ஆனியின் அன்பு சூழ் உலகு – 10

ஆனி ஞாயிறு பள்ளிக்குச் சென்ற போது தொப்பியில் பூக்களை வைத்துச் சென்றாள் அல்லவா? அது பற்றி மரிலாவுக்கு அடுத்த வெள்ளிக்கிழமை வரை தெரியவில்லை. திருமதி லிண்டே வீட்டுக்குச் சென்று விட்டுத் திரும்பிய மரிலா ஆனியைக் கூப்பிட்டார்.

“போன வாரம் மாதாக் கோயிலுக்குப் போன போது, உன் தொப்பியில் காட்டு ரோஜா, மஞ்சள் பூ எல்லாம் வைச்சிட்டுப் போனாயாமே? எதுக்காக அப்படிப் போனே? அதைப் பார்க்க ரொம்பச் சிரிப்பா இருந்திருக்கும்.” என்றார் மரிலா.

“ஆமாம். மஞ்சளும் ரோஸும் எனக்கு நல்லா இருக்காதுன்னு எனக்குத் தெரியும்.” ஆனி சொல்லத் துவங்கினாள்.

“முட்டாள்தனமாப் பேசாதே. தொப்பியில எந்த கலர் பூ வைச்சேன்னு நான் கேட்கல. தொப்பியில பூ வைக்கிறதைப் பத்திப் பேசறேன். அதைப் பார்த்தா எல்லாரும் சிரிப்பாங்க; அதைப் பத்தி நான் பேசறேன்.”  

“நெறைய பொண்ணுங்க உடையில் பூ குத்தி வைச்சி இருக்காங்க. தொப்பியில வைச்சா மட்டும் ஏன் சிரிக்கணும்? ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?”

“இது போல என்கிட்ட பதில் பேசாதே ஆனி. இந்த மாதிரி செய்யறது முட்டாள்தனம். இனிமே இந்த மாதிரி செய்யாதே. நீ அப்படி போனதைப் பார்த்து, திருமதி லிண்டேவுக்கு ரொம்ப அவமானமா இருந்துதாம். மத்தவங்க உன்னைப் பத்தி மோசமா பேசினாங்களாம். எல்லாரும் நான் தான் உன்னை அப்படி டிரெஸ் பண்ணி அனுப்பினேன்னு நினைச்சி இருப்பாங்க.”  

“ஓ! அதுக்காக ரொம்ப வருந்துறேன்”! என்றாள் ஆனி. அவள் கண்களில் கண்ணீர் குளம் கட்டி நின்றது.

“அதனால் உங்களுக்குப் பிரச்சினை வரும்னு எனக்குத் தெரியாது. அந்தப் பூக்கள் ரொம்ப அழகா இருந்துச்சி. தொப்பியில வைச்சா ரொம்ப அழகாயிருக்கும்னு நினைச்சேன். நெறைய பொண்ணுங்க அவங்க தொப்பியில செயற்கை பூக்களை வைச்சி இருக்காங்க. என்னை வளர்க்கிறது உங்களுக்குப் பயங்கர சோதனை முயற்சியா இருக்கும்னு நினைக்கிறேன். என்னை மறுபடியும் ஆதரவற்றோர் இல்லத்துக்கே அனுப்பிடுறது நல்லது. எனக்கு அது பயங்கரமாத்தான் இருக்கும். என்னால் அதைத் தாங்க முடியும்னு தோணல; அநேகமாக எனக்கு எலும்புருக்கி நோய் வந்துடும். நான் ரொம்ப ஒல்லியா இருக்கேன் பாருங்க. என்னை வளர்க்கிறதுக்கு நீங்க கஷ்டப்படுறதை விட, நான் அங்க போறது நல்லது.”   

“முட்டாள்தனமா பேசாதே; நான் உன்னை அந்த இல்லத்துக்கு திருப்பி அனுப்ப விரும்பல; அதுல நான் உறுதியா இருக்கேன். நான் விரும்புறது என்னன்னா மத்த பொண்ணுங்க மாதிரி நீயும் நடந்துக்கணும்; மத்தவங்க பார்த்துச் சிரிக்கிற மாதிரி நடந்துக்க கூடாது. இது தான் எனக்கு வேணும்.  முதல்ல அழுவுறதை நிப்பாட்டு. உனக்கு ஒரு சேதி சொல்லப் போறேன். இன்று மதியம் டயானா வந்தாள். ஒரு ஸ்கர்ட் மாடல் அவ அம்மாகிட்ட வாங்க அவ வீட்டுக்குப் போறேன். நீயும் என் கூட வந்தால், டயானா கூட பழக்கம் பண்ணிக்கலாம்.”   

சட்டென்று ஆனி எழுந்து நின்றாள். அவள் கையில் இருந்த துண்டு அவள் அறியாமல் கீழே விழுந்தது.

“ஓ! மரிலா. எனக்குப் பயமா இருக்கு. அவளுக்கு என்னைப் பிடிக்காவிட்டால் என்ன செய்றது? அது என் வாழ்வில் மிக சோகமான ஏமாற்றமாய் இருக்கும்.”

“பீதி அடையாதே. டயானாவுக்கு உன்னைப் பிடிக்கும்னு நினைக்கிறேன். அவ அம்மா கிட்ட தான் நீ ஜாக்கிரதையா நடந்துக்கணும். அவங்களுக்கு உன்னைப் பிடிக்கலேன்னா அவ்வளவு தான். டயானாவுக்கு எவ்வளவு பிடிச்சி இருந்தாலும் அவளை உன் கூட சேர விட மாட்டாங்க. திருமதி லிண்டே கிட்ட நீ கோபமா சத்தம் போட்டது பத்தியும், தொப்பியில காட்டுப்பூவை வைச்சிட்டுப் போனதையும் அவங்க கேள்விப்பட்டா அவங்க உன்னைப் பத்தி என்ன நினைப்பாங்கன்னு எனக்குத் தெரியாது. நீ மரியாதையா நல்ல விதமா நடந்துக்கணும்.”

அதைக் கேட்டவுடன் ஆனியின் உடல் நடுங்கியது. பதற்றத்துடன் முகம் வெளிறியது.

“என் கூட நெருங்கிய தோழியா இருக்க போற பொண்ணைப் பார்க்க போறதை நினைச்சு, ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதேசமயம் அவ அம்மாவுக்கு என்னைப் பிடிக்காம போயிடுமோன்னு நினைச்சுப் பயமா இருக்கு.” 

அவர்கள் இருவரும் டயானா வீட்டுக்கு ஓடை வழியாக இருந்த குறுக்கு வழியில் சென்றார்கள். மரிலா கதவைத் தட்டியவுடன் டயானாவின் அம்மா திருமதி பெரி கதவைத் திறந்தார். உயரமாக இருந்த அவரது கண்களும் முடியும், கறுப்பாக இருந்தன. அவர் குழந்தைகளிடம் கண்டிப்பாக இருப்பவர் என்ற பெருமை பெற்றவர்.

“எப்படி இருக்கீங்க மரிலா?” திருமதி பெரி நட்புடன் வரவேற்றார்.

“உள்ளே வாங்க. இவள் நீங்க தத்து எடுத்திருக்கும் பொண்ணுன்னு நினைக்கிறேன்” என்றார்.

“ஆமாம். இவள் ஆனி ஷெர்லி” என்றார் மரிலா.

டயானா சோபாவில் அமர்ந்து புத்தகம் வாசித்துக் கொண்டு இருந்தாள். மரிலாவும், ஆனியும் வீட்டுக்குள் நுழைந்தவுடன் புத்தகத்தைக் கீழே வைத்தாள். அவள் மிக அழகாக இருந்தாள். அவள் அம்மாவைப் போல கறுப்பு முடி, கறுப்புக் கண்கள்! அப்பாவை போல ரோஸ் நிறக் கன்னங்கள்! மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் முகம்!

“இவள் என் குட்டிப் பெண் டயானா” என்றார் திருமது பெரி.

“டயானா! ஆனியைத் தோட்டத்துக்கு அழைச்சிட்டுப் போய்ப் பூக்களைக் காட்டு. புத்தகம் படிச்சிக் கண்ணுக்கு அதிக வேலை கொடுப்பதை விட அது நல்லது.” என்றார் பேரி.

படம் – அப்பு சிவா

அவர்கள் தோட்டத்துக்குப் போன பிறகு, “அவள் அளவுக்கு அதிகமாப் புத்தகம் படிக்கிறாள்; என்னால் தடுக்க முடியலை; அவளுக்கு விளையாட ஆள் கிடைச்சா எனக்கு மகிழ்ச்சி தான். அப்போ தான் அவள் வீட்டை விட்டு வெளியே போவாள்.” என்றார் பெரி மரிலாவிடம்.

டயானா தோட்டத்தைச் சுற்றி வயதான வில்லோ மரங்களும், உயரமான  அத்தி மரங்களும் இருந்தன. மர நிழலில் ஏராளமான பூக்கள் பூத்திருந்தன. ஏராளமான பூச்செடிகளும், குரோட்டன்ஸ் செடிகளும் நிறைந்து இருந்தன. பூக்களைச் சுற்றித் தேனிக்கள் ரீங்காரம் செய்தன.

“ஓ! டயானா!” என்ற ஆனி அவள் கைகளைப் பிடித்துக் கொண்டாள். “என் நெருங்கிய தோழியா இருக்க, உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா?” என்று கேட்டாள்.

“அப்படித் தான் நினைக்கிறேன்.” என்றாள் டயானா சிரித்தபடி.

“நீ பச்சைப் பண்ணை வீட்டுக்கு வந்து இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. எனக்கு விளையாட ஆள் இருந்தால், ஜாலி தான். எனக்குக் கூடப் பிறந்த அக்கா தங்கையும் இல்லை. விளையாட அக்கம் பக்கத்தில் வேறு யாரும் இல்லை” என்றாள் டயானா.

“என் நெருங்கிய தோழியாக எப்போதும் இருப்பேன் என்று சத்தியம் செய்வாயா?” ஆனி கேட்டாள்.

“நீ ஏன் பயங்கரமாகச் சத்தியம் எல்லாம் கேட்கிறாய்?” டயானா அதிர்ச்சியுடன் கேட்டாள்.

“அதில் கெட்ட விஷயம் எதுவும் இல்லை. தோழியாக இருக்க உறுதிமொழி எடுக்க வேண்டும். அவ்வளவு தான்” என்றாள் ஆனி.

“சரி. செய்கிறேன்; அதை எப்படிச் செய்ய வேண்டும்?” என்றாள் டயானா.

“நம் கைகளைச் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். நாம் ஓடும் நீரின் மேல் கை வைக்க வேண்டும்; இந்தப் பாதையில் நீர் ஓடுவதாகக் கற்பனை செய்து கொள்வோம்; நான் உறுதிமொழியை முதலில் சொல்கிறேன்; அதை நீ திருப்பிச் சொல். சூரியனும் சந்திரனும் இருக்கும் வரை நான் நெருங்கிய தோழி டயானாவுக்கு உண்மையாக இருப்பதாகச் சத்தியம் செய்கிறேன்; நான் சொன்னது போல நீயும் சொல்லிவிட்டு என் பெயரைச் சொல்.” என்றாள் ஆனி.

டயானாவும் சிரித்துவிட்டு, ஆனி சொன்னது போலச் சொன்னாள்.

“நீ ஒரு விசித்திரமான பொண்ணு. ஏற்கெனவே உன்னைப் பத்தி கேள்விப்பட்டேன். ஆனால் உன்னை எனக்குப் பிடிக்கும்னு நம்புறேன்.” என்றாள் டயானா. இரண்டு பெண்களும் கைகளைக் கோர்த்தபடி நடந்தார்கள்.  மரிலாவும் ஆனியும் வீட்டுக்குத் திரும்பினர்.

“டயானாவை உனக்குப் பிடிச்சிருக்கா? மரிலா கேட்டார்.

“ஆமாம். இந்த நிமிடத்தில் இந்தத் தீவில் நான் தான் மிகவும் மகிழ்ச்சியான பெண்.” என்றாள் ஆனி.

அவள் மகிழ்ச்சியை அதிகப்படுத்துவது போல் மாத்யூ ஒரு சாக்லேட் நிரம்பிய பொட்டலத்தைக் கொடுத்தார்.

“உனக்கு சாக்லேட் பிடிக்கும் என்று வாங்கி வந்தேன்.” என்றார் மாத்யூ.  

“எல்லா சாக்லெட்டையும் உடனே தின்னாதே. உன் பல்லுக்கும் வயிற்றுக்கும் ஆகாது” என்றார் மரிலா. 

“இல்லை. எல்லாவற்றையும் தின்ன மாட்டேன். இன்று இரவு ஒன்று மட்டும் தின்கிறேன். பாதியை டயானாவுக்குக் கொடுக்கலாமா? அவளுக்குக் கொடுக்க என்னிடம் ஒரு பொருள் இருக்கிறது என்ற நினைப்பே மகிழ்ச்சியைத் தருகிறது” என்றாள் ஆனி.

ஆனி அங்கிருந்து போன பின், மரிலா மாத்யூவிடம் கூறினார்:-

“நல்லவேளை ஆனியிடம் கஞ்சத்தனம் இல்லை. அவள் வந்து மூன்று வாரம் தான் ஆகிறது. ஆனால் அவள் எப்போதும் இங்கேயே இருப்பதாகத் தோன்றுகிறது. அவள் இல்லாத இந்த இடத்தை என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அந்தக் குழந்தையை இங்கே வைத்துக் கொண்டதிலும், அவள் மீது பாசம் அதிகம் ஆவதிலும் எனக்கு மகிழ்ச்சி.”

ஞா. கலையரசி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *