பிரசித்தி பெற்ற ‘சென்னை ஆர்ட் அகெடமி’ நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி இன்று தான் நடை பெறுகிறது.
பெருந்திரளான மாணவ மாணவிகள் அரங்கின் முன் மண்டபத்தில் காத்துக் கொண்டு இருந்தனர்.
போட்டியில் கலந்து கொள்ள அப்பாவுடன் வந்திருந்தாள் சஷ்டிகா . அவள் அரங்கில் நுழைந்த பின் தான் கிளம்பிச் செல்வதாகச் சொல்லி இருந்தார் அப்பா.
அரங்கின் கதவுகள் திறக்கப்படுவதற்கான அறிகுறிகள் தெரிந்தவுடன், ஆங்காங்கே நின்றிருந்த போட்டியாளர்கள் கதவருகே குமியத் தொடங்கினர்.
சஷ்டிகா ஓட்டமும் நடையுமாக கதவருகே சென்றாள். இன்னொரு பெண் பாய்ந்து குதித்து வந்தாள். சஷ்டிகா கவனமாக இல்லை என்றால் நிலை தடுமாறி விழுந்திருப்பாள்.
“ஷ்! ‘ என்று முகம் சுழித்து தன் அசூயையை வெளிக்காட்டினாள் சஷ்டிகா.
“எதுக்கு இப்படி இடிச்சுகிட்டு போகணும். போட்டியாளர் அடையாள அட்டையிலேயே இருக்கை எண் கொடுத்து இருக்காங்க. போட்டி துவங்க இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு.” எனச் சிடுசிடுத்தாள் சஷ்டிகா.
”ஆஹா! வந்துட்டாங்க அமைதிப் பூங்குயில்.” என நறுக்கெனப் பேசினாள் சஷ்டிகாவை இடித்த பெண், ”அப்பிடியே ஓரமாப் போய் நின்னுட்டு, நாளைக்கி உள்ள வரதுதான! நீ மட்டும் வரலாம். பாக்கி பேர் வரக்கூடாதா?”
அவளது அடையாள அட்டையில் சுபாஷிணி என அவள் பேர் இருந்தது.
“யாரும் வரக்கூடாதுன்னு நா சொல்லல. முண்டி அடிச்சுகிட்டு, இன்னொருத்தரைத் தள்ளிவிட்டு, இடிச்சுகிட்டுப் போக வேண்டாம்ன்னு தான் சொல்றேன்.”
அதற்குள் அகெடமியின் தன்னார்வலர்கள் வந்து போட்டியாளர்களை வரிசைப்படுத்தினார்கள். நேர்த்தியாக ஒவ்வொருவராக உள்ளே அனுப்பினார்கள்.
சஷ்டிகா முதலில் உள்ளே சென்று தன் இருக்கையில் அமர்ந்து விட்டாள்.
அதன் பின் தான், சுபாஷிணி வந்தாள். அவளது இருக்கை சஷ்டிகாவின் பக்கத்தில் தான்.
சஷ்டிகாவைத் தாண்டிச் செல்லும் போது, வேண்டுமென்றே, சுபாஷினி மேசை மேல் வைத்திருந்த சஷ்டிகாவின் பென்சில் மட்டும் வண்ணக் குப்பிகளைத் தட்டி விட்டாள்.
”சே! வேணும்ன்னு தான இப்படி பண்ணுற! வெரி பேட்!” என்றாள் சஷ்டிகா.
உதட்டைப் பிதுக்கிக் கொண்டு, கண்களை உருட்டி வேறு எங்கோ பார்ப்பது போல தலையைத் திருப்பிக் கொண்டு, ஒரு நக்கல் சிரிப்புடன் தன் இருக்கையில் அமர்ந்தாள் சுபாஷிணி.
கீழே விழுந்த தன் பொருட்களைப் பொறுக்கி எடுத்தாள் சஷ்டிகா.
”நீங்கள் ரசித்த இயற்கைக் காட்சி” என்பது தான் கொடுக்கப்பட்ட தலைப்பு.
ஒரு நீர்நிலையின் அருகில் ஒரு அழகிய பெண். அவளது பிம்பமும், நிலவும், சுற்றியுள்ள மரங்களின் கிளைகளின் நிழலும், சற்று தூரத்தில் ஒரு பரிசிலும் என மிக மிக அற்புதமாக தன் ஓவியத்தை வரைந்திருந்தாள் சுபாஷிணி.
சஷ்டிகா அந்த ஓவியத்தைப் பார்த்து வியந்தாள்.

சஷ்டிகா தன்னைப் பார்ப்பதை உணர்ந்த சுபாஷிணி ஒரு எரிச்சலான பாவத்துடன் தன் தலையைத் திருப்பி சஷ்டிகாவைப் பார்த்தாள்.
“சூப்பர் ! சுபாஷிணி ! அற்புதம் ! கண்டிப்பா பரிசு கிடைக்கும்” என்றாள் சஷ்டிகா.
சுபாஷிணியின் முகம் மலர்ந்தது. “தேங்ஸ்” என்றாள்.
சஷ்டிகாவும் அழகான மலைக்காட்சியை வரைந்திருந்தாள். நீண்டுயர்ந்த சிகரங்கள், வழிந்தோடும் அருவிகள், மலைகள், புல்வெளிகள், கொஞ்சும் மேகங்கள் !
“உன் ஓவியமும் சூப்பரா இருக்கு..”
”என் பேரு.. சஷ்டிகா”
போட்டி முடிய இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன.
போட்டியாளர்கள் தங்கள் ஓவியத்தைப் பார்த்துப் பார்த்து செம்மைப் படுத்திக் கொண்டிருந்தனர்.
சுபாஷிணியின் முகம் தீடிரெனக் கருத்தது. கீழும், அருகிலும் குனிந்து எதையோ தேடினாள். “உஸ்” என உச்சுக் கொட்டினாள்.
“என்ன தேடுற சுபாஷி?”
”என்னோட அடர் நீல வண்ணப் பென்சில் காணோம் சஷ்டிகா”
“இந்தா என்னோடத எடுத்துக்கோ” சஷ்டிகா தனது பெட்டியை அவளிடம் நகர்த்தினாள்.
அவர்களது கடைசி நொடி அழகுபடுத்தலுக்கு இருவரும் ஒரே பெட்டியில் இருந்து வண்ணங்களை எடுத்து உபயோகித்துக் கொண்டு இருந்தனர்.
போட்டி முடிந்து இருவரும் ஒன்றாக வெளியே வந்தனர்.
“அம்மா! நல்லா வரைஞ்சு இருக்கேம்மா! “ என்றாள் சுபாஷிணி அவள் அம்மாவிடம்.
“ஆமா ஆண்ட்டி! சூப்பரா இருக்கு சுபாஷிணி ஓவியம்.” என்றாள் சஷ்டிகா.
“அம்மா ! சஷ்டிகா உதவினதாலத் தான் நான் நல்லா வரைஞ்சேன். என்கிட்ட இல்லாத ஒரு வண்ணம் அவகிட்ட இருக்கு” என்றாள் சுபாஷிணி.
“உன்கிட்ட இல்லாத வண்ணமா? என்னம்மா அது? எங்க கிடைக்கும் அது?”
“அது நல்லதைப் பாராட்டும் நட்பு வண்ணம் ! ”என்றாள் சுபாஷிணி.
“ஆஹா! ஓவியத்தில மட்டும் இல்ல, பேசுறதிலயும் உன் வண்ணம் ஜொலிக்குதே!” எனச் சிரித்தாள் சஷ்டிகா.
கமலா முரளி