– ஜூல்ஸ் வெர்னே
தமிழில்: அகிலாண்ட பாரதி
1872ல் வெளியான எண்பது நாட்களில் உலகத்தைச் சுற்றி (Around the world in eighty days) என்ற நாவல், Journey to the centre of the earth உள்ளிட்ட அறிவியல் புனைவும், பயண அனுபவங்களும் நிரம்பிய பல நாவல்களை எழுதிய ஆங்கில எழுத்தாளர் ஜுல்ஸ் வெர்னேயின் குறிப்பிடத் தகுந்த படைப்பாகும். மிகுந்த சுவாரசியமான இந்த நாவல் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திரைப்படங்களாகவும் பல முறை எடுக்கப்பட்டுள்ளது. இன்றைய நவீன யுகத்தில் வெகு விரைவில் உலகத்தைச் சுற்றி வந்துவிடலாம். ஆனால் சுமார் நூற்றைம்பது வருடங்களுக்கு முன்பாகவே, ‘என்னால் எண்பது நாட்களில் உலகைச் சுற்றிவர முடியும்’ என்று சவால் விட்டவர்தான் கதையின் நாயகன் ஃபிலியாஸ் ஃபாக்.
லண்டனில் இருந்து கிளம்பும் அவர் எப்படி எங்கெங்கு பயணம் செய்தார், வழியில் என்னென்ன ஆபத்துகளைச் சந்தித்தார் என்பதை இந்த நாவல் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் கூறுகிறது. அப்போது இந்தியா இங்கிலாந்து நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்ததால் கதையில் இந்திய நாட்டின் சில பகுதிகளும் வருகின்றன. அந்த நாட்களில் இருந்த வாகன வசதிகள், சட்ட நடைமுறைகள், பழக்க வழக்கங்கள் இவற்றை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. அவருடைய உதவியாளராகக் கூடவே வரும் பாஸர்பார்ட்டவுட் முக்கியமான ஒரு கதாபாத்திரம். ஆங்கிலத்தில் இதே பெயரில் வெளியான திரைப்படத்தில் ஜாக்கிசான் பாஸர்பார்ட்டவுட் வேடத்தில் நடித்திருந்தார்.
இந்த உலகப் புகழ் பெற்ற நாவலை பூஞ்சிட்டு வாசகர்களுக்காக எளிமையாக, சுருக்கப்பட்ட வடிவில் தருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்!
அத்தியாயம் 1
ஃபிலியாஸ் ஃபாக் லண்டனில் வசித்து வந்தார். நல்ல உயரமான தோற்றமுடைய நாற்பது வயது நிரம்பிய மனிதர் ஃபாக். தன் வாழ்வில் எல்லா விஷயங்களிலும் மிகச் சரியாக நேர அளவையும் ஒழுங்கையும் கடைப்பிடிக்கக் கூடியவர். அவரைச் சுற்றியுள்ளவர்களும் அவரைப் போலவே எல்லா விதத்திலும் அதிகபட்ச ஒழுங்குடன் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பார்.
இரண்டு டிகிரி குறைவான வெப்பத்தில் அவருக்குத் தண்ணீர் கொண்டு வந்ததற்காக ஒரு பணியாளரை வேலையை விட்டு நீக்கி விட்டார். அவரிடம் ஒரு விசேஷக் கடிகாரம் இருந்தது. அது மணி, நிமிடம், நொடி, நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் அனைத்தையும் மிகத் துல்லியமாகக் காட்டக்கூடியது. அந்தக் கடிகாரத்தை வைத்தே அவருடைய வேலைகள் அனைத்தையும் திட்டமிடுவார் ஃபாக்.
அன்று புதிதாக ஒரு பணியாளர் அவரது வீட்டில் வேலைக்குச் சேர்த்திருந்தார். குட்டையான உருவமும், உருண்டையான முகமும் உடைய அந்தப் பணியாளர் துறுதுறுப்பாகவும், கலகலப்பாகவும் இருந்தார்.
“வணக்கம் ஐயா! என் பெயர் பாஸர்பார்ட்டவுட்!” என்று கூறி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
“நீங்க தான் அந்தப் புதுப் பணியாளரா? வாங்க! இங்கே பாருங்க, எனக்கு எல்லாமே ரொம்ப சரியா, சீரா நடக்கணும். ஒரு நிமிஷம் கூட எதுவும் தவறக் கூடாது. நான் வெளியே போயிட்டு வரேன், அதுக்குள்ள இந்த வேலைகளை முடிச்சு வைக்கணும்” என்று பாஸர்பார்ட்டவுட் செய்ய வேண்டிய வேலைகளைக் கூறிவிட்டு வெளியே கிளம்பினார் ஃபாக்.
வழக்கமாகச் செல்லும் உணவகத்துடன் கூடிய கேளிக்கை விடுதியை அவர் அடைந்தார். அங்கே வழக்கமாக அமரும் மேஜையில் அமர்ந்தார். எப்பொழுதும் சாப்பிடும் உணவையே சாப்பிட்டார். சரியாக மதியம் 12 மணி 47 நிமிடத்திற்கு அவருடைய உணவு நேரம் முடிவடைந்தது. அதன் பின் அன்றைய செய்தித்தாள்களை வாசிப்பதற்காக வெளியே சென்றார். மிகச் சரியாக இரவு உணவு நேரத்திற்கு மீண்டும் உணவகத்திற்கு வந்து சேர்ந்தார்.
அந்த கேளிக்கை விடுதியில் ஃபிலியஸ் ஃபாகை அவருடைய நண்பர்கள் சிலர் சந்திப்பது வழக்கம். ஆண்ட்ரூ ஸ்டுவர்ட் என்ற பொறியாளரும், தாமஸ் ஃப்ளானகன் என்ற நில உரிமையாளரும், செய்தி நிறுவனங்களை நடத்தி வந்த ஜான் சலீவன், சாமுவேல் ஃபாலன்டின் ஆகியோரும், வங்கியில் பணி புரியும் ரால்ஃப் என்பவரும் அன்று வந்திருந்தனர். ஆறு நண்பர்களும் கூடி அன்றைய முக்கியமான செய்தியை விவாதித்துக் கொண்டிருந்தனர்.
ரால்ஃப் வேலை செய்யும் வங்கியில் மூன்று நாட்களுக்கு முன்பாக 55 ஆயிரம் பவுண்டுகள் பணம் திருட்டு போயிருந்தது. “அந்த கொள்ளைக்காரன் நல்ல உடைகள் அணிந்து பணக்கார மனிதன் போல இருப்பானாம். அவனைப் பிடிக்க உதவினா 2000 பவுண்டுகள் சன்மானமா கொடுக்கிறதா காவல்துறை அறிவிச்சிருக்கு. உலகம் முழுக்க அவனைத் தேடி காவல்துறையினர் போயிருக்காங்க” என்றார் ரால்ஃப்.

“இந்த உலகம் ரொம்ப பெருசு. திறமையான திருடனா இருந்தா ஈசியா எங்க வேணா ஒளிஞ்சுக்குவான்” என்று தன் கருத்தைக் கூறினார் ஆண்ட்ரூ.
அதை மறுத்துப் பேசினார் ஃபிலியாஸ் ஃபாக். “அப்படி எல்லாம் இல்லை. இப்ப உலகம் ரொம்பவே சின்னதா ஆயிடுச்சு.”
“ஆமா அதுவும் கரெக்ட் தான் இப்போ இருக்கிற நவீன பயண வசதிகளால் ரொம்பச் சின்னதா தான் ஆயிடுச்சு. நாம நினைச்சா மூணு மாசத்துல இந்த உலகத்தை சுத்தி வந்துடலாம்” என்று ரால்ஃப் கூற,
ஓரிரண்டு நிமிடங்கள் யோசித்த ஃபாக், “இல்ல எண்பது நாளிலேயே சுத்தி வந்திடலாம்” என்றார்.
“முட்டாள்த்தனமா இருக்கு. அது எப்படி எண்பது நாளில் சுத்தி வர முடியும்?” என்று ஆண்ட்ரூ கேட்டார்.
“தாராளமா முடியும். என்னைப் பத்தி உங்களுக்குத் தெரியும்ல? எதையும் திட்டம் போட்டு மிகச் சரியா செய்றவன் நான். நான் சொல்றேன். அது முடியும்னு!” உறுதியாக மிகுந்த நம்பிக்கையுடன் கூறினார் ஃபிலியாஸ் ஃபாக்.
“நீங்க மட்டும் செஞ்சு காட்டிட்டீங்கன்னா நான் 4000 பவுண்டுகள் உங்களுக்குத் தரேன். பந்தயம் வச்சுக்கலாமா?” என்று கேட்டார் ஆண்ட்ரூ.
“அவ்வளவுதானே! நான் ஏத்துக்கிறேன். இன்னிக்கு அக்டோபர் 2, புதன்கிழமை. சரியா எண்பது நாள் கழிச்சு டிசம்பர் 21ஆம் தேதி சனிக்கிழமை இரவு 8.45க்கு இதே அறையில என்னை நீங்க சந்திக்கலாம். அதுக்கு முன்னாடி உலகத்தை நான் சுத்தி வந்துடுவேன்” சவால் விட்டார் ஃபாக்.
விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு ஒரு தீவிர பந்தயத்தில் வந்து முடிந்திருந்தது. பந்தயம் குறித்த ஒப்பந்தத்தை முறையாக ஒரு தாளில் எழுதி, நண்பர்கள் அனைவரும் கையொப்பமிட்டனர். பின் ஃபிலியாஸ் ஃபாக், “வெற்றியுடன் திரும்புகிறேன்!” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
– தொடரும்….
Dr. S. அகிலாண்ட பாரதி