பாரம்பரியக் கதைகள் – நானும் அழகுதான்

ஒரு காட்டில் ஒரு வாத்து தன்னுடைய முட்டைகளை ஒரு மரத்தின் கீழே இட்டு தினமும் அடை காத்து வந்தது. ஒவ்வொரு முட்டையாக உடைந்து அழகான வாத்துக் குஞ்சு வெளியே வந்தது. ஒவ்வொரு குட்டி வாத்தும் இலேசான மஞ்சள் நிறத்தில் பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது. ஒரே ஒரு பெரிய முட்டையைத் தவிர, மீதி எல்லா முட்டைகளும் உடைந்து குட்டிக் குட்டி வாத்துகள் வெளியே வந்து, “க்வாக், க்வாக்” என்று கத்திக் கொண்டு அம்மா வாத்தைச் சுற்றி நின்றன. அம்மா வாத்துக்கு பயங்கர மகிழ்ச்சி. தன்னுடைய குழந்தைகளைப் பார்த்துப் பார்த்து ஆனந்தம் அடைந்தது. ஒவ்வொரு குட்டி வாத்தும் அழகோ அழகு என்று பெருமிதம் கொண்டது.

ஒரே ஒரு பெரிய முட்டை மட்டும் வெடிக்காமல் இருந்தது. அம்மா வாத்து கவலையுடன் அதை அடை காத்து வந்தது.

‘இந்தக் குட்டி வாத்து மற்ற வாத்துகளை விட அதிக அழகாக இருக்கப் போகிறது. முட்டையும் பெரியதாக இருக்கிறது. வெளியே வருவதற்கும் அதிக சமயம் எடுத்துக் கொள்கிறது.’ என்று மனதில் நினைத்தது அம்மா வாத்து.

அந்த அம்மா வாத்தின் காத்திருப்பும் ஒருநாள் முடிவுக்கு வந்தது. முட்டை விரிந்து அதிலிருந்து குஞ்சும் மெதுவாக வெளியே வந்தது. ஆனால் அதைப் பார்த்து அங்கிருந்த அம்மா வாத்தும், மற்ற குட்டி வாத்துகளும் அதிர்ச்சி அடைந்தன. ஏனென்றால் அந்தக் குஞ்சு பெரியதாக இருந்ததோடு அதன் நிறமும் மற்ற வாத்துகளில் இருந்து மாறுபட்டிருந்தது.

புதிய வாத்து இலேசான பழுப்பு நிறமும் சாம்பல் நிறமும் கலந்த நிறத்தில் இருந்தது. அங்கிருந்த மற்ற பறவைகளும், விலங்குகளும் அந்தப் புதிய வாத்தை ஏளனமாகப் பார்த்தன. அம்மா வாத்தும், மற்ற வாத்துக் குஞ்சுகளும் மட்டும் அதனிடம் அன்போடு நடந்துகொண்டன. அம்மா வாத்து அதற்கு ஜில்ஜில் என்று பெயர் வைத்து நன்றாகப் பார்த்துக் கொண்டது.

படம் – அப்பு சிவா

நாட்கள் போகப் போக மற்ற பறவைகள் மற்றும் விலங்குகள் தன்னுடன் விளையாடாமல் தன்னுடைய சகோதர, சகோதரிகளிடம் விளையாடுவதைக் கண்டு ஜில்ஜில் வருந்தியது. அம்மாவிடம் போய்க் கேட்டது.

“அம்மா, என் கூட யாருமே விளையாட மாட்டேங்கறாங்க? நான் மட்டும் ஏன் வேற மாதிரி இருக்கேன்? என்னோட அக்கா, அண்ணா மாதிரி நான் அழகாவே இல்லை. அதுனாலதான் யாருக்கும் என்னைப் பிடிக்கவே இல்லையாம்மா? “ என்று பரிதாபமாகக் கேட்டது.

“இல்லை ஜில்ஜில். நீ ஏன் அப்படி நினைக்கறே? நீ ரொம்ப அழகாத்தான் இருக்கே. நீ என் கூட விளையாடு. என் கூடவே இரு.” என்று சொன்னது அம்மா வாத்து.

என்னதான் அம்மா சமாதானம் சொன்னாலும் ஜில்ஜில் சோகமாகவே திரிந்தது. ஒருநாள் தனது குடும்பத்தை விட்டுப் பிரிந்து தொலைதூரம் பயணித்தது. புதிய இடத்திலும் அதற்கு நண்பனே கிடைக்கவில்லை. காட்டில் சுற்றும்போது ஜில்ஜில் ஒரு நாயைச் சந்தித்தது. அந்த நாயோ ஜில்ஜில்லைப் பார்த்து அதிகமாகக் குரைத்து அதை விரட்டி விட்டது. வேறு இடம் தேடி அலைந்தது ஜில்ஜில்.

குளிர்காலம் ஆரம்பித்துப் பனி பொழிய ஆரம்பித்தது. உடலை உறைய வைக்கும் பனிப் பொழிவில் மாட்டிக்கொண்டு திண்டாடிய ஜில்ஜில்லை ஒரு விவசாயி கண்டுபிடித்துத் தன்னுடைய வீட்டிற்கு எடுத்துச் சென்றான். விவசாயியின் மனைவியும் ஜில்ஜில்லை அன்போடு கவனித்துக் கொண்டாள். ஆனால் விவசாயியின் வீட்டில் இருக்கும் கோழி, பூனை, மாடு எல்லாமே ஜில்ஜில்லை வெறுத்து ஒதுக்கின. அதனுடைய உருவத்தை ஏளனம் செய்தன.

ஜில்ஜில் மனம் உடைந்து போய் விவசாயியின் மனைவியின் பின்னாலேயே சுற்றியது. அவள் சமையலறையில் வேலை செய்யும் போது ஜில்ஜில்லும் அவளோடு திரிந்தது. இருந்தாலும் இதுவரை ஒரு வீட்டில் வசித்த பழக்கம் இல்லாததால் தடுமாறியது ஜில்ஜில். பாத்திரத்தில் இருந்த பாலைக் கொட்டி விட்டது ஒருநாள் . வெண்ணெயில் உட்கார்ந்து வீடு பூராவும் வெண்ணெயைச் சிதறியது. முட்டைகள் மீது காலை வைத்து ஜில்ஜில் ஏறி நின்றதால், முட்டைகள் உடைந்து வீணாகின. கோபமடைந்த விவசாயியின் மனைவி, ஜில்ஜில்லை வீட்டை விட்டுத் துரத்திவிட்டாள்.

அழுதுகொண்டே வெளியேறிய ஜில்ஜில் காட்டுக்குள் அங்குமிங்கும் திரிந்து கிடைப்பதைச் சாப்பிட்டு எப்படியோ நாட்களைக் கழித்து வந்தது. குளிர்காலம் முடிந்து வசந்தகாலம் தொடங்கியது.

ஒருநாள் ஒரு குளத்தில் தண்ணீரில் நீந்தி விளையாடும் அன்னங்களைப் பார்த்து இரசித்தது ஜில்ஜில். வெள்ளை வெளேரென்று அழகாக இருந்தன அந்த அன்னங்கள். அந்த அன்னங்கள் ஜில்ஜில்லைப் பார்த்து நட்புடன் சிரித்தன.

“வா வா, நீயும் வந்து எங்களோட சேந்து விளையாடு.” என்று அந்த அன்னங்கள் கூப்பிட்டதும், ஜில்ஜில்லுக்கோ பயங்கர சந்தோஷம். தண்ணீரின் அருகில் சென்று எட்டிப் பார்த்தபோது அதில் தெரிந்த தன்னுடைய உருவத்தின் பிம்பத்தைப் பார்த்த ஜில்ஜில் ஆச்சரியத்துடன் நின்றது.

“நானா இது? வெள்ளை வெளேரென்று அழகாக மாறிவிட்டேனே இப்படி! நான் அன்னம் என்பதால்தான் வாத்துகளுடன் இருந்தபோது வித்தியாசமாகத் தெரிந்திருக்கிறேன். நான் அன்னம் என்பதை இன்றுதான் புரிந்து கொண்டேன். நானும் அழகாக இருக்கிறேன்.” என்று உற்சாகத்துடன் சொல்லிக்கொண்டு தனது கூட்டத்துடன் சேர்ந்து மகிழ்ந்த ஜில்ஜில், அதன் பிறகு மகிழ்ச்சியாக வாழ்ந்தது.

புவனா சந்திரசேகரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *