![maayavanathil oru mandhirapayanam](https://poonchittu.com/wp-content/uploads/2024/05/maayavanathil-oru-mandhirapayanam.jpg)
ஆசிரியர்:-ராஜலட்சுமி நாராயணசாமி
வெளியீடு:- பாரதி பதிப்பகம், சென்னை-92. (+91 93839 82930)
விலை:-ரூ 70/-
இச்சிறுவர் கதைத் தொகுப்பில் ஐந்து கதைகள் உள்ளன. அறிவியல் அறிஞரான ஷிவானியின் அம்மா, ஒரு கைக்கடிகாரம் வடிவமைத்து உருவாக்குகிறார். நல்ல கனவுகளை உருவாக்கும் அந்தக் கடிகாரத்தை, சிறுமியான ஷிவானி பயன்படுத்துகிறாள். அது அவளின் கனவின் வழியே அவளுக்குத் தோழியாகி, சிக்கல் நேரும் போதெல்லாம் வழிகாட்டுகிறது. கனவின் வழி ஷிவானி மேற்கொள்ளும் மந்திரப் பயணங்களும், சாகச அனுபவங்களும், புரிதல்களும் சின்னக் கதைகளாக, இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
மாயவனம் என்ற முதல் கதையில், சகி வளமான நாடு. சகி ஆற்றில் வஜ்ரா மீன்களிடம் இருந்த மாணிக்கங்களே, அந்த வளத்துக்குக் காரணம் என்பதையறிந்த பக்கத்து நாட்டு அரசன், அந்த மீன்களைப் பிடித்து மாணிக்கங்களைக் கைப்பற்றுகிறான். அதற்குப் பிறகு சகி நாடு வளம் குறைந்த நாடாக ஆகிறது. மீண்டும் சகி நாடு பழைய நிலைமைக்குத் திரும்பியதா? மாணிக்கங்கள் திரும்பக் கிடைத்ததா? என்பதையறிய, இந்தக் கதைப்புத்தகம் வாங்கி குழந்தைகளுக்கு வாசிக்கக் கொடுங்கள்.
தேர்வில் தோல்விக்காகப் பயப்படத் தேவையில்லை என்ற பாடத்தை இயற்கை நிகழ்வுகளின் மூலம், ஷிவானி கற்றுக் கொள்கிறாள். ‘குழந்தைகள் நொறுக்குத் தீனி உண்பதால் வரும் கேடுகளையும், சத்தான காய்கறி உணவு சாப்பிடுவதன் அவசியத்தையும் கடக்,முறுக்,நொறுக்’ கதை யின் மூலம், தெரிந்து கொள்ளலாம். எந்நேரமும் மொபைலில் விளையாடுவதைத் தவிர்த்துக் கிராமத்து விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும் என்பதையும், தோழி சொல்லைத் தட்டக் கூடாது என்பதையும் அடுத்த இரு கதைகள் சொல்கின்றன.
6+ குழந்தைகள் வாசிப்பதற்கு ஏற்ற, சுவாரசியமான கதைகள்.
![cropped Birdy White BG](https://poonchittu.com/wp-content/uploads/2020/07/cropped-Birdy-White-BG.png)
பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.