ஓவியத்தொடர்-12
ஹாய் குட்டீஸ்…
இந்த பகுதியில் நாம் பார்க்கப்போவது, பாடல்களுக்கு பழந்தமிழ் இலக்கியங்களுக்கு படம் வரைவது பற்றி.
ஏற்கனவே ஒரு கட்டுரையில் கதைகளுக்கு படம் வரைவது பற்றி பேசியிருக்கோம் இல்லையா. இதுவும் அதே போலத்தான். ஆனா சின்ன வித்தியாசம் இருக்கு. நிகழ்கால கதைகள் அப்படின்னா, இப்போதைய வீடு, உடைகள் வாகனங்கள் அப்படி ஈசியா மாடல் பாத்து வரைஞ்சுடலாம். பழைய இலக்கியங்களுக்கு அதுபோல எளிதாக வரைஞ்சுட முடியாது.
இதை இரண்டு வகையா பிரிச்சுக்கலாம்.
- செய்யுளில் சொல்லப்பட்டதை அப்படியே வரைவது.
- அதோட கருத்தை மனதில் வைத்து நாமாக ஒன்றை, அந்த கருத்தை பிரதிபலிப்பது போல வரைவது.
முதலில் பழந்தமிழ் இலக்கியங்கள் அப்படீன்னா என்ன தோணுது? நாம் பள்ளியில் மனப்பாட செய்யுள் வைப்பாங்க இல்லையா (உடனே அச்சோ… னு பயப்படாதீங்க), அதுதான் நம்ம பழைய இலக்கியம். இதில் பல ஆயிரம் பாடல்கள் உண்டு. அப்போ எல்லாம் உரைநடை கிடையாது. எல்லாமே பாடல் வடிவம்தான். உண்மையில் நமக்கு கிடைத்தவை கொஞ்சம்தான். அப்போது எல்லாம் ஓலைச்சுவடியில்தான் எழுதி குவிச்சாங்க. காலப்போக்கில் நெறய அழிஞ்சுபோச்சு. மிச்சம் மீதினு நமக்கு கிடைத்தவையே கிட்டத்தட்ட புதையல் போலத்தான்.
இதை படிக்க எளிதாக தற்காலத்தில் வகைப்படுத்தியிருக்காங்க. புறம் அப்படீன்னு ஒரு வகை. புற வாழ்வுதான் இதன் அர்த்தம். இது மனிதர்களின் வாழ்வு முறை, நகர அமைப்பு, ராஜாக்களின் ஆட்சி முறை, போர்கள், அரசியல், துறவு இப்படி பலவகையான மனித வாழ்வியல் எழுதப்பட்டிருக்கும். ம்னிதர்களின் மனதில் இருக்கும் கோபம், அன்பு, பாசம் இதுபோன்ற உணர்வுகலை அகம் சார்ந்த பாடல்கள் பேசும்.
ரைட்டா… ? சரி, இதை ஏன் படிக்கணும்? எப்படி படிக்க?
அந்த செய்யுள்கள் பழைய தமிழில் இருக்கும். நமக்கு அவ்வளவாக புரியாது. ஆனால் தற்காலத்து தமிழில் நிறைய உரைநூல்கள் இருப்பது ஒரு அதிர்ஷ்டம்தான். அந்த உரைகளை கையில் வச்சுகிட்டு செய்யுள்களை படிக்கலாம். புறநானூறு, அகநானூறு, நாலடியார், சிலப்பதிகாரம், மணிமேகலை இப்படி காப்பியங்களும் செய்யுள்களும் படித்தால் நமது கற்பனை பழையகாலத்துக்கே போகும். முக்கியமா வரைய பலவிதங்களில் நமக்கு உதவும் வகையில் காட்சிகளை அப்படியே வர்ணிச்சிருப்பாங்க. காடுகள், மலைகள் அங்கே இருக்கும் விலங்குகள், உணவு வகைகள், மரங்கள், முக்கியமா பூக்கள் அப்புறம் காலநிலைகள் இயற்கையின் அவ்வளவும் நமக்கு புதிய பார்வையில் விவரிச்சிருப்பாங்க.
உதாரணமா இந்த நற்றிணை பாடலைப் பாருங்க
(நற்றிணை 14 : தொல்கவின் தொலைய தோள் நலம் சாஅய
நல்கார் நீத்தனர் ஆயினும் நல்குவர்)

விளக்கம்: காந்தள் மலர் பூத்திருக்கும் மலைச்சாரலில் ஓர் ஆண் யானையை மிகப்பெரிய மலைப்பாம்பு பற்றிக்கொண்டது. அதைக்கண்ட பெண் யானை பிளிருகிறது. இது போன்ற சம்பவங்கள் நிகழுவதாயும், கொடிய விலங்குகள் நிறைந்தும் இருக்கும் காட்டை கடந்து, கணவர் வேலைக்கு சென்று வருகிறார். மனைவி கவலையாக காத்திருக்கிறார்.
புரியுதா? இது ஒரு சின்ன உதாரணம்தான்.
நீங்க ஏதாவது ஒரு செய்யுளை உரையுடன் எடுத்துக்கோங்க. உங்க பெற்றோர் உதவினால் இன்னும் நல்லது. அதை படிச்சு அதில் சொல்லப்பட்டவைகளுக்கு நோட்ஸ் எடுங்க. உதாரணமா இன்ன மரம், இந்த காலம், இந்த வகையான பூ இப்படி அந்த குறிப்புகள் இருக்கும். அப்புறம் அந்த செய்யுளில் சொன்னது போலவே காட்சியை வரையவும். அழகான சங்க கால காட்சியை நீங்க வரைஞ்சிருப்பீங்க.
இப்போ அடுத்த வகையை பார்க்கலாம்.
இது அந்த செய்யுளைப்படித்து அதன் கருத்தை, சொல்லவந்த விஷயத்தை தற்காலத்துக்கும் ஏற்ற மாதிரி வரைவது. இதற்கு நாம் திருக்குறளை எடுத்துக்கலாம். அதில்தான் நிறைய கருத்துகள் இருக்கு. இன்னும் சொல்லபோனா குறளில் சொல்லாத கருத்தே இல்லை என்றும் சொல்லலாம்.
(குறள் 393 : கண்ணுடையவர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையவர் கல்லாதவர்)
இதில் கல்வி என்பது மனிதனின் கண் போன்றது அப்படின்னு வள்ளுவர் எழுதியிருக்கிறார். அதாவது உலகை காண அறிவான பார்வை வேண்டும். நல்ல கல்வி அறிவு கொண்டவர்களால் உலகின் நல்லது கெட்டது எல்லாம் ஆராய்ந்து பார்க்கமுடியும். கல்வி அறிவு இல்லாதவருக்கு கண் இருந்தும் அது வெறும் புண் போன்றது அப்படின்னு சொல்றார்.
இதற்கு வரைந்த படத்தை பாருங்க…

நல்ல புத்தகம் படித்தவருக்கு பார்வை இருப்பது போலவும், புத்தகத்தை திருப்பி போட்டு (அதில் சிலந்தி வலை கட்டியிருக்கு பாருங்க) சும்மா இருப்பவருக்கு கண்ணே இல்லாதது போலவும் வரைந்தேன். இதுவும் ஒரு உதாரணம்தான். இன்னமும் உங்க கற்பனைக்கு ஏற்ப மாத்தியும் வரையலாம்.
சில உதாரண ஓவியங்களை கீழே பாருங்க…



கீழே கொடுக்கப்பட்ட படங்களைப் பார்த்து அவை எந்த குறள்னு கமெண்ட் பண்ணுங்க பார்க்கலாம்.






தொடரும்…