சிட்டி எறும்பு

ஆற்றங்கரை ஓரம் இரண்டு எறும்புகள் நண்பர்கள் ஆக இருந்தது.

ஒன்றின் பெயர் சிட்டி இன்னொன்றின் பெயர் கிட்டி…சிட்டி எப்போதுமே நம்பிக்கை தளராதவன்.. ஆனால் கிட்டி அப்படி கிடையாது.

சிட்டிக்குத் தெய்வ பக்தி அதிகம். கூடவே நம்பிக்கையும்…எங்கே போனாலும் இரண்டு பேரும் சேர்ந்தே செல்வர். ஒரு நாளும் பிரிந்தது கிடையாது.

கிட்டி எறும்பு எப்போதுமே நம்பிக்கை இல்லாமல் தான் பேசும். அதே நேரத்தில் சிட்டி எறும்பு எப்பவுமே உடைஞ்சு போகாது..நிறைய நம்பிக்கை, தைரியம் அது கிட்ட இருந்துச்சு..

மழைக்காலம் முடிந்து வெயில் காலம் தொடங்கி இருந்தது. காட்டில் உணவு தட்டுப்பாடு வரத் தொடங்கி இருந்தது.

உணவுக்காக நீண்ட தூரம் தினமும் செல்ல வேண்டியதா இருந்துச்சு.. அன்றைக்கும் உணவைத் தேடி இரண்டு பேரும் புறப்பட்டனர். நீண்ட தூரம் தேடியும் எதுவும் கிடைக்கலை..

அன்றைக்கு வெயில் அதிகமாக இருந்தது. சிட்டி, கிட்டி இரண்டு பேருமே ரொம்ப சோர்ந்து போய் இருந்தனர்.

“இதுக்கு மேல என்னால நடக்கவே முடியாது. இன்றைக்கு சாப்பிடவும் எதுவும் கிடைக்கலை…அநேகமாக இன்றைக்கு தான் நமக்கு கடைசி நாளாக இருக்குமோ..”, கிட்டி எறும்பு சோகமாகக் கேட்டுச்சு..

சிட்டி எறும்பு அது கிட்ட நம்பிக்கை வர்ற மாதிரி பேசுச்சு.. “எந்த நேரத்திலும் தைரியத்தை இழக்கக் கூடாது. வீட்டில் நம்ம அம்மா, அப்பா அதைத் தானே சொல்லித் தந்தாங்க..எழுந்திரு உன்னால முடியும். நமக்கான உணவை அந்தக் கடவுள் நிச்சயமாக வைத்து இருப்பாரு… யாரையும் பட்டினியாகப் போட மாட்டாரு..”. நிறைய நம்பிக்கை வார்த்தை கேட்கவும் கொஞ்சம் தைரியம் வந்து மறுபடியும் நடக்க ஆரம்பிச்சுது..

அப்போது எதிர்பாராத வகையில் இவர்கள் நடந்து கொண்ட இடத்திற்கு அருகில் பெரிய சோளக்கதிர் ஒன்று வந்து விழுந்தது.

இருவரும் ஆச்சர்யமாக வானத்தைப் பார்க்க வானத்தில் ஒரு காகம் வேகமாகப் பறந்து சென்று கொண்டு இருந்தது.

உணவைப் பார்த்த பிறகு தான் உயிரே வந்தது. வயிறு நிறைய சாப்பிட்ட பிறகும் நிறைய இருந்தது சோளக்கதிரில்..

“வா நாம சீக்கிரம் வீட்டுக்குப் போகலாம். அங்க போய் மற்றவங்க கிட்ட சொல்லலாம். அவங்களுக்கு இங்கு உணவு இருக்கிறது என்று அழைச்சிட்டு வரலாம்”, அப்படின்னு சொல்லிட்டே வேகமாகப் புறப்பட்டனர்.

அன்றைக்கு சிட்டியோட அம்மாவுக்கு அத்தனை மகிழ்ச்சி.. தன்னுடைய குழந்தை தனக்கு மட்டுமே உணவு கிடைக்கும்னு நினைக்காமல், சாப்பிடாமல் இருக்கிற மற்றவங்களையும் நினைச்சுப் பார்க்கிறதே அப்படின்னு..

சிட்டியோட அம்மா நினைத்தது சரிதானே குழந்தைகளே..நாமும் கூட சிட்டி மாதிரி மற்றவங்களைப் பற்றியும் யோசிக்கணும். தனக்கு மட்டும் கிடைச்சா போதும்னு நினைக்க கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *