“சொக்குத் தாத்தா! நிலாப் பாட்டிய உங்களுக்கு தெரியுமா? இந்த ஊர்க்காரவுங்களா?” என்று அர்ஜுன் கைகாட்ட, அவ்வளவு நேரம் அங்கே நின்றிருந்த நிலாப் பாட்டியைக் காணவில்லை.
குழந்தைகள் நால்வரும் அதிர்ந்தனர்.
தாத்தாவுக்கு குழந்தைகள் சொல்ல வருவது புரியவில்லை.
“நிலாப்பாட்டியா? அது யாரு நிலாப்பாட்டி?” என்று கேட்டு அவர் சிரித்தார்.
அர்ஜுன் நிலாப்பாட்டியைப் பற்றி கூற வரும்போது,
“சொக்கலிங்கம்! நீங்க என்ன இங்க இருக்கீங்க? மலைக் கோயில் தர்மகர்த்தா இன்னிக்கு உங்கள பாக்க வரதா சொன்னாரே?” என்று கேட்டுக் கொண்டே அந்த ஊரில் வசிக்கும் ஒருவர் அங்கு வந்தார்.
“ஆமா நாகு! இப்பதான் வந்துட்டு போனாரு..” என்று கூறி நிறுத்திவிட்டு,
“ஒரு நிமிஷம்!” என்று அவரிடம் கூறிவிட்டு, தன் பேரப் பிள்ளைகளைப் பார்த்து,
“பசங்களா! நீங்க குளத்துல இறங்குங்க. நா இந்த தாத்தாகிட்ட பேசிட்டு வந்துடறேன்.” என்று கூறி அவர்களை அனுப்பிவிட்டு வந்தவரிடம் பேசத் திரும்பினார்.
குழந்தைகள் நால்வரும் குளத்தில் இறங்கி நீந்திக் குளிக்கத் தொடங்கினார்கள்.
அவர்கள் கையில் மயிலிறகிலிருந்து ஒட்டியிருந்த நீல நிறம் தண்ணீரில் கரைந்து போனது.
அதோடு அவர்களுக்கு நிலாப்பாட்டியின் நினைவும் மறந்து போனது.
அவர்கள் வழக்கம் போல ஆசை தீரத் தண்ணீரில் ஆட்டம் போட்டார்கள்.
ஒரு மணி நேரம் கடந்த பின் சொக்கு தாத்தா வந்து அவர்களுடன் இணைந்து கொண்டார்.
மலைக் கோயில் சம்மந்தமாக, நிறைய வேலைகள் வந்ததால் நிலாப்பாட்டியைப் பற்றி தன் பேரப்பிள்ளைகள் கேட்டது அவருக்கும் மறந்து போனது.
குளத்தில் குளித்துவிட்டு மிகுந்த களைப்புடனும் பசியுடனும் வீடு திரும்பினார்கள் அவர்கள்.
அவர்களுக்காக பாட்டி புதிது புதிதாக சமைத்து வைத்துக் கொண்டு காத்திருந்தார்.
“பாட்டி! செம்மையா பசிக்கிது! என்ன சமைச்சிருக்கீங்க?” என்று கேட்டுக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்த தன் பேரப் பிள்ளைகளை அன்புடன் வரவேற்றார் மீனுப் பாட்டி.
“இன்னிக்கு உங்களுக்காக கம்பஞ் சோறும் பருப்புருண்ட குழம்பும் செய்திருக்கேன்.. சாயந்திரம் கேவரு பணியாரம் சுட்டு தாரேன் கண்ணு.” என்று மீனுப் பாட்டி கூற,
“ஹை! பருப்புருண்டை குழம்பா? சூப்பர்! சூப்பர்!” என்று அர்ஜுன் குதித்தான்.
கிரீஷும் கிஷோரும் கூட பருப்புருண்டைக் குழம்பை நினைத்து நாக்கை சப்பு கொட்டிக் கொண்டார்கள்.

“பாட்டி! பருப்புருண்டை குழம்புக்கு அம்மா வடகம் பொரிச்சி தருவாங்க.. நீங்களும் வடகம் பொரிச்சிருக்கீங்களா?” என்று கேட்டாள் வர்ஷா.
“பின்ன? வடகம் இல்லாமலா? என் தங்கத்துக்கு வடகம் பொரிச்சி வெச்சிருக்கேனே!” என்று கூறி ஒரு பெரிய சில்வர் சம்புடத்தைத் திறந்து காட்டினார் மீனுப் பாட்டி.
சம்புடத்தில் பொரித்த ஜவ்வரிசி வடகமும் அரிசி வடகமும் நிறைந்திருந்தது.
குழந்தைகள் நால்வரும் வடகத்தை கடித்துக் கொண்டே பருப்புருண்டைக் குழம்பை ரசித்து ருசித்து சாப்பிட்டனர்.
சாப்படும்போது தாத்தா ஏதோ ஜோக் சொல்ல அதற்கு குழந்தைகள் நால்வருடன் சேர்ந்து பாட்டியும் சிரித்தார்.
சாப்பிட்டு முடித்து குழந்தைகள் நால்வரும் ஏதோ விளையாட, பாட்டி சற்று ஓய்வெடுக்க, தாத்தா மலைக் கோயில் வேலையாக வெளியே சென்றார்.
விளையாடும்போது வர்ஷாவுக்கு நிலாப்பாட்டியின் நினைவு வந்தது.
“ஹே! அந்த நிலாப்பாட்டி யாருன்னு தாத்தா சொல்லவேல்ல.. நாமளும் குளத்தில குளிக்கற ஜாலியில மறந்துட்டோம்ல!” என்றாள்.
“ஆமாடீ! சுத்தமா மறந்துட்டோம். தாத்தா வந்ததும் ஞாபகமா கேக்கணும்!” என்றான் அர்ஜுன்.
அன்று மாலை பாட்டி வர்ஷாவின் தலையைச் சீவி பின்னலிடும்போது பாட்டியிடம் நிலாப்பாட்டியைப் பற்றிக் கேட்டாள்.
“நிலாப்பாட்டிய உங்களுக்கு தெரியுமா பாட்டி?”
“நிலாப்பாட்டியா? அது யாரு? எனக்கு தெரீலயே?” என்றார் பாட்டி.
“அவங்க இதே ஊருன்னு சொன்னாங்களே! எங்கள நல்லா தெரியும்னு கூட சொன்னாங்க பாட்டி.”
“நிலாப்பாட்டிய நீ எங்க பாத்த?”
“இன்னிக்கு காலையில.. குளத்தில குளிக்க போறப்ப..” என்று ஆரம்பித்து நிலாப்பாட்டியைச் சந்தித்த விவரம் கூறினாள் வர்ஷா.
“தாத்தா கிட்ட நிலாப்பாட்டிய பத்தி கேக்கறப்பவே வேற ஒரு தாத்தா நம்ம சொக்கு தாத்தா கிட்ட பேச வந்துட்டாரு.. நாங்களும் அதப் பத்தி சுத்தமா மறந்துட்டோம்..” என்றாள் வர்ஷா.
பாட்டியின் மனதில் குழப்பம் ஏற்பட்டது.
‘ஒரு வேளை அவ திரும்பி வந்துட்டாளோ?’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார். அவருக்குப் பழைய நினைவெல்லாம் வந்தது. அவருடைய மனம் படபடவென அடித்துக் கொண்டது.
பாட்டியிடமிருந்து எந்த பதிலும் வராமல் போகவே,
“என்ன பாட்டி! ஒண்ணுமே பேச மாட்றீங்க?” என்று பாட்டியை நிகழுலகுக்கு கொண்டு வந்தாள் வர்ஷா.
“ஒண்ணுல்ல கண்ணு.. திடீர்ன்னு படபடன்னு வந்துருச்சு.. அந்த நிலாப்பாட்டி யாருன்னு நான் தாத்தா கிட்ட கேக்கறேன்.. நீ போய் விளையாடு..” என்று அவளுடைய பின்னலை ரிப்பனால் கட்டி முடிச்சு போட்டுவிட்டு தலையில் தொடுத்த கனகாம்பரம் சரத்தை அலங்காரமாய் வைத்து அழகு பார்த்து பேத்தியின் கன்னத்தை வழித்து முத்தமிட்டு அனுப்பி வைத்தார் பாட்டி.
“அம்மாவும் இப்டிதான் பின்னி பூ வெச்சி முத்தம் குடுப்பாங்க பாட்டி.. அம்மா மாதிரியே நீங்களும் பின்னி பூ வெச்சி முத்தம் குடுக்கறீங்க..” என்று சொல்லி, சிரித்துக் கொண்டே வர்ஷா தன் சகோதரனுடனும் அத்தை மகன்களுடனும் விளையாடச் சென்றாள்.
பாட்டி அவசர அவசரமாக உள்ளறைக்குச் சென்று தன்னுடைய பழைய இரும்புப் பெட்டியைத் திறந்தார்.
பெட்டியின் மூடியின் உள் பக்கத்தில் ஒரு பெண்ணின் படம் ஒட்டியிருந்தது.
‘நீ திரும்பி வந்துட்டியா? வந்தவ வேற எங்கியாவது போக வேண்டியதுதானே? இங்க எதுக்கு வந்த? உன்ன கெஞ்சி கேக்கறேன்.. என் பேரன்களுக்கும் பேத்திக்கும் எந்த கெடுதலும் பண்ணிடாத..’ என்று அந்தப் புகைப்படத்தைப் பார்த்து தன் மனதுக்குள் சொல்லிக் கொண்டார் பாட்டி.
வாசலில் தாத்தாவின் குரல் கேட்க, அவசரமாக அந்தப் பெட்டியை மூடிவிட்டு கூடத்துக்கு வந்தார் பாட்டி.
வீட்டுக்குள் வந்த தாத்தா,
“மீனு! யாரு வந்திருக்கான்னு பாரு..” என்று தன்னுடன் அழைத்து வந்த பெண்ணைக் காட்டிக் கூறினார்.
வந்திருந்த பெண்ணைப் பார்த்து வெளியில் புன்னகைத்த பாட்டி மனதுக்குள் அதிர்ந்தார்.
குழந்தைகள் நால்வரும்,
“ஹை! நிலாப்பாட்டி! காலையில நாங்க இவங்களதான் குளத்துக்கு போற வழியில பாத்தோம்..” என்று ஒரே குரலில் கூவினார்கள் குழந்தைகள்.
அந்த நிலாப்பாட்டி குழந்தைகளைப் பார்த்துச் சிரித்து ஆளுக்கொரு மயிலிறகை அவர்களிடம் கொடுக்க, மீனுப்பாட்டிக்கு மனம் பதறியது.
– தொடரும்….
அன்னபூரணி தண்டபாணி