என்ன பூஞ்சிட்டூஸ்… கடந்த பத்துநாளா புயல் மழைன்னு நம்மை எல்லாரையும் ஒரு புரட்டிப் புரட்டி எடுத்துருச்சுல… ?!
அதுலயும் குளிர்.. அப்பப்ப்பா.. ஊரே ஊட்டி மாதிரி ஆகிருச்சுல..!
நம்ம ஊரே ஊட்டி மாதிரி ஜில்லுனு இருந்துச்சுன்னா ஊட்டி எப்படி ஆகியிருக்கும்!
ஊட்டிக்குப் போனா மட்டுமில்ல.. ஊட்டின்னு நினைச்சாலே ஜில்லுனு ஐஸ்க்ரீம் ஆகிறது மனசு.
ஆமா, குளுகுளு ஜிலுஜிலு ஊட்டிக்கு எப்படி ஊட்டின்னு பேர் வந்திருக்கும் ?
கதை கேட்டுட்டாப் போச்சு!
கதை கதையாம் காரணத்துல இந்த மாதம் நாம தெரிஞ்சுக்கப்போற ஊரு ஊட்டி.
“மலைகளின் அரசி”ன்னு எல்லாராலயும் செல்லமாக அழைக்கப்படுற ஊட்டியோட முழுப்பேரு உதகமண்டலம். அது சுருங்கி மருவி இன்னைக்கு ஊட்டி ஆகிருச்சு.. ஆனா உதகமண்டலம்’ங்கிற பேறே ஒரு மரூஉ தான். எப்படின்னு கேக்கறீங்களா ?
ரொம்ப வருடங்கள் முன்னாடி, மழை வாழ் மக்கள் அதிகமா வாழுற இடமா இருந்த ஊட்டில தோடை இன மக்கள் அதிகமா வசிச்சாங்க. தோடை இன மொழில மந்தை அப்படின்னா கிராமம்ன்னு அர்த்தமாம். அப்போ இருந்த ஊட்டி கிராமம் , “ஒத்தைக்கல் மந்தை” அல்லது ஹோக்கத்தல் மந்தை’ ன்னு மலைவாழ் மக்களால அழைக்கப்பட்டு, காலப்போக்கில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்துல பேச்சு வழக்காக “ஊட்டக்கல்” ஆகி ஒரு வழியாக 1972க்கு பிறகு “உதக மண்டலம்” ஆகிருச்சு.
முதலாம் நூற்றண்டு வரைக்கும் ஹோசல ராஜ்யத்துக்குட்பட்டிருந்த உதக மண்டலம் அதுக்கு அப்புறம் திப்பு சுல்தான் ஆட்சிக்குக் கீழ வந்து, 18ம் நூற்றாண்டு வாக்குல ஆங்கிலேயர் ஆட்சிக்குள்ள வந்தது.
அப்போ மாவட்ட ஆட்சியரா இருந்த ஜான் சல்லிவன் அவர்களிடம் உதக மணடலத்தோட இயற்கை வளத்தைப் பத்தி ஒரு விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கப்படுது. ஐரோப்பாவில் இருக்கும் சுவிட்ஸர்லாந்து போல மற்ற எந்த ஊரிலும் இல்லாத அளவிற்கு இங்கே தமிழகத்துல இயற்கை வளம், மலை வளம்ன்னு நிரம்பிய இடமா உதக மண்டலம் இருக்கிறதுன்னு அந்த அறிக்கைல குறிப்பிடப்படுது. அதன் பிறகு, உதகமண்டலத்துக்கான சாலை வசதி, குன்னூர் ரயில் பாதை வசதின்னு அமைச்சு உலகின் பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் வரும் ஒரு தலைசிறந்த சுற்றுலாத்தலமாக மாறியது ஊட்டி. அதுமட்டுமில்ல ப்ரிட்டிஷ் ஆட்சிக் காலத்துல ஊட்டி கோடைக்கால தலைநகரமா இயங்கியிருக்கு. அதாவது கொளுத்தியெடுக்கிற சென்னை வெயிலைத் தாக்குபிடிக்க முடியாத ஆங்கிலேயர்கள் கோடைக்காலத்துல அவங்க அலுவலகத்த அலேக்கா தூக்கி ஊட்டிக்கு மாத்திடுவாங்களாம்!! நமக்கும் இந்த மாதிரி வெயில் அடிக்கும் போது பள்ளி கல்லூரியெல்லாம் ஊட்டிக்கு மாத்திக்கிட்டா ஜோரா இருக்கும்ல?!
குட்டீஸ், ஊட்டில இருக்கிற நீலகிரி ரயில் பாதை, வருடா வருடம் நடைபெறும் மலர்க்கண்காட்சி, படகு சவாரி எல்லாம் உலகப்புகழ் பெற்றது. தவிர ஊட்டில ஏகப்பட்ட திரைப்படங்களுக்கான காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கு.
ஊட்டியோட அழகே அதோட பச்சை பசேல் மலைக்காடுகளும், ஏரிகளும், தேயிலைத் தோட்டங்களும் தான்..
இதோ ஊட்டியோட கண்கவர் படத்தொகுப்பு உங்களுக்காக :




என்ன சிட்டூஸ் எப்போ ஊட்டி போகலாம்ன்னு திட்டம் போடுறீங்களா?