விடுமுறையும் தொடங்கியது!
உற்சாகம் பொங்கியது!
தாத்தா, பாட்டி கிராமமும்
வா வா என்று அழைத்தது!
புகைவண்டிப் பயணத்தில்
புதுப்புது நண்பர்களுடன்
கூடி நாங்கள் விளையாடி
பொழுதினையும் கழித்தோமே!
பசுங் கம்பளம் விரித்துமே
கிராமம் எங்களை வரவேற்றது!

வீட்டையும் நெருங்கினோம்!
தாத்தா, பாட்டி முகங்களில்
மகிழ்ச்சிப் பூக்கள் மலர்ந்துமே
மணம் வீசி வரவேற்றன!
அதிகாலை தினந்தோறும்
ஆற்றங்கரையில் கொண்டாட்டம்!
மீன்களோடு போட்டி போட்டு
நீச்சலுமே கற்றுக் கொண்டோம்!
சித்தப்பா, சித்தி, அத்தை, மாமா
அனைவரும் ஒன்று சேர்ந்தோம்!
பெரியப்பா, பெரியம்மாவுடன்
மாமா, மாமி குடும்பங்களும்
அக்கம்பக்க வீடுகளில் எங்கள்
உறவினர்கள் ஒன்று சேர்ந்து
கதைகள் பேசிக் களிப்புடனே
ஆடிப்பாடி மகிழ்ந்திருந்தோம்!
விதவிதமாய்த் தின்பண்டங்கள்
வேடிக்கை விளையாட்டுகள்
கைப்பேசி மறந்திருந்தோம்!
கவலைகளைத் துறந்திருந்தோம்!
தொலைக்காட்சி பார்க்கவில்லை!
தொல்லைகளும் இங்கு இல்லை!
விடுமுறையில் கிராமம் செல்வோம்!
விதைப்போம் மனதில் புத்துணர்வை!
– புவனா சந்திரசேகரன்.