காட்டின் நடுவே ஒரு குளம். ஆழமான குளம். மற்றும் தெள்ளிய நீர் நிறைந்த குளம். அந்தக் குளத்தில் நிறைய மீன்களும்

ஒரு நண்டும் ஒரு கொக்கும் வசித்து வந்தன.

கொக்கு தனக்குப் பசியெடுத்த போதெல்லாம் மீன்களைப் பிடித்து தின்று

நிம்மதியாக வாழ்ந்து வந்தது. அதற்கு வயதாக வயதாக அதனால் ஓடியாடி மீன்களைப் பிடிக்க முடியவில்லை. சரியாக உண்ணாமல் இளைத்து பலவீனமாகவும் ஆகி விட்டது.

தனது பிரச்சனையைத் தீர்க்கத் தந்திரமாக ஒரு வழி கண்டு பிடித்தது.

அடுத்த நாள் மிகவும் சோகமாக உட்கார்ந்து கொண்டிருந்தது. தனக்கு அருகில் துள்ளிக் கொண்டிருந்த மீன்களைப் பிடிக்கக் கூட முயற்சி செய்யவில்லை. அதைப் பார்த்த

நண்டு கொக்கிடம் கேட்டது.

“நண்பா, என்ன ஆயிற்று உனக்கு? ஏன் இப்படி சோகமாக அமர்ந்திருக்கிறாய்?”

கொக்கு சிறிது நேரம் யோசித்து விட்டுப் பின்னர் வருத்தத்துடன் பதில் கூறியது.

“நான் நேற்று பகலில் இங்கிருந்து பறந்து சென்ற போது சிறிது தூரத்தில்  மனிதர்கள் சிலர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன்.அடுத்த மாதம் இந்தக் குளத்தில் இருக்கும் மீன்களைப் பிடித்து விட்டு இந்தக் குளத்தை  மண் போட்டு மூடப் போகிறார்களாம்.”

“எனக்குக் கவலையில்லை. பறந்து போய் விடுவேன். உங்களையெல்லாம் நினைத்து எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது.”

kokkum nandum
படம்: அப்புசிவா

திறமையாகப் பொய்களைப் புனைந்து கூறி சோகமாக முகத்தை வைத்துக் கொண்டது. கொக்கு சொன்ன வார்த்தைகளைக் கேட்டு மீன்களும் நண்டும் கவலையில் ஆழ்ந்தன.

“நண்பரே நீங்கள் தான் எங்களைக் காப்பாற்ற ஒரு வழி சொல்ல வேண்டும்”

அசட்டுத் தனமாக அந்தக் கொக்கிடமே மீன்கள் கேட்க அந்தக் கொக்கும் அவர்களைக் காப்பாற்ற ஒரு வழி சொன்னது.

“இங்கிருந்து நீண்ட தூரத்தில் இன்னோரு பெரிய குளம் இருக்கிறது. நிறைய நீர் மிகுந்த குளம். நான் உங்கள் அனைவரையும் அந்தக் குளத்திற்குக் கொண்டு போய்ச் சேர்க்கிறேன். ஆனால் ஒரு தடவைக்கு ஒரு

மீனைத் தான் என்னால் தூக்கிச் செல்ல முடியும். எனக்கு வயதாகி விட்டது. உடலில் பலமில்லை. ஒரு மீனை விட்டு விட்டு சிறிது நேரம் இளைப்பாறி விட்டுத் தான் திரும்பவும் பறக்க முடியும்.”

கொக்கின் யோசனையை மீன்கள் ஒத்துக் கொள்ள தினமும் ஒரு மீனைத் தன் அலகுகளால் கொத்திக் கொண்டு கொக்கு பறந்தது. சிறிது தூரத்தில் இருந்த ஒரு பெரிய  பாறையில் இறங்கி மீனைக் கொன்று தின்று விட்டு அங்கேயே சிறிது நேரம் இளைப்பாறி விட்டுத் திரும்பியது.

இப்படியே அடிக்கடி செய்து வரக் கொக்கின் உடல் நன்றாகக் கொழு கொழுவென்று

ஆகி விட்டது.

குளத்தில் மீன்களும் கொஞ்சம் கொஞ்சமாகக்  குறைந்து கொண்டே வந்தன .

நண்டுக்கு என்னவோ மனதில் சந்தேகம்.

இந்தக் கொக்கு என்னவோ மோசடி செய்கிறது என்று மனதில் அதற்குத்

தோன்றியது.

கொக்கிடம் சென்று அடுத்த நாள் தன்னைக் கொண்டு போகச் சொல்லிக் கேட்க கொக்கும் சந்தோஷமாக ஒத்துக் கொண்டது.

அடுத்த நாள் காலையில் நண்டு கொக்கின் கழுத்தைத் தனது கொடுக்கால் கவ்விக் கொள்ள கொக்கு பறக்கத் தொடங்கியது.

சிறிது தூரத்தில் நணடு குனிந்து  பார்த்த போது பாறை மீது மீன்களின் எலும்புகள் சிதறிக் கிடந்தது தெரிந்து விட்டது..உடனே  நண்டின் புத்திசாலி மூளைக்குக்

கொக்கின் தந்திரம் புரிந்து விட்டது.

உடனே தனது கூர்மையான கொடுக்கால் கொக்கின்  கழுத்தைத் துளைத்து விடக்

கொக்கின் கழுத்தில் இருந்து இரத்தம் பெருகி அதே பாறையின் மீது சிந்தியது.

கொக்கும் அந்தப் பாறையின் மீதே விழுந்து உயிரை விட்டது.

நண்டு மெதுவாகத் தனது குளத்திற்குத் திரும்பியது. குளத்தில் மீதியிருந்த மீன்கள்

புத்திசாலி நண்டால் உயிர் பிழைத்து விட்டன. அந்தக்  குளத்தில் மற்ற மீன்களும் நண்டும் நீண்ட நாட்கள் சந்தோஷமாக வாழ்ந்தன.

தீயோர் சொல் கேட்பது தவறு.

மற்றவர்களின் ஆலோசனையை உடனடியாக ஏற்காமல் தீர விசாரித்து ஏற்பது நல்லது.

விழிப்புணர்வு உயிரைக் காக்கும்.

நம்மைச் சுற்றி நடப்பவற்றை விழிப்புணர்வோடு கவனித்து செயலாற்ற வேண்டும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments