நூல்: என் அப்பாவின் டிராகன்
ஆசிரியர் : ஞா.கலையரசி
பக்கம் : 96
7/50+
பதிப்பகம்: நிவேதிதா
விலை: ₹100

இவருடைய நிறைய சிறார் கதைகள் வாசித்து இருக்கிறேன். இது உலகச் சிறார் சினிமா சார்ந்த கட்டுரைகள். பதிமூன்று படங்களைப் பற்றி எழுதியுள்ளார். பொதுவாக தமிழில் சிறார் படங்கள் இல்லையென்ற குறை எல்லோருக்கும் உண்டு. அதீத வன்முறை, ஆபாசம் போன்ற படங்களை குழந்தைகளுடன் பார்ப்பதைப் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். ஆனால் மற்ற நாடுகளில் அனிமேசன் மூலம் சிறார் கதைகளை சினிமாவாக எடுத்திருக்கிறார்கள். அதைப் பற்றிய சுவாரசியமான அறிமுகம் இக்கட்டுரை.
படித்து முடித்தவுடன் எப்படியாவது அத்திரைப்படங்களைப் பார்த்து விட வேண்டும் என்று எண்ணுகிறேன். எல்லா படங்களிலும் ஒரு சோகம் இருந்து கொண்டே இருக்கிறது. அது வறுமை, போர் என்பதாக இருக்கிறது. போரினால் பெற்றோர் இழந்த குழந்தைகள், வறுமையினால் வேறு இடம் நோக்கி நகரும் குழந்தைகள் என்று உள்ளது. பெரும்பாலான படங்கள் ஒரு சிறார் நாவலைத் தழுவியே எடுக்கப்பட்டுள்ளது. இதனை வாசிக்கும் குழந்தைகளும், பெற்றோர்களும் இப்படங்களையும் தேடிப் பார்ப்பார்கள் என்றே எண்ணுகிறேன். சிறுவர்கள் கதை படிப்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் சிறந்த சிறுவர் படங்களைப் பார்ப்பதும். மாயாஜாலம், கண்கவரும் அனிமேசன் இதெல்லாம் அவர்களை படைப்பூக்கம் கொள்ள வைக்கும். எல்லா நல்ல பழக்கங்களையும் அறிவுரையாக சொல்ல முடியாது. அவர்களே உணர்ந்து கொள்ளும் வகையில் கதையாகவோ, படமாகவோ பார்த்தால் அவர்களின் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து விடும். சோஷியல் ஸ்டோரிஸ் என்று சிறப்புக் குழந்தைகளுக்கு சொல்லித் தருவார்கள்.
ஜெயா சிங்காரவேலு