பாரதி 131வது பிறந்தநாள் கவிதை

Bharathi

நூற்றான்டு கடந்தும்

நம் உள்ளங்களில் சுடர்விட்டெரியும் பாயுமொளி

அச்சம் தவிரென்பான்

ஓடி விளையாடென்பான்

ரௌத்திரம் பழகென்பான்

முரசெடுப்பான்

இனி எங்கெங்கும் அன்பே என்று முழங்கிடுவான்

கொட்டெடுப்பான்

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென ஆர்ப்பரிப்பான்

எங்கும் தமிழென்பான்

இன்பதமிழினிமை வேறெங்கும்  காணோம் என மார்த்தட்டிடுவான்

மாதர் மாண்புதனை கொண்டாடிடுவான் அதை

பேணாத மடமையை கொளுத்திடுவோமென்பான்

வஞ்சகர் கூட்டத்தை  வம்புக்கிழுப்பான்

வர்ண பேதங்களையெல்லாம் வீணென்றிடுவான்

நெஞ்சு பொறுக்குதில்லை என்றரற்றிடுவான்

அஞ்சி நடுங்கிடும் மனத்தை  தட்டி எழுப்பிடுவான்

வல்லமை தாராயோ என்று வேண்டி நிற்பான்

தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோவென எள்ளி நகைத்திடுவான்

சென்றது இனி மீளாதென்பான்

இன்று தான் புதிதாய் பிறந்தோமென்பான்

கனவு மெய்ப்பட வேண்டுமென்பான்

காணி நிலம் கேட்டிடுவான்

இந்த வையம் பாலித்திட என்றும்

பாடித்திரியவேணுமென்பான்

காணும் அனைத்தும் காட்சிப்பிழையென்பான்

மாயை பழித்திடுவான்

கண்ணம்மா கண்ணம்மா என்று மருகிடுவான்

இது பார் கன்னத்து முத்தமொன்று என உருகித் திளைப்பான்

காற்று வெளியிடையில் காதலிப்பான் – மிச்சமிருக்கும்

சோற்று பருக்கையை பறவைக்கு பகிர்ந்து

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று பாட்டெடுப்பான்

ஞாலம் செழிக்க நாளும் குரல் கொடுத்த

எங்கள் ஞான கிறுக்கன்

நாவில் நெருப்பெழுதி

நாடி துடி துடிக்க

மீசை முறுக்கி

நெஞ்சம் நிமிர்த்தி

முன்பே சொல்லி வைத்தான்

“பல வேடிக்கை மனிதரைப்போல

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ”

கணித்தவன்  கவிசித்தன்

காலம் வென்று நின்றான்!

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
1 கருத்து
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments