உயிர்களிடத்து அன்பு வேணும் – சிறுவர் கதைகள்
தொகுப்பும், மொழிபெயர்ப்பும் – யூமா வாசுகி
வெளியீடு:- எஸ்.ஆர்.வி.தமிழ்ப் பதிப்பகம், சமயபுரம், திருச்சி
விலை:- ₹160/-
இத்தொகுப்பில் 12 கதைகள் உள்ளன. நல்லது செய்தால், நல்லது நடக்கும்; ஆரம்பத்தில் கஷ்டப்பட்டாலும், பின்னர் இன்பமாக வாழலாம்; கருமியாக இல்லாமல், பிறருக்கு உதவ வேண்டும் போன்ற அறநெறிகளையும், நல்ல எண்ணங்களையும், சிறுவர் மனதில் விதைக்கும் பல கதைகள், இதில் உள்ளன.
‘ஒவ்வொருவருக்கும் இயற்கையாய் இருக்கும் நிறமே, அழகு; நிறத்தில் உயர்வு, தாழ்வு ஏதுமில்லை; கறுப்பு மட்டமான நிறமில்லை’ என்ற கருத்தைக் குழந்தைகள் மனதில் பதிக்கும் கதை, ‘நிறம் மாறிய காகம்’
‘பூமி மனிதனுக்கு மட்டுமே சொந்தமில்லை; எல்லா உயிர்க்குமானது; இயற்கையை நேசித்துக் காக்க வேண்டும்; எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும்,’ என்ற உயரிய கருத்தைக் குழந்தைகள் மனதில் விதைக்கும் கதை, ‘உயிர்களிடத்து அன்பு வேணும்.’
குழந்தைகள் எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடிய நீதிக்கதைகள். தரமான வழுவழுப்பான தாளில், கதைகளுக்கேற்ற வண்ண ஓவியங்கள் கொண்ட அழகான நூல். ஐந்து முதல் பனிரெண்டு வயதினர்க்கானது. அவசியம் இந்நூலை வாங்கிக் கொடுத்துச் சிறுவர்களை வாசிக்க செய்யுங்கள்.