸ்தானில் அதிகரித்து வரும் தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தவர். கவிதைகள் மற்றும் தன்னுடைய அறிவு என்ற இரண்டே கருவிகளை வைத்து மட்டுமே, பாகிஸ்தானில் அறவழிப் போராட்டங்களில் பங்கேற்ற இவர், தன் மகள் மலாலாவின் வளர்ப்பிலும் ஒரு முற்போக்கான சிந்தனையை சியாயுதீன் கடைபிடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதை எடுத்துக்காட்டும் முக்கிய நிகழ்வு, மலாலாவின் முதல் பேச்சிற்கு வித்தாகவும் அமைந்தது. 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் தலிபானின் ஊடுருவல் மலாலா வாழ்ந்த ஸ்வத் பகுதிகளையும் அடைந்தது. அப்போது அவர்களின் முதல் முடக்கு எல்லா பகுதிகளிலும் இருக்கும் பள்ளிகளையும் குறி வைத்தது. தானே ஒரு பள்ளியை நடத்தி வந்தமையால், சியாயுதீன் எதிர் குரல்களை மேலும் பலப்படுத்தினார். தன் நண்பர்களோடு சேர்ந்து சிறு குழுவாக அமைத்து, ஸ்வத் பகுதியில் நடக்கும் கொடுமைகளை வெளியிடத் திட்டமிட்டருந்தனர். நியூயார்க் டைம்ஸ் போன்ற பெரும் ஊடகங்களுக்கு செய்தி போல உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டத் திட்டமிட்டிருந்தனர். அப்போது, ”ஒரு கதை போல சொல்ல, சாதாரண பெண் இருந்தால் நன்றாக இருக்கும், மக்களைத் திரும்பியும் பார்க்க வைக்கும்”, என்று அவர் ஆலோசனை கூறினார். மலாலா இதற்குச் சரியாக இருப்பாளே என்று முதலில் பரிசீலித்ததே சியாயுதீன் தான். அதே சமயத்தில் தலிபான் படையினரால், ஒரு பெண் சிறுமியைக் கொன்ற காட்சியையும் மலாலா கண்டிருந்தாள். சிறுமியாக அப்போது இருந்தாலும், தான் இருக்கும் இடத்திலும் பள்ளிகளிலும் பிரச்னையை ஏற்படுத்த வெளியாட்கள் ஊடுருவி இருப்பதைப் புரிந்து கொண்டாள். தன் அப்பா சொல்லிக்கொடுத்த பல பாடங்களுள் தத்தம் கல்வியை முடித்து உலகிற்கு ஒரு மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்பது பிரதான ஒன்று. எனவே, ஊடகங்களுக்கு ஒரு ஆடியோ மூலம் ஸ்வத் பகுதியில் இருக்கும் நிலையை மலாலா குரலில் வெளியிட்டனர். அந்த ஒலி கட்டுரை மக்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. சில உருது நாளிதழ்களிலும் வெளிவந்தது.

அப்போது 12 வயதேயான மலாலா எனும் பள்ளிச்சிறுமி பிபிசி உருது இணைய தள வலைப்பூவில் தலிபான்களின் அராஜகம் பற்றி எழுதத் துவங்கினாள். ’குல் மக்காய்’ அதாவது சோளப்பூ என்ற புனைப்பெயரில் 2009ல் அவள் எழுதத் துவங்கிய போது தோளில் தட்டி உற்சாகப் படுத்தியவர் மலாலாவின் தந்தை ’யூசுப்த்தீன் யூசுப்சாய்’. அவரும் தலிபான்களை எதிர்த்து பெண்களுக்கான பள்ளியொன்றை நடத்திய போராளி.

“பலர் பேயைப் பார்த்துப் பயப்படுவார்கள். சிலர் சிலந்திப் பூச்சியை பார்த்து அஞ்சுவது உண்டு. ஆனால் நாங்களோ மனிதர்களைப் பார்த்து பயந்தோம். ஏனெனில் அவர்கள் காட்டு மிராண்டிகள்”, எனத் தலிபான்களைப் பற்றி மலாலா தன் வலைப்பூவில் பதிவு செய்தார். அதைப்படித்த உலகினருக்கு பெரும் அதிர்ச்சி.

’குல் மக்காய்’என்ற புனைப்பெயரில் எழுதிய மலாலாவின் எழுத்துகளுக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. பிறகு தன் சொந்தப் பெயரான மலாலா என்ற பெயரில் எழுதத் துவங்கினார்.

இத்தனைக்கு இடையிலும் அவர் பள்ளி செல்வதை நிறுத்தவில்லை, தன்னோடு பள்ளியில் படித்த 27 மாணவிகளில் பலரும் தலிபான்களுக்குப் பயந்து படிப்பைக் கைவிட்டாலும். மலாலாவும் அவரது தோழிகள் 11 பேரும் தொடர்ந்து பள்ளி செல்வதைக் கைவிடுவதாக இல்லை. ஆசிட் வீச்சு அச்சுறுத்தல்களையும், கொலை மிரட்டல்களையும் கூடப் பொருட்படுத்தாமல் புத்தகங்களை பர்தாவுக்குள் மறைத்துக் கொண்டு பள்ளி சென்றார் மலாலா. அவரது இலக்கு ஒன்றே ஒன்று தான் கல்வி. கல்வி மட்டுமே!

அந்தச் சூழ்நிலையில் தான், நடந்தது அந்தத் துயரம். அக்டோபர் 09, 2012 அன்று வழக்கம் போல பள்ளி முடிந்தது. மலாலாவும் சக மாணவிகள் சிலரும் வீட்டிற்குச் செல்லும் பேருந்தில் பயணித்தனர். அந்தப் பேருந்து வழியில் ஒரு இடத்தில் துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டது. பேருந்தின் உள்ளே ஏறிய தலிபான் தீவிரவாதி ஒருவன் மலாலாவைச் சரமாரியாகச் சுட்டான். கழுத்திலும் தலையிலும் குண்டடி பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த மலாலா ’ராவல்பிண்டி’யிலுள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின் பாகிஸ்தான் அரசு இங்கிலாந்திலுள்ள ’பர்மிங்ஹாமின் எலிசபத்’ மருத்துவமனைக்கு மலாலாவை அனுப்பியது.

பாகிஸ்தான் அரசு மாலாலாவைக் காப்பாற்றத் துடித்ததன் காரணம், இவ்வளவு சிறிய வயதிலும் தலிபான் தீவிரவாதிகளின் முன் மலாலா காட்டிய துணிச்சலும் பாகிஸ்தானின் அமைதிக்காகவும், பெண்களின் உரிமைக்காகவும் தனது 11 வயது முதலே அவர் குரல் கொடுத்து வந்ததும் தான்.

இங்கிலாந்தில் கொடுக்கப்பட்ட தீவிர சிகிச்சைக்குப் பிறகு பீனிக்ஸ் பறவையாக எழுந்து பறந்தார் ’குல் மக்காய்’ மலாலா. தொடர்ந்து ஆறு ஆண்டுகள் அவரால் பாகிஸ்தான் திரும்ப முடியவில்லை. எனினும் சொந்த மண்ணின் நினைவுகளைச் சுமந்த படியே இங்கிலாந்தில் தனது படிப்பைத் தொடர்ந்தார்.

ஸ்வாத்தின் பெண் குழந்தைகள் படிப்புக்காக ‘மலாலா எஜூகேஷனல் ஃபவுண்டேசன்’ என்ற அமைப்பைத் துவங்கி சமூக சேவை செய்தார்.

மலாலாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 2018ல் ’குல் மக்காய்’ என்ற சினிமா வெளியானது. உருது மற்றும் இந்தி மொழியில் வெளியான இந்த சினிமாவை இயக்கியவர் ’அம்ஜத் கான்’.

பாகிஸ்தானின் மிக உயர்ந்த பொது மக்கள் விருதான ‘சிதாரே-எ-சுஜத்’ விருதைப் பெற்றார் மலாலா. சமூக சேவை நிறுவனங்கள் பல்வேறு விருதுகளை வழங்கி மலாலாவைக் கவுரவித்தது. பாகிஸ்தான் பிரதமராக இருந்த ராஜா பர்வேஸ் அஷ்ரஃப், “நம் நாட்டின் உண்மை முகம் மலாலா. அவர் பாகிஸ்தானின் அமைதி மற்றும் அன்பின் தூதுவர்”, எனப் புகழ்ந்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாக 2014-ஆம் ஆண்டு மாலாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது. இதன் மூலம் மிகவும் சிறுவயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமை அவருக்குக் கிடைத்தது. மேலும் நோபல் பரிசு பெறும் முதல் பாகிஸ்தானியரும் இவர் தான். நோபல் பரிசு பெற்ற மேடையில் அவர் ஆற்றிய உரை சுவாரஸ்யமானது. உலக அமைதி மற்றும் பெண் கல்வி குறித்து அப்போது நிறையப் பேசினார். மேலும் வேடிக்கையாக, ‘உலக அமைதிக்கான நோபல் பரிசு எனக்குக் கிடைத்திருக்கிறது, ஆனால் என் உடன் பிறந்த சகோதரர்கள் போடும் சண்டையை என்னால் ஒரு நாளும் சமாதானம் செய்ய முடியவில்லை.’, என்றார்.

கற்கை நன்றே கற்கை நன்றே, தோட்டாக்கள் அச்சுறுத்தும் போதும் கற்கை நன்றே! என உலகப் பெண்களின் ஒற்றைக் குரலாக ஒலிக்கிறார் மலாலா.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments