ஸ்பேசில் ஒரு நாள்..

ஒரு கிராமத்தில் ஒரு நாள் ஸ்பேஸ் எக்ஸ்போ என்று ஒரு விழா அங்கிருந்த மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் நடந்து கொண்டிருந்தது. ஏழாம் வகுப்பு படிக்கும் அமுதன் மற்றும் நிலவன் இருவரும் அந்த விழாவுக்கு சென்றிருந்தார்கள்.

அங்கு ஒரு ஸ்பேஸ் ஷட்டில் ஒன்று இருந்தது. அதற்குள் அமுதனும் நிலவனும் சென்றார்கள். அந்த ஷட்டில் பார்ப்பதற்கு விமானம் போல இருந்தது. இருவர் அமர்வதற்கு இருக்கைகளும் அந்த இருக்கைகளின் முன்னால் பல வண்ணங்களில் பட்டன்களும் இருந்தன. இருவரம் அந்த இருக்கைகளில் அமர்ந்து கொண்டு விமானம் ஓட்டுவது போல கையை ஆட்டி குதூகலித்தார்கள். அப்போது நிலவன்,

“என்ன பச்ச கலர்ல பட்டன் இருக்கு?” என்று கேட்டுக்கொண்டே அதை அழுத்தி விட்டான்.

உடனே அந்த ஸ்பேஸ் ஷட்டில் உயிர் பெற்றுக் கிளம்பி விண்ணில் பறக்கத் தொடங்கியது.

இதைக் கண்டு நிலவன் பயந்து போனான். அமுதனும்,

“எதுக்குடா அதப் போய் அழுத்தின?” என்று கேட்டான்.

அதற்கு நிலவன்,

“சாரி.. சாரிடா.. தெரியாம அழுத்திட்டேன்..” என்றான்.

இருவரும் என்ன செய்வது என்று புரியாமல் திகைத்தார்கள்.

அங்கிருந்த சிவப்பு பட்டனை அழுத்தி அதை நிறுத்தவும் முயன்றார்கள்.

ஆனால் ஸ்பேஸ் ஷட்டில் நிற்கவேயில்லை.

இருவரும் பயந்தபடி அதில் அமர்ந்திருந்தார்கள்.

அரை மணி நேரம் கழித்து அந்த ஸ்பேஸ் ஷட்டில் ஒரு கிரகத்தில் நின்றது.

“ஏய் நிலவா! ஷட்டில் நின்னுடுச்சு.. வா! நம்ம வீட்டுக்கு போயிடலாம்..” என்று கூறிக் கொண்டே எழுந்து கொள்ள முயன்றான்.

ஆனால் அவனால் எழுந்து நிற்க முடியவில்லை. அவன் பறக்கத் தொடங்கினான்.

“ஐயியோ! என்ன இது? என்னால நிக்க முடியல?” என்று அலறினான்.

நிலவன் உடனே,

“நம்ம ஸ்பேஸ்க்கு வந்திருக்கோம் போலிருக்கு.. முதல்ல ஸ்பேஸ் சூட்டை போடு!” என்றான்.

இருவரும் ஸ்பேஸ் சூட்டைப் போட்டுக் கொண்டு அந்த ஷட்டிலின் கதவைத் திறந்து கொண்டு இறங்கினார்கள்.

அது பூமி இல்லை! வேறு ஒரு கிரகம் என்று அவர்களுக்குப் புரிந்தது.

இருவரும் அந்த கிரகத்தில் தங்கள் வந்த அந்த ஸ்பேஸ் ஷட்டிலைச் சுற்றி வந்து அதிசயமாகப் பார்த்தார்கள்.

“நம்ம ஏதோ ஒரு கிரகத்தில வந்து இறங்கியிருக்கோம் போலிருக்குடா..” என்று அமுதன் கேட்க,

“ஆமாடா! இப்ப எப்டி நம்ம பூமிக்கு திரும்பி போறது?” என்று கேட்டான் நிலவன்.

“திரும்பியும் நம்ம அந்த பச்ச பட்டனை அழுத்தி பாக்கலாம்.. வா!” என்று கூறி மீண்டும் ஷட்டிலுக்குள் போக முயற்சித்தார்கள்.

ஆனால் அந்த ஸ்பேஸ் ஷட்டிலில் ஏதோ கோளாறு ஏற்பட்டு அது அணைந்து விட்டது. அதன் கதவை அவர்களால் திறக்க முடியவில்லை. அவர்களுக்கு என்ன தெசய்து அதை திறக்க வேண்டும் என்றும் தெரியவில்லை.

“ஐயியோ! நம்ம இங்க மாட்டிகிட்டோம்டா!” என்று இருவரும் பேசிக் கொண்டார்கள்.

அப்போது அங்கு இரண்டு ஏலியன்கள் வந்தார்கள். ஏலியன்களைப் பார்த்த இருவரும் பயந்து போனார்கள்.

படம் – அப்பு சிவா

“எங்கள ஒண்ணும் செஞ்சிடாதீங்க.. நாங்க இங்க தெரியாம வந்துட்டோம். எங்களுக்கு இந்த ஷட்டிலை எப்டி தொறக்கணும்று தெரீல..” என்று அழுதுகொண்டே கடகடவென்று அவசரமாகக் கூறி அலறினார்கள்.

அதற்கு அந்த ஏலியன்கள்,

“பயப்படாதீங்க! நாங்க உங்களை ஒன்றும் செய்ய மாட்டோம்.” என்று கூறின.

“ஏய்! தமிழ்ல பேசறாங்கடா!” என்று நிலவனும் அமுதனும் அதிசயமாகப் பார்த்தார்கள்.

“ஆமா! எங்களுக்கு உங்களுடைய மொழியும் நல்லா பேச தெரியும்.” என்றார்கள் அந்த ஏலியன்கள்.

“நீங்க ரொம்ப களைப்பா இருப்பீங்க. எங்க கூட வந்து சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க.. உங்க ஸ்பேஸ் ஷட்டில்ல சின்ன பிரச்சனை வந்திருக்கு. அத நாங்க சரி பண்ணி தரோம்..” என்று கூறி அவர்களைத் தங்களின் மாளிகைக்கு அழைத்து சென்றார்கள்.

நிலவனுக்கும் அமுதனுக்கும் வியப்பான வியப்பு.

இருவரும் எல்லாவற்றையும் அதிசயமாப் பார்த்தபடி அவர்களின் மாளிகையை சுற்றிப் பார்த்தார்கள்.

அவர்கள் சாப்பிடுவதற்கு பழங்களும் பழச்சாறுகளையும் கொடுத்து அவர்களை நன்றாக உபசரித்தார்கள்.

நிலவனும் அமுதனும் ஏற்கனவே பசியாக இருந்ததால் அந்த ஏலியன்கள் கொடுத்தை மறுக்காமல் வாங்கி உண்டார்கள்.

“இப்ப நீங்க ரெஸ்ட் எடுங்க. நாங்க உங்க ஷட்டிலை ரிப்பேர் செய்யறோம்..” என்றார்கள் ஏலியன்கள்.

நிலவனும் அமுதனும், “சரி!” என்று கூறி உள்ளே சென்று நன்றாகத் தூங்கி விட்டார்கள். சுமார் இரண்டு மணி நேரம் அவர்கள் இருவரும் நன்றாகத் தூங்கி எழுந்து வெளியே வந்தார்கள்.

“உங்களது ஸ்பேஸ் ஷட்டில் தயாராகி விட்டது. இப்பொழுது நீங்கள் உங்கள் கிரகத்துக்கு செல்லலாம்.” என்று அந்த ஏலியன்கள் சொன்னார்கள்.

அமுதனும் நிலவனும் அங்கிருந்து கிளம்பினார்கள். கிளம்பும் முன் இருவருக்கும் அந்த ஸ்பேஸ் ஷட்டிலை எப்படி பயன்படுத்த வேண்டும். மீண்டும் ரிப்பேர் ஆனால் அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்றும் சொல்லித் தந்தார்கள்.

நிலவனும் அமுதனும், அந்த ஏலியன்களுக்கு நன்றி கூறினார்கள்.

அதன் பிறகு இருவரும் அந்த ஸ்பேஸ் ஷட்டிலில் ஏறி அமர்ந்து கொண்டு பூமிக்கு வந்து சேர்ந்தார்கள்.

யாருக்கும் தெரியாமல் ஷட்டிலை நிறுத்திவிட்டு இருவரும் ஊருக்குள் சென்றார்கள்.

வீட்டுக்கு வந்து, தங்கள் அம்மாவிடம் ஓடிச்சென்று அணைத்து கொண்டார்கள்.

“இவ்ளோ நேரம் எங்கடா போனீங்க? நாங்க எவ்ளோ பயந்துட்டோம் தெரியுமா?” என்று அம்மா கவலையுடன் கேட்க, இருவரும் நடந்த கதை எல்லாம் அம்மாவிடமும் நண்பர்களிடமும் சொன்னார்கள்.

எல்லாரும் அவர்கள் கூறியதை வியப்பாகப் பார்த்தார்கள்.

இருவரும்,

“அங்க நடந்தத நாங்க எப்பவுமே மறக்க மாட்டோம்.” என்றார்கள்.

நன்றி.

பி. நீநிகா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *