பாரம்பரியக் கதைகள் – பேராசையின் எல்லை

நகரத்தின் ஒரு பகுதியில் இருந்த அந்தப் பெரிய வீட்டில் கணவனும், மனைவியுமாக இரண்டு முதியவர்கள் வசித்து வந்தார்கள். அவர்கள் வசித்த தெருவில் சுற்றிக் கொண்டிருந்தது அந்த நாய் ஜாக்கி. முதியவர்களின் வீட்டுத் தோட்டம் நல்ல பெரியதாக இருந்தது. ஒருநாள் அங்கு வந்து எட்டிப்பார்த்த ஜாக்கிக்கு அந்த வீடு பிடித்துப் போனது. அந்தத் தோட்டத்தையே தன்னுடைய நிரந்தர இருப்பிடமாக்கிக் கொண்டது.

வயதான அந்தத் தம்பதியும் ஜாக்கியின் மீது இரக்கம் கொண்டு அங்கேயே தங்க அனுமதித்தார்கள். அவ்வப்போது தங்களால் முடிந்த உணவையும் கொடுத்து வந்தார்கள். ஜாக்கியும் மகிழ்ச்சியோடு அந்த வீட்டில் வசித்து வந்தது.

வீட்டிற்குள் யார் நுழைந்தாலும் அவர்களைப் பார்த்து ஜாக்கி, ஆக்ரோஷமாகக் குரைத்துத் தள்ளி விரட்டிவிடும். அவர்கள் கையில் ஏதாவது கொண்டு வந்தால் அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பதில்லை ஜாக்கி. அவர்கள் மீது பாய்ந்து அந்தப் பொருளைப் பிடுங்கிக் கவ்விக் கொண்டு ஓடிவிடும். உணவுப் பொருளாக இருந்தால் அவ்வளவுதான். ஜாக்கியைத் தாண்டி வீட்டிற்குள் அந்தப் பொருள் போகவே முடியாது.

நாட்கள் போகப் போக அந்தத் தெருவில் வசித்த எல்லாருக்கும் ஜாக்கியின் போக்கே பிடிக்கவில்லை. பெரிய தலை வேதனையாக மாறிப்போனது அதனுடைய நடவடிக்கை. குழந்தைகள் தெருவில் இறங்கி விளையாடவே பயப்பட்டன. முதியவர்கள் வசித்த வீட்டிற்குள் வேறு யாருமே நுழைய விரும்பாத நிலை உருவானது. தபால்காரர் கூடக் கதவுக்கு வெளியே தூரத்தில் நின்றபடி, கடிதங்களைத் தூக்கி எறிந்துவிட்டுப் போய்விடுவார்.

படம் – அப்பு சிவா

தனக்கு இலவசமாகக் கிடைத்து வந்த உணவு பெருமளவில் குறைந்து போனதால் ஜாக்கி தவித்தது. அதிக உணவிற்காகக் கடைத்தெருவில் திரிய ஆரம்பித்தது. யாராவது கடைக்குள் நுழைந்து ஏதாவது உணவுப்பொருளை வாங்கிக்கொண்டு இறங்கினால் போதும். அவர்கள் பின்னாலேயே ஓடி அந்தப் பையைப் பிடுங்கிக் கொண்டு ஓடிவிடும்.

வர வர ஜாக்கியின் தொந்தரவு அதிகமாகி விட, ஊர் மக்கள் அதனை எங்கு கண்டாலும் கல்லால் அடித்துத் துரத்த ஆரம்பித்தார்கள். அப்படியும் ஜாக்கியின் கொட்டம் அடங்கவில்லை.

ஒருநாள் அந்தக் கடைத்தெருவில் இருந்த கசாப்புக் கடை அதன் கண்ணில் பட்டது. இறைச்சியின் சுவையையும், எலும்புகளையும் நினைத்து நாக்கில் நீர் சுரந்தது. எப்படியாவது இறைச்சியை யாரிடமிருந்தாவது பிடுங்கித் தின்னும் ஆசையுடன் கடைக்குள் நுழைபவர்களை நோட்டம் விட்டபடி அங்கேயே நின்று பார்த்துக் கொண்டிருந்தது ஜாக்கி.

அப்போது வயதான ஒரு பெண் கடையில் நுழைந்து இறைச்சியை வாங்கிக்கொண்டு வெளியே வந்தாள். தாவிப் பாய்ந்து அவளைத் தாக்கி, இறைச்சி இருந்த பையைப் பிடுங்கிக் கொண்டு ஓடியது ஜாக்கி. தெருவில் இருந்த மக்கள் அதனை வெறியுடன் துரத்தினார்கள். எப்படியோ தப்பித்த ஜாக்கி அந்த ஊரில் இருந்த ஆற்றங்கரைக்குத் தப்பி ஓடியது.

பையில் இருந்த இறைச்சித் துண்டில் பெரியதாக ஒன்றைக் கவ்வியபடி, பெருமையுடன் ஆற்று நீரில் எட்டிப் பார்த்தது.

தண்ணீருக்குள் தெரிந்த மற்றொரு நாயையும், அதன் வாயில் இருந்த இறைச்சித் துண்டையும் பார்த்து ஆச்சர்யம் அடைந்தது ஜாக்கி.

‘இந்த நாயோட வாயில இருக்கற இறைச்சித் துண்டையும் எப்படியாவது பிடுங்கிட்டா, வயிறு நெறஞ்சிடும்.’ என்று முடிவு செய்த ஜாக்கி, தண்ணீரில் தெரிந்த தன் பிம்பத்தைப் பார்த்துக் குரைத்தது.

குரைக்க ஆரம்பித்தவுடன் அதன் வாயில் இருந்த இறைச்சியும் தண்ணீரில் விழுந்துவிட்டது. தண்ணீரில் தெரிந்த பிம்பமும் ஜாக்கியைப் பார்த்துக் குரைத்தது. ஜாக்கி வெறியுடன் தண்ணீருக்குள் பாய்ந்தது. நீண்ட நேரம் தேடியும் இன்னொரு நாயைக் கண்டுபிடிக்க முடியாமல் களைத்துப் போய்க் கரையேறியது ஜாக்கி. தன்னுடைய உணவையும் தொலைத்திருந்தது அது.

ஊருக்குள் திரும்பிப் போன ஜாக்கியை ஊர்க்காரர்கள் விரட்டியடித்தனர். முதலில் தங்கியிருந்த தோட்டத்துக்குப் போனால் அங்கே அவர்கள் புதிய நாயை வளர்க்க ஆரம்பித்திருந்தார்கள். ஜாக்கியை விடப் பெரிய உருவத்துடன் இருந்த நாயை ஜாக்கியால் எதிர்க்க முடியவில்லை. தோல்வி தந்த வருத்தத்துடன் அந்த ஊரை விட்டே ஓடிப் போனது ஜாக்கி.

புவனா சந்திரசேகரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *